பொது
கொரோனா பரிதாபம்! மாலாஸ்ரீ

20200401211612461.jpeg

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவினால் பாதித்த மனைவி இறந்த 5 மணி நேரத்துக்குள், அதே மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற கணவரும் மரணமடைந்தார்.


இங்கிலாந்தின் சவுத் ஹாம்டன் ஏரியாவில் வசிப்பவர்கள் பில் டார்ட்னல் (91) மர்றும் அவரது மனைவி மேரி (81). இவர்கள் இருவரும் 70 ஆண்டுகளுக்கு முன் காதலித்து கடந்த 1950-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு, தாம்பத்திய வாழ்க்கையை சிறப்புற நடத்தி வந்தனர். இவர்களுக்கு ரோஸ்மேரி, ஆனி என்ற 2 மகள்களும் பேரன், பேத்திகளும் உள்ளனர்.


கடந்த வாரம் மேரிக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேரி கொண்டு செல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவரது கணவர் பில் டார்டனலின் உடல்நிலை மோசமடைந்தது. அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.


மேரி சிகிச்சை பலனின்றி கடந்த 30-ம் தேதி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் பில் டார்ட்னல் தனது முகத்தில் பொருத்தியிருந்த மூச்சுக் குழாயை பிடுங்கி எறிந்தார். இதனால் அவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு இன்ஜெக்ஷன் போட்டு தூங்க வைத்தனர். சுமார் 5 மணி நேரம் கழித்து பில் டார்ட்னல் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். “மனைவியை பிரிந்து வாழ விருப்பமில்லாமல், அவரும் தூக்கத்திலேயே உயிர் விட்டது எங்கள் அனைவரையும் நெகிழ வைத்தது” என அம்மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.