காவிரி மைந்தன்
புத்தம் புதியதாய் வெட்கப் ‘பூ’ பூக்கும்!..
அன்பே!
விழிமலரெடுத்து நீ வரும் வீதியுலாவில் - ஒரு முறை பார்வை கிட்டிவிடாதா என்கிற ஏக்கப் பெருமூச்சில் அங்கு நான்!
வரைமுறையில்லா பேரழகே உன் வதனம் காணவே நாளும் பொழுதுமே இங்கே தவம்!
அழகுதனை ஆராதிக்க வருகிறேன் என்று அனுதினம் விண்ணப்ப மடல்கள் விடுக்கிறேன்!
கிடைத்ததா மடலென்றும் நான் அறியாமல் இக்கரையில்!
பொங்கிவரும் நதிமகளின் மேனியெலாம் பூவாடை போர்த்திவிடும் புன்னைமர மலர்கள் - அங்கு வந்த தென்றல் போட்ட ஆட்டத்திலே பூவாடை ஆங்காங்கே கொஞ்சம் அங்குமிங்கும் விலகிடும்!
நேரில் வந்த தேவதையின் எழிலின் கோலம் அதுபோலத் தானங்கே வண்ணமின்னல் வந்து போவதையே நினைவூட்டும்!
ஓரவிழிப் பார்வை உன்னிடத்தில் ஓராயிரம் உண்டு!
ஒன்றிரண்டு தந்தால் ஆகாதா கண்ணே!
பாவையென் கவனமெல்லாம் சிதறிப்போகும் நேருக்கு நேர் நீங்கள் எனைப் பார்த்துவிட்டால் எனக் காதல்மலர் பூத்தபடி கன்னி நின்றாள்! இன்று நேற்றல்ல.. இது யுகம் யுகமாக!
இது மனித உயிர்களின் வாழ்வியில் கூற்றில் தவிர்க்க முடியாத தாகம்!
பருவம் வந்து சேரும்! பக்கம் வந்து சாயும்!
பகல் இரவைக் கேட்கும்! இரவு பகலைகை் கேட்கும்! பெளர்ணமி நிலவில்தானே கடலில் அலைகள் கூடும்!
மறுமொழி கேட்டு மனம் காத்திருக்கும்! மெளனம் கூட அங்கு போதும்! வரும்வழி பார்த்து நெஞ்சம் ஏங்கும்!
ஆவலிலே காதல்மனம் வேண்டும் மஞ்சம்!
கனியிதழில் அமுதநீர் தருக கொஞ்சம்!
கட்டழகில் நீயென்றும் காட்டியதில்லை பஞ்சம்! தொட்டணைத்தூறும் எனத் தொடங்கும் குறள்வரியைக் கேட்கும்போதெல்லாம் - தொட்டு அணைப்பதைப் பற்றி வள்ளுவன் அறத்துப்பாலிலேயே தொட்டுக் காட்டியதைப் போல் உணர்வேன்!
தொடுதலின் முதல்நிலை ஸ்பரிசமா?
தொடுகின்ற போது உடலெங்கும் பரவிவரும் உற்சாகம் மின்சாரமா?
நுனிவிரல் முதல் வரும்! அதிர்வுகள் மனம் தொடும்!
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அங்கேதான் பேரின்பப் பெருவெள்ளம் தொடங்கும்!
சுகம் சுகம் என இளமை கொண்டாட்டம் போடும்!
அப்போதுதான் புத்தம் புதியதாய் வெட்கப்பூ பூக்கும்!
சொர்க்கம் தாழ்திறக்கும்!
Leave a comment
Upload