தொடர்கள்
பொது
சரியான தீர்ப்பு -தில்லைக்கரசிசம்பத்

20250506170422718.jpeg

“இவனை குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையிலேயே வைக்க வேண்டும். எந்த வகையிலும் பரோல், மன்னிப்பு கிடையாது” என 2025ஜூன்2 அன்று சென்னை மகளிர் நீதிமன்றநீதிபதி, ஜி. ஞானசேகரனை “குற்றவாளி” என தீர்ப்பளித்தார்.

இது சாதாரண தீர்ப்பல்ல!

ஒவ்வொரு நாளும் நாட்டில் கைக்குழந்தை, சிறுமி , மூதாட்டிகள் என பார்க்காமல் பெண்இனம் மேல் பாலியியல் துஷ்பிரயோகங்கள் நடந்து வருகின்றன. செல்வாக்குள்ள குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்தமுறை கொடுத்த தீர்ப்பு ரணப்பட்டக்காயங்களுக்கு மருந்தாக வந்திருக்கிறது.

2024டிசம்பர் 23அன்று அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் ஞானசேகரன் என்பவன், மாணவியையும் அவரது நண்பரையும் தாக்கி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தான்.

இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும்அதிர்வை ஏற்படுத்தியது .

பாலியல் வன்கொடுமை, கடத்தல், பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களை, வீடியோக்களை அனுமதியின்றி பதிவுசெய்தல்,வெளியிடுதல் என மொத்தம் 11குற்றச்சாட்டுகள். அத்தனையிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஞானசேகரன், 2011ஆம் ஆண்டே அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியிடம் பாலியல்வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுள்ளது. மேலும், 15முறை திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டவன். 2024டிசம்பர்22 அன்று, அதாவது இக்குற்றம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்பு, ஞானசேகரன் மற்றொரு மாணவியிடம் பாலியல்வன்கொடுமை செய்ய முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நேரம் பல்கலைக்கழகஊழியர் அந்தப்பக்கமாக சென்றதால் மாணவி தப்பித்ததாக தெரிகிறது. இவ்வழக்கில் தகவல்தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. CCTVகாட்சிகள், ஞானசேகரனின் செல்பேசி 143நிமிடங்கள் “ஃபிளைட் மோட்” நிலையிலிருந்தது போன்ற தகவல்கள், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தின.

சென்னைஉயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை செய்ய சிறப்பு விசாரணைகுழுவை(SIT) அமைக்க உத்தரவிட்டது.

இந்த குழு குற்றவாளியை உறுதிப்படுத்தியது. சம்பவம் நடந்தப்பின் காவல்துறையில் புகாரளித்த மாணவியின் விவரங்களை சில காவல்துறைஅதிகாரிகள் விதிமுறைகளை மீறி மீடியாவில் வெளியிட்டது பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதற்கு பரிகாரமாக முதல் தகவலறிக்கை(FIR) விவரங்கள் பொதுவெளியில் வெளியானதற்குக்காரணமானஅதிகாரிகளிடமிருந்து ரூ25லட்சம் வசூலித்து, அந்த மாணவிக்கு இழப்பீடு தர உத்தரவிட்டு, அந்தஅதிகாரிகளின் தலையில் தடியால் அடி வைத்திருக்கிறது நீதிமன்றம். அதுமட்டுமில்லாமல் மாணவி தனது கல்வியை இடையூறில்லாமல் தொடரவும்,அவரது அடையாளம் மற்றும் , தனியுரிமையும் பாதுகாக்கப்படும் என நீதிமன்றம் உறுதியளித்திருக்கிறது.

இத்தகைய வழக்குகள் பற்பலவருடங்கள் நீடித்துவரும் காலக்கட்டத்தில், இவ்வழக்கில் குறைந்தக்காலத்தில் விசாரணையும், தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளன. இது வழக்கமான ஆயுள்தண்டனையல்ல. பெரும்பாலான குற்றங்களில், “ஆயுள் தண்டனை” என்பது 14ஆண்டுகள் கழித்து பரோல் வாய்ப்பை உருவாக்கும். அத்துடன் “குறைந்தபட்சம் 30ஆண்டுகள்” என்பது பெரும்பாலும் கொலை, கள்ளநோட்டுமோசடி போன்ற குற்றங்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றது

பாலியல்வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், “குறைந்தபட்சம் 30ஆண்டுகள்” சிறைதண்டனை என்பது மிகவும் அபூர்வமானது.

இத்தீர்ப்பு வெறும் தண்டனையறிக்கை மட்டுமல்ல, தமிழ்சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு அறிக்கை. பெண்களுக்கெதிரான வன்முறைகள் செய்யும் நபர்களுக்கு கொடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை.

இனி பாலியல் குற்றங்களுக்கெதிராக இப்படிதான் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதனை செவிட்டில் அறைந்ததுபோல் சொல்லி அறைக்கூவல் விட்டிருக்கிறது நீதிமன்றம்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு சரியான நீதி வழங்கிய சென்னைஉயர்நீதிமன்றம், தமிழ் மண் நீதிதவறாது என்பதனை இம்முறை உறுதி செய்திருக்கிறது.