தொடர்கள்
கதை
ஒற்றை நாணயம் – பா.அய்யாசாமி

20220021213013179.jpeg

என்னம்மா! என்ன பண்றது உனக்கு? தலைவலியெல்லாம் இப்ப எப்படி இருக்கு? பசங்க எல்லோரும் சொளக்கியமா இருக்காங்களா, நீ கவலையேப்படாதே நான்தான் இருக்கேனே, இந்தா! இந்த பூவை வச்சுக்கோ, இன்னிக்கு வெள்ளிக்கிழமை நீ எப்போதும் செய்வியே விளக்கு பூஜை இன்னிக்கு நான் பண்ணனேன், என்ன சிரிக்கிறே?

ஏதோ எனக்கு தெரிஞ்ச கேசரியை, பிரமாதமா பிரசாதமா செய்திருக்கேன், என போட்டோவிலிருக்கும் மனைவி கற்பகத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார் நாரயணன்.

இப்படி எல்லா விஷயத்தையும் அவர் படத்தைப் பார்த்து சொல்வார், அவளும் பேசப்போவதில்லை, பேசினாலும் இவருக்கு கேட்கப் போவதுமில்லை, ஆதலால் இவரே பதிலையும் கூறி பேசிக்கொள்வார். தட்டை எடுத்தவர் ஏதோ பேருக்கு சாப்பிட்டு, அலம்பி வைத்துவிட்டு, ஊஞ்சலில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் வாழ்க்கையை பின்னோக்கி நினைத்துப் பார்த்தார் நாராயணன்.

கிராமத்து வீடு, வயது 17 இருக்கும் நாராயணனுக்கு, வீட்டில் ஒரே ஆண் வாரிசு இவர்தான், 2 தங்கைகள் வயது 13 மற்றும் 10 வயது, 7ம்வகுப்பும், 5ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர்.

விவசாயமே பிரதானத் தொழில், விவசாயம் பார்த்து கொண்டிருந்த அப்பா, வயலில் நாகம் தீண்ட தவறிவிட்டடார். அம்மா இருமலுடன் ஆஸ்துமா நோயாளி, 20 வயதில் விவசாயத்தை கவனிக்க, படிப்பை நிறுத்தினான் நாராயணன். அம்மாவிற்கு இருமலினால் புகை பகையாக இவர் சமைக்க ஆரம்பித்தார்.

தங்கைகளை நல்ல முறையில் படிக்கவைத்து, எந்தக் குறையுமின்றி திருமணம் செய்து வைத்தவர், மூத்த பெண்ணின் திருமணம் கண்டு, நோய்வாய்பட்டு அம்மா இறந்தாள். நாராயணனுக்கு வயது 32 ஆகியிருந்தது. இவன் ஒத்தையாகிப்போனான். மொத்த குடும்பப் பொறுப்பும் இவன் கையில்.
தூரத்து சொந்தத்தில் கற்பகம் என்கிற பெண் இருப்பதாகவும், அவளை இவனுக்கு மணமுடிக்க வற்புறுத்தினார்கள். விவசாய வேலை மீது உள்ள ஆர்வத்தால் திருமணம் முடிக்க நாராயணனுக்கு பிடிக்கவில்லை. உறவினர்களின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக திருமணமும் கற்பகத்துடன் நடந்து முடிந்தது.

கற்பகம், வந்ததபின்னே எந்த வீட்டு வேலையும் நாராயணனை செய்யவிடாமல் தானே கவனித்துக் கொண்டாள். நாராயணன் விவசாயத்தில் கவனம் செலுத்த, குடும்பநிலை உயர்ந்து, வாழ்க்கை பிடித்துப்போனது முதல்முறையாக, அதன் பலனாய் ஒரு மகளும், மகனும் இரட்டையாகப் பிறந்தனர்.

இருவரும் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கிராமத்தில் படித்தனர். தாம் படிக்கவில்லை, அந்தக் குறை அவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதால் அவர்களை நல்லபடியாக படிக்க வைக்க, கற்பகத்தை அனுப்பி சென்னை நகரத்தில் ஜாகையை வைத்தார், மீண்டும் கிராமத்தில் ஒத்தையானான்.

கடமை முடித்து கற்பகம், திரும்ப கிராமத்திற்கு வந்தாள். இருவரும் நன்றாக படித்து முடித்து, நல்ல வேலையில் அமர வயது இருபத்தைந்தை கடந்ததும், ஒரே வீட்டில் பெண் கொடுத்து பெண் எடுத்தனர்.

