
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருஆயர்பாடியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள்(ஹரி) மற்றும் அகத்தீஸ்வரர் (ஹரன்) எம்பெருமான் இருவரும் சந்திக்கும் அரிய “ஹரி ஹரன் சந்திப்பு” மிகவும் விசேஷமான நிகழ்வாகும்.
இந்தியாவிலேயே பொன்னேரியில் மட்டுமே இந்த ஹரி ஹரன் சந்திப்பு விழா மிகவும் கோலாகலமாக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும்
. இவ்விழாவில் கரி கிருஷ்ண பெருமாளிடம் இருந்து அகத்தீஸ்வரருக்கும், அகத்தீஸ்வரரிடம் இருந்து கரி கிருஷ்ண பெருமாளுக்குச் சீர்வரிசை மாலைகள் பரிமாறிக்கொள்ளப்படும்.
புராணத்தில் "ஹரி ஹரன் சந்திப்பு
பரத்வாஜ மகரிஷி மற்றும் அகத்தியர் மகரிஷி இருவரும் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவை ஒரே நேரத்தில் தரிசிக்க வேண்டும் என ஆரணிய நதியில் தவம் இருந்ததால் சிவன் 'அகத்தீஸ்வரராகவும்', விஷ்ணு 'கரிகிருஷ்ண பெருமாளாகவும்' இங்கே காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இரு தெய்வங்களும் ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொள்வர். இது பக்தர்களுக்கு "அரியும் சிவனும் ஒன்று" என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

சித்திரை பிரம்மோற்சவ விழாவில் "ஹரிஹரன் சந்திப்பு"

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணியாற்றின் கரையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலைச் சோழ மன்னன் கரிகாலன் கட்டியதால் இக்கோயிலுக்குக் கரி கிருஷ்ண பெருமாள் கோயில் என்று பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் குழந்தை வரம் அளிக்கும் பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள சுயம்பு கிருஷ்ணர் சாய்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரம்மோற்சவ விழாவானது வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா மே 1, 2026 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

நாள்தோறும் இங்குப் பெருமாள் காலை, மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்க இந்த திருவிழாவின் போது காலை மாலை என 5 கிமீ மாடவீதிகளில் சென்று வருகிறார். உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய மாடவீதி கிடையாது.

இதனைத் தொடர்ந்து மே 5- ஆம் தேதி, கருடோற்சவம் அன்று கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ணபெருமாள், ஹரிஹரன் பஜார் வீதியில், (ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிரீன்வேல்பேட்டை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, ஹரி-ஹரன் சந்திப்பால் 'ஹரிஹரன் பஜார்' எனப் பெயர் பெற்றது) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ மகரிஷிகளின் முன்னிலையில் சந்தித்து ஒருசேரப் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

கரி கிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் நேருக்கு நேர் சந்திக்கும் "ஹரிஹரன் சந்திப்பு" எனப்படும் இந்த வைபவம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க, அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு பட்டாச்சாரியர்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டன. வாண வேடிக்கைகள் பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்தன.

இந்த அரிய நிகழ்வைக் காணத் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா" "கோவிந்தா" எனவும் "ஓம் நமசிவாய" எனவும் பக்தி பரவசத்தோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மற்றும் மே 7, 2026 அன்று திருத்தேர் திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 7.30 மணி முதல் 10.30 வரை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 35 கி.மீ வடக்கே, கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில் பொன்னேரி உள்ளது. இந்த கோயில், பொன்னேரி இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் திருஆயர்பாடியில் அமைந்துள்ளது. ஆட்டோ மூலமும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.

உலகில் வேறு எங்கும் நிகழாத ஹரி ஹரன் சந்திப்பு , தேர்திருவிழா பிரமோற்சவத்திற்கு சென்று இறைவனின் அருளை பெறுவோம்.

அரியும் அறனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்…!

Leave a comment
Upload