தொடர்கள்
கவிதை
பூவோடு சேர்ந்த....! - சி. கோவேந்த ராஜா. 

எழுத்துக்கள் இணைந்து...
அசைகள் ஆகும்...!
ஆசைகள் அல்ல...!

அசைகள் சேர்ந்து...
சீர்கள் ஆகும்...!
கூர்கள் அல்ல...!

சீர்கள்... சொற்கள்...
ஒன்றா.. வெவ்வேறா...?!

நற்றமிழ் சொல்லோடு...
“நல்”.... “நன்” சேர்ந்தால்...
நற்பெயர் போல்...
நற்சொல் ஆக மாறி விடும்...
நல்வரவு... நல்லழகு... நல்லாசி...!
நல்வாழ்த்து… நன்னம்பிக்கை...!

சுவைப்போம்... இன்பத்தை...
அது - இன்பத்தேன்...!

நேர்மறை வார்த்தைகளோடு...
நேர்மறை வார்த்தைகள் சேர்ந்தால்...
பொன்முலாம் பூசிய சொற்களாய்...
பொலிவு பெறும்...!
பெரும்பேறு… பேரழகு... பேரின்பம்...!

வார்த்தைகள்... வாக்குகள் ஆகும்...
நல்வாக்குகள்.... வாழ்க்கையை...
வனப்படுத்தும்... வளப்படுத்தும்...!
வசப்படுத்தும்...!

அழகுச் சொற்களுடன்...
எதிர்மறை சொற்கள் சேர்ந்தாலும்...
எதிர்மறை பலவீனமாகி...
நேர்மறையே... எதிரொலிக்கும்...!
கொல்லும்... விழிகள்…!
கொள்ளை... அழகு...!

உண்டு களிப்போம்... தமிழ் அமுதை...!
அது - பெரும் விருந்து...!

வார்த்தைகள்... வாக்குகள் ஆகும்...
நல்வாக்குகள்.... வாழ்க்கையை...
வனப்படுத்தும்... வளப்படுத்தும்...!
வசப்படுத்தும்...!