காவிரிமைந்தன்
ஆதிமுதல் ஓடிவரும் ஜீவநதி காதலா?
அன்பிற்கினியவளே!
அன்பினால் ஆட்சி செய்யும் என் மன ராணி நீ என்பதிலும் கண்மலர் வாய்திறந்து கருணை மழை பொழியும் தேவதை என்பதிலும் நான் காணும் சுகங்களிங்கே கோடி! கோடி!!
காலங்கள் பலவானாலும் கடுந்தவமே புரிந்தாலும் நான் பெற்ற செல்வத்திற்கு ஈடு இணை உண்டா சொல்?
ஆதி முதல் ஓடிவரும் ஜீவநதி காதலையே வாழவைத்த பாவை நீ பல்லாண்டு வாழ்கவே! யார் மனதில் யார் அதிகம் என்பதெல்லாம் கேள்வியில்லை.. இருமனதும் ஒரு மனதாய் ஆனபின்பு காணும்நிலை!
கடைக்கண்ணால் ஒரு பார்வை காதலுக்குப் போதுமடி!
விடைசொல்லும் உன் விழிகள் வினாவும் தொடுக்குதங்கே!
அடிமனதில் நீ குடியிருக்கும் ஆனந்தமாளிகையில் பகலிரவு பேதமில்லை.. பாய்ந்துவரும் வெள்ளமடி!
உன்மடியில் நான் கிடக்கும் உன்னத வேளையிலே.. என்ன வேண்டும் என்று கேட்பதென்ன பெண்மயிலே!
என் பத்துவிரல்கள் நடத்துகின்ற பந்தயத்தில் உன்மேனிபடும்பாடு பார்க்கட்டுமா என்றேன்!
வெட்கமதில் விழுந்து நீ குலுங்க.. சொர்க்கமதன் சாயல் தெரிந்ததடி!
தொட்ட குறை விட்ட குறை இனி நமக்கெதற்கு? - தொடர்கதையே எழுதுகிறேன் சம்மதமா?
தூண்டிலிடும் உன் கண்ணில் தொடங்குகின்றேன்.. புன்னகைக்கும் என் நிலவே வா.. வா.. வா..!
சத்தமில்லா முத்தமெனும் சங்கதிகள் உன்னிரு கன்னங்களின் குழிகளிலே பார் கண்ணே!
இதழ்வீணை மீட்டிவிட இதழ்தானே வேண்டும்.. வேண்டும்.. இனியெந்தத் தடையுமில்லை.. நம் காட்டில் அடைமழையே!
பட்டுமலர்க் கன்னங்களைப் பதம் பார்த்த பின்னாலே சத்தமிடும் செவ்விதழ்கள் சரமாரிப் பொழிந்தனவே!
எத்தனை நாள் காத்திருந்த எதிர்பார்ப்போ?
எண்ணிக்கை பார்ப்பவர் யார் இங்கே! இங்கே!
கரங்களுக்குள் கனிந்துருகும் தேகம்தன்னை கட்டவிழச்செய்வதுவே அடுத்த பணி!
மொட்டுக்கள் பூத்துவிடும் வேளையிது உன் முகமதுவே முழுமதியாய் ஜொலிக்குதடி!
ஏன் அத்தான் என்று ஏதும் கேள்வியில்லை!
எல்லாம் உங்களுக்கு எனும் குரலே மெல்லியதாய் உன்னிடத்தில் பொங்கிவரும்!
சங்கமத்தின் சன்னதிகள் திறந்துகொள்ளும்.. சட்டென்று நாணம்வந்து குடைபிடிக்கும்!
எனக்கும்கூட அவையெல்லாம் மிகவும் பிடிக்கும்!
நீலவிழிப்பந்தலிட்டு நீள் இரவைத் தொட்டிலாக்கி.. பாடுகின்ற சுபலாலி பைங்கிளியே சொல்! சொல்! சொல்!!
தேன்கனிகள், தெள்ளமுதம், ஓர் நினைவு, பேரின்பம் - வேறென்ன வேண்டும் நமக்கு!!
நீ என்பதொன்றே இன்பம்தரும்!
நின்கூந்தல் மல்லிகை எட்டிப்பார்க்கும்!
கண்சிமிட்டி கதைகள் பல கூறும்! கூறும்!
Leave a comment
Upload