ஒரு வருடமே கடந்திருக்கும், அடிக்கடி கற்பகத்திற்கு தலைவலி எடுக்க, மகனின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை அப்போலோவில் காண்பித்தார். புற்றுநோய் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்க... அதை தாங்கக்கூடிய அளவிற்கு அவளுக்கு சக்தியில்லை. கடமையாற்றி விட்ட திருப்தியில் தன் கணவனிடம் சரியாக தங்களைக் கவனிக்க முடியவில்லையே என ஆதங்கத்தைத் தெரிவிப்பாள் தினமும்.

நாராயணனும் அவளைத் தேற்றி, இதுவரை நீ செஞ்சது எல்லாம் நல்ல விஷயம், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன், நீ கவலைப்படாதே! குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன் எனத்தேற்றி தேம்பி தேம்பி அழுதார். ஒரு வெள்ளிக்கிழமையில் சுமங்கலியாக கற்பகம் கண்களை மூடினாள், மீண்டும் ஒத்தையானான்.

எந்த நேரத்தில் சமையல் கரண்டியை கையில் பிடித்தேனோ தெரியலை, இன்று வரை அது ஓயலை... என நினைத்தவர் கண்களோரம் கண்ணீர் கசிய ஊஞ்சலலிருந்து இறங்கி நடந்தார்..

அன்றிலிருந்து இன்று வரை தானே சமைத்து சாப்பிட்டு, வீட்டை பராமரித்து, கோவில் கைங்கர்யம் என தன்னைப் பிசியாக வைத்துக்கொண்டுள்ள நாரயணன் தாத்தாவுக்கு, தற்போது வயது 80. மனைவி இறந்து 20 வருடமாகிறது. இவரின் மகன் துபாயில் வசிக்கிறார், மகள் திருமணம் முடித்து மும்பையில் வசிக்கிறார். ஆறுதலாக வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அப்பாவை தரிசனம் செய்வார்கள்.

நகர்பகுதியில் வீடு ஒன்றை கட்டிக்கொடுத்து, மாதா மாதம் செலவுக்கு பணம் அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறான் மகன்.

மற்றபடி, இவர் கடல் தாண்டி செல்வதோ, வெளியே பயணப்படுவதோ கிடையாது, காதும் அவ்வளவாக கேட்காது என்பதுதான் இவருக்கு குறை, அதுவே இவருக்கு நல்லது.

ஏனென்றால் இவர் காது படவே ஒத்தை பார்ப்பான், செல்லாக்காசு என பலர் இவரைக் கிண்டலடிப்பதும் இவர் காதில் விழாததால், அவர்களிடமே தன் துக்கத்தை மறைத்து நன்றாக சிரித்து பேசி அவர்களையும் மகிழ்விப்பார்.

“என் கூட ரயில் பயணம் செஞ்சவங்க எல்லோரும் இறங்கி போயிட்டாங்க”, நான் இன்னும் இறங்கல, எப்போ நான் இறங்கறதுன்னு தெரியல. ஆனால் “எப்பவும் இறங்கத் தாயாரா இருக்கேன்” என்பார் அடிக்கடி.

தனிமையாக உள்ள குறை தெரியாமலிருக்க, நாள் முழுவதும் சுற்றி சுழண்டுக்கொண்டே இருப்பார். இரவு தூங்கும்போதுதான் வீட்டிற்கு வருவார். அவருடன் பேசுவதற்கென்றே இளைஞர் கூட்டமிருக்கும், அனைத்து விஷயமும் அவரிடம் ஆலோசனை கேட்பார்கள், அவரும் பொறுமையாக எடுத்துச்சொல்வார்.

பக்கத்து வீட்டில் இவருடன் பழகியவர் தன் வயதொத்தவர் இறக்க, அந்த வீட்டில் எல்லா காரியங்களையும் முறையாகச்சொல்லி செய்ய வைத்தவர் மயானம் வரை போய் வந்தார்.

தனிமையே கொடுமை! அதுவும் முதுமையில் தனிமை மிகக் கொடுமை. ஒரு ரூபாய் நாணயத்திற்கு தனியாக மதிப்பு இல்லை. ஐம்பது, நூறு, மற்றும் ஆயிரம் கூட சேரும்போது அதன் மதிப்பு கூடும் என எண்னினார். அன்றைய தனிமை இரவு முதன் முதலாக பயமுறுத்தியது.

மனைவி கற்பகத்தின் போட்டோவை கழற்றி தனது பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊஞ்சலில் உறங்கிய நாராயணன், தனது மதிப்பு கூடியதாக உணர்ந்தார். இப்படி ஒத்தையாக சுண்டிவிட்ட நாணயம்போல் சுழன்று சுற்றிய இந்த ஒத்தைரூபாய் நாணயம் இன்று சுற்றுவதை நிறுத்தி, தலைவிழுந்திருந்தது.