தொடர்கள்
பொது
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை கலக்கிய டிராபிக் ராமசாமி... - மாலாஶ்ரீ

20210407131807829.jpg

அதிமுக ஆட்சிக் காலத்தில்... சாலையோர விளம்பர பேனர்கள், வரவேற்பு பதாகைகளால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து.... அரசியல்வாதிகளுக்கும் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர், பிரபல சமூகசேவகரான 'டிராபிக்' ராமசாமி.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட டிராபிக் ராமசாமி (88), சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி இரவு 7.45 மணியளவில் பரிதாபமாக மரணமடைந்தார். ‘கோட் போடாத வக்கீல்’ என்று அழைக்கப்பட்ட டிராபிக் ராமசாமியின் மரணம், பொது மக்கள் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல், சென்னை உயர்நீதிமன்றத்தையே தனது வீடாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு டிராபிக் ராமசாமி பரபரப்பாக வலம் வந்தார். இவரது வாழ்க்கை... இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

தனக்குப் பின்னால் பாதுகாவலராக வரும் பிஎஸ்ஓ, தனது சட்டைப் பையில் நீண்டிருக்கும் வழக்கு கட்டுகள் என எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவது அவரது வழக்கம். கடந்த ஓராண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்றங்கள் முடங்கினாலும், ஆன்லைன் மூலமாக டிராபிக் ராமசாமி வழக்குகளை நடத்தி வந்தார்.

இந்நிலையில், சென்னை தி.நகர் வீட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி டிராபிக் ராமசாமி சுயநினைவின்றி கிடந்தார். அவரை, அவரது உதவியாளர் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டிராபிக் ராமசாமி சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை அளவு அதிகரிப்பு என பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளானார்.

அவரது சிறுநீரில் உள்ள யூரியா கிரியாட்டினும் 3,000 என்ற அளவைக் காட்டியது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, டிராபிக் ராமசாமி மெள்ள உடல்நலம் தேறி வந்தார்.

இடையில், ஒரே ஒருமுறை மட்டும் டிராபிக் ராமசாமியை, அவரது மகள் பார்க்க வந்துள்ளார். அதுவும், ‘உங்கள் தந்தை சீரியஸாக இருக்கிறார். கையெழுத்து போட வாருங்கள்’ என்கிற மருத்துவமனை தகவலால் பார்க்க வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக வழக்கறிஞர் கணேசன் உள்ளிட்ட சிலர்தான் டிராபிக் ராமசாமியை கவனித்து வந்துள்ளனர். இடையில் சற்று உடல்நலம் தேறியது போல காணப்பட்டதும், ‘வழக்குகளைப் பார்க்க வேண்டும். ஆபீஸ் போகலாம்’ என டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். எனினும், அவரால் எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. இதையடுத்து, கடந்த 4-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி டிராபிக் ராமசாமி பரிதாபமாக மரணமடைந்தார் என்கின்றனர் அவரது உதவியாளர்கள்.

20210407131843883.jpg

இதுகுறித்து டிராபிக் ராமசாமியின் நண்பரும் அவரது வழக்குகளை நடத்தி வந்தவருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறுகையில்... “நீதிமன்றங்களுக்கு டிராபிக் ராமசாமி வருவதற்கு முன்பாக, பட்டா மாறுதல் உள்ளிட்ட சில பொதுப் பிரச்னைகளில் அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். இதனால் அவருக்கு சில அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர்.

அப்போது அவரிடம், ‘நீங்கள் அதிகாரிகளிடம் மோத வேண்டாம். அவர்களை நீதிமன்றத்தில் நிற்கவைத்து கேள்வி கேட்கலாம்’ என்றதும், அதை ஒப்புக்கொண்டார். இதன்பிறகு, அவருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்ததால், கடந்த 2007-ம் ஆண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சென்னையில் வரையறையில்லாமல் கட்டப்பட்ட வானளாவிய கட்டிடங்கள் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில், நான் ஆஜரானானேன்.

அதேபோல், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இன்று பாண்டிபஜார் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், அவர் தொடர்ந்த வழக்குதான். தனக்குத் தவறு என்று தெரியவந்தால், அதைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பாப்டே ஆகியோர் கையாண்ட ஒரு வழக்கில், ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்’ என டிராபிக் ராமசாமி கூறினார். அப்போது நீதியரசர்கள், ‘உடல்நிலையை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம்’ என அக்கறை காட்டினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளை நீதியரசர்கள் பாராட்டியுள்ளனர். இதில், அவர் தொடர்ந்த சில வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிடும். அதனால் சோர்ந்து போகாமல், அடுத்த வழக்கைக் கையில் எடுப்பார். அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றமும் சென்றோம். இந்த வழக்கில் ரஞ்சன் கோகாய் சிறப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

சமூகத்தின் நன்மைக்காகவே டிராபிக் ராமசாமி பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ராதாகிருஷ்ணன் சாலையில் அதிமுகவினர் வைத்த பேனரை நேரடியாகவே சென்று கிழித்தார். இதனால் வரக்கூடிய பிரச்னைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவரது பல வழக்குகளில், அவரே வாதாடியும் வந்தார்.

‘தமிழில் வாதாடுங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வாதாடுங்கள்’ என்றேன். மனுதாரராக இருப்பதால், தனது வழக்குகளுக்கு அவரே ஆஜராவதில் ஆர்வம் காட்டினார். அவர்மீது வந்த பல்வேறு அவதூறு தகவல்களை, அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விலகி, தனியே வசித்து வந்தார்.

இந்த வயதிலும் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, எங்காவது பேனர் வைக்கப்பட்டிருந்தால்... உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, ‘உடனே அகற்றுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்’ என எச்சரிப்பதை டிராபிக் ராமசாமி வழக்கமாக வைத்திருந்தார். உடனே, அந்த இடத்தில் இருந்து பேனர் அகற்றப்பட்டுவிடும். இதுவரை ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட, ஓரு அரசியல் கட்சிக்கு எதிராக வழக்கை நடத்துவது தொடர்பாக விவாதித்தோம். ‘இந்நேரத்தில் வழக்கு தொடர்ந்தால், குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக வழக்கு தொடர்கிறோம் எனப் பேசுவார்கள். அதனால் தேர்தல் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்வோம்’ என்றார். ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது!” என்றார் வழக்கறிஞர் ராஜேந்திரன் வேதனையுடன்.

அவரது மறைவுக்கு ‘விகடகவி’ சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.