சமீபகாலமாக அமெரிக்கஅதிபர் டிரம்ப் புதிதாக அமல்படுத்திவரும் குடியேறிகள் விதிமுறைகள் அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சர்வதேசமாணவர்களுக்கு பெரும்பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து உயர்கல்விக்காக அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அனைத்து நாடுகளின் அமெரிக்கதூதரகங்கள் புது மாணவர்களின் விசாநேர்முகங்களை காலவரையின்றி நிறுத்தியிருக்கின்றன.. சீனமாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதால், வாஷிங்டன், டி.சி., மெரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றன.
“அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து” என பல்கலைகழகங்களில் தீவிரவாதிகளை பிடிப்பது போல் அமெரிக்க சிறப்புகாவல்துறை அதிரடியாக உள்ளே நுழைந்து குறிப்பிட்ட மாணவர்களை கைதுசெய்து, கொண்டு போய் லூசியானா மாநிலத்தில் உள்ள தடுப்புமுகாமில் சிறைவைக்கப்பட்டு அங்கிருந்து தத்தம் நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
பிடிப்படும் சர்வதேசமாணவர்களில் 50% இந்தியமாணவர்கள் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. ட்ரம்பின் அதிகாரம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வரை பாய்ந்ததில், அதன் $3 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முடங்கி, சர்வதேசமாணவர்கள் சேரும் உரிமையும் ரத்தானது. இது அரசியல் பழிவாங்கல், சர்வதேச மாணவர்களின் உரிமைமீறல் என இந்த முடிவை எதிர்த்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்கநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
மற்ற அனைத்து அமெரிக்க பல்கலைகழகங்களும் ட்ரம்பிடம் சரணடைந்த நிலையில் “உன் அமெரிக்கநாடு என ஒன்று உருவாவதற்கு முன்பே ஹார்வர்ட் பல்கலைகழகம் உண்டாகிவிட்டது. நீ யார்ரா வெண்ணெய்?!” என ட்ரம்பிடம் ஹார்வர்ட் பல்கலைகழகம் மல்லுக்கு நிற்கிறது.
டிரம்ப் அறிவித்துள்ள குடியேறிகள் விதிகள் பெரும்பாலும் நிர்வாக உத்தரவுகள் (Executive Orders on Regulatory Policies) அடிப்படையில் உள்ளதால் நல்லவேளையாக அச்சட்டங்களை நிரந்தரமாக்க முடியாது. இரண்டாவது முறையாக அதிபராகி உள்ள ட்ரம்ப் அமெரிக்கஅரசியமைப்பு சட்டம்படி 3ஆம்முறை அதிபராக முடியாது.
அடுத்து வரும் தேர்தலில் ட்ரம்பின் குடியரசு கட்சி திரும்பவும் வெற்றியடைந்தால், அடுத்தபடியாக அதிபர் ஆகும் வரிசையில் இருக்கிறார்கள் தற்போதைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தீவிர வலதுசாரிகளான வெளியுறவு செயலாளர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்பு துணைஆலோசகர் ஸ்டீபன் மில்லர், ஃபுளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர். ட்ரம்பின் அத்தனை குடியேறிநலன் விரோத சட்டங்களையும் வகுத்து செயல்படுத்துபவர்கள் இவர்களே!
இதில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மட்டும் 8 வருடங்களுக்கு முன்பு ட்ரம்பை “முட்டாள்” “ஹிட்லர் போன்றவர்”என கண்டித்திருந்தாலும் தற்போது ட்ரம்பின் கொள்கைகளை ஆதரிக்கிறார். சுருக்கமாக சொன்னால் குடியரசு கட்சி இருக்கும் வரை அமெரிக்ககுடியேறிகளுக்கு என்றைக்குமே தலைக்குமேல் கத்தி தான் என்கிற நிலையில் இனி அமெரிக்காவில் படிப்பு,வேலை,க்ரீன் கார்ட், சிட்டிசன்ஷிப் என ரெக்கைக்கட்டி பறந்த சர்வதேசமாணவர்களின் அமெரிக்கக்கனவில் இடி விழுந்திருக்கிறது எனலாம்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள்,குறிப்பாக சர்வதேசமாணவர்களுக்கெதிரான கொள்கைகள், அமெரிக்கமக்களிடையே எதிர்ப்பை உண்டாக்கியிருக்கின்றன. சர்வதேச மாணவர்களால் 2023–2024 வருடத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் வருவாய் அமெரிக்கப்பொருளாதாரம் ஈட்டியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் வரும் இந்த வருமானத்தை மட்டுமன்றி லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் அமெரிக்கா இழக்க போகிறது.
பைடனுக்கு 10ஆவது நிலை(stage) புற்றுநோய் என சமீபத்தில் பேசி, கேட்டவர்களை அதிர வைத்த ட்ரம்ப்பிடம், கல்வியின் அவசியம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான ஹார்வார்ட்டின் பெருமை, அமெரிக்காவின் வளமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாக இயங்கும் அறிவுசார் தளத்தில் சர்வதேச மாணவர்களின் பெரும்பங்கு பற்றியெல்லாம் கவலை இருப்பதாக தெரியவில்லை.
அதுசரி!
அரசியல்வாதிகளுக்கு எதற்கு கவலை? அவர்கள் தேர்தலில் வெற்றிப்பெறுவதை தவிர வேறெந்த பிரச்சனைக்கும் கவலைப்பட மாட்டார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றுதானே!
Leave a comment
Upload