இந்த படம் பார்ப்பதற்கு முன்பே இதைப் பற்றிய மதிப்பாய்வும், மீம்ஸ்களும் ஒரு வித எச்சரிக்கையை, பயத்தை தூண்டும் வகையிலேயே அமைந்திருந்தது.
கூடவே அலுவலகம் முடிந்து இரவு எட்டு மணிக்கு நாம் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டுமா என்கிற வினாவும் என்னுள் எழுந்தது.
கமல் அல்லது மணிரத்தினத்தின் தீவிர ரசிகையாக இருந்தாலாவது மனதை தேற்றி கொண்டு, ஒரு முறையாவது படம் பார்த்தாக வேண்டும் என்று செல்ல தோன்றும்.
முதல் நாள் காட்சிக்கு சென்று படம் பார்த்த என்னை, இந்த படம் ஏமாற்ற வில்லை என்றே தோன்றுகிறது.
இந்த படத்தை பற்றிய முன் விளம்பரத்தை வைத்தே, இது குண்டர்கள் பற்றிய கதை என்று, சின்ன குழந்தை கூட கூறி விடும்.
பிறகு ஏன் இந்த படத்திற்கு இத்தகைய எதிர்பார்ப்பு, விளம்பரங்கள் என்றால் முப்பத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து இணைந்த மணிரத்தினம் - கமலