தொடர்கள்
ஆன்மீகம்
சிறப்புமிகு கார்த்திகை மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

​20211024162344475.jpegClick and drag to move​

கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம்தான். ஆனால், கார்த்திகை மாதத்திற்கு சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதத்தில் மட்டும் தான் மாதம் முழுவதும் வழிபாடுகளும், விரதங்களும் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐப்பசி, கார்த்திகை அடைமழை என்பது பழமொழி. கருமையான மேகங்களைக் கொண்டு, அதிகளவு மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும். காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நந்நாளில்தான்.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜை செய்து, தீப தானம் செய்யலாம். கோயிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வழங்கலாம். வீட்டில் தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றி வைத்து வழிபடுவதும் மிகுந்த நன்மைகளைத் தந்தருளும். இறை சக்திகளின் சாந்நித்யம் நம்மையும் நம் வீட்டையும் சூழ்ந்து நம்மைக் காக்கும் என்பது ஐதீகம்.
இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதால் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவார்கள்

கார்த்திகை மாதத்தில், பல சிறப்புகளும் மகிமைகளும் நடந்திருக்கின்றன.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கார்த்திகை தீபம்:

​20211024162344475.jpegClick and drag to move​

கார்த்திகை தீபம் தமிழர்களின் பராம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்கநூலான புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. ஒளவையார் மற்றும் திருஞானசம்பந்தர் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மகாபலிச் சக்கரவர்த்தியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் விரதமுறை பின்பற்றப்படுகிறது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும். இன்றைய தினம் ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவன் கோயிலுக்கு முன், பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிபட கண்நோய் தீரும். மனக்கவலைகள் நீங்கும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

சோமாவார விரதம்:

சோமாவார விரதம் என்பது கார்த்திகை திங்கள் கிழமைகளில் சிவபெருமானை நினைத்து கடைப்பிடிக்கும் விரத முறையாகும்.

தனது மனைவியர்களிடம் பராபட்சமற்ற அன்பு காட்ட தவறிய சந்திரனை தட்சன் ஒளி இழக்குமாறு சபித்தான். ஒளி இழந்த சந்திரன் சோமாவார விரதமுறையைப் பின்பற்றி இறைவனின் திருவருளால் தேய்ந்து வளரும் நிலையைப் பெற்று பின் பிறைச்சந்திரனாக சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் கார்த்திகை சோமாவாரத்தில் பெற்றார். சந்திரனை சூடிய சிவபெருமான் சந்திரசேகரன் என்று அழைக்கப்படுகிறார்.

இவ்விரத முறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டு இரவில் உண்ண வேண்டும். இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையோடு வளமான வாழ்வு பெறுவர். திருமணம் ஆனவர்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கப் பெறுவர். இவ்விரத முறையில் கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவன் கோயிலுக்கு சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.

உமாமகேஸ்வர விரதம்:

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் சிவபெருமானது இடபாகத்தைப் பெற்றார். அன்றைய தினம் சிவசக்தி சமேதராய் இணைந்து உமையொரு பாகனாக அர்த்தநாரீஸ்வராக காட்சியருளிய ஸ்தலம் திருவண்ணாமலை என்று அருணாசல புராணம் குறிப்பிடுகிறது. எனவே கார்த்திகை பௌர்ணமி அன்று சக்தி மற்றும் சிவனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் விரதமுறையை உமாமகேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விரத்தில் காலையில் மட்டும் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத முறை மேற்கொள்ளுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் தீரும்.

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

கார்த்திகை ஞாயிறு விரதம்:

நவக்கிரகங்கள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் அருள் கிட்டும்.

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

ஸ்ரீவாஞ்சியம் என்னும் ஸ்தலத்தில் சிவபெருமானை வணங்கி திருமால் தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேர்ந்தார். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பார்வதிதேவியோடு சிவபெருமான் குப்தகங்கையின் கிழக்கு கரையில் ஆசி வழங்குவதாக ஐதீகம்.
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

கார்த்திகை விரதம்:

கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதம் தொடர்ந்து பன்னிரண்டுஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்
படுகிறது. கார்த்திகை விரதம் மேற்கொண்டு வருபவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகள் அணுகாமை, உடல் மற்றும் மன நலம், நன்மக்கட் பேறு, செழிப்பான பொருளாதார நிலை போன்றவை முருகனின் அருளால் ஏற்படும். தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வின் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

விநாயகர் சஷ்டி விரதம்:

இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் இருபத்தொரு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் இருபது நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

இவ்விரத முறையினை மேற்கொள்வதால் நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.

முடவன் முழுக்கு:

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!


ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் “கடை முகம்/கடை முழுக்கு” என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் “முடவன் முழுக்கு” என்றும் அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால், இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். கடைமுழுக்கு நாளிலும் காவிரியில் நீராட முடியாதவர்கள், கார்த்திகை மாத முதல்நாளில் சூரிய உதயத்திற்கு முன் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நீராடி இறைவனை வழிபடுவதும் சிறப்பான பலனைத் தரும். முடவன் ஒருவன் ஐப்பசியில் காவிரியில் நீராடுவதற்காக மயிலாடுதுறைக்கு செல்ல தீர்மானித்து பயணத்தைத் துவங்கினான். மயிலாடுதுறையில் காவிரியை நீராட அணுகியபோது ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகமும் வந்துவிட்டது. அன்று இரவுதான் அவரால் மயிலாடுதுறையை அடைய முடிந்தது. துலா மாதத்தில் நீராட முடியாததை நினைத்து முடவன் வருந்தி இறைவனிடம் பிரார்த்தித்தான். இறைவனும் “இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு. உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்.” “இனி யார் கார்த்திகை முதல் தேதி அன்று காவிரியில் நீராடினாலும், ஐப்பசி மாத முழுவதும் நீராடிய பலன் கிடைக்கும்” என்று அருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவன், ‘சிவாயநம’ என்று பஞ்சாட்சரம் உச்சரித்து காவிரியில் மூழ்கி எழுந்தவுடன் அவனது பாவமும், முன்ஜென்ம வினையும், முடமும் நீங்கியது. அதுநாள் முதல் கார்த்திகை முதல் நாளிலும் இங்கு நீராடுவது ஐதீகமாகி விட்டது. இந்நிகழ்வே முடவன் முழுக்கு என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் காவிரியில் கார்த்திகை மாதம் முதல் நாளன்று நீராடல் சிறப்பாக நடைபெறுகிறது.

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி:

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் திருமாலை துளசி தளத்தால் அர்ச்சனை செய்ய ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை மாத துவாதசி நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கங்கைக்கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

ப்ரமோதினி ஏகாதசி:

சிறப்புமிகு கார்த்திகை மாதம்!!

கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ப்ரபோதினி ஏகாதசி. இந்த ஏகாதசி அன்று பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திருப்பதால், இந்தப் பெயரைப் பெற்றது என ஏகாதசி மகாமித்யம் கூறுகிறது. மூவுலங்கங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் நூறு ஜென்ம பாபங்கள் தீருகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணுலோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர்.

ரமா ஏகாதசி:

கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய ஏகாதசியே “ரமா ஏகாதசி” என்று அழைக்கப்படுகின்றது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மிகுந்த புண்யத்தை அடைவார்கள் என்று “ப்ரம்ம வைவர்த்த புராணம்” எடுத்துரைக்கின்றது. இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். இருபத்தியோரு தான பலன்களைக் கொடுக்கும். விரதம் இருக்க முடியாதவர்கள், இதன் விரத கதையையும், பலனையும் கேட்டு பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், ‘கோ’ தானம் செய்த புண்ணியம் பெறுவார்கள்.

சிறப்புகள் மிகுந்த கார்த்திகை மாதத்தில் விரதமுறையைக் கடைப்பிடித்து வழிபாடுகள் மேற்கொண்டு வாழ்வின் கவலைகள் நீங்கி உயர் வாழ்வு வாழ்வோம்.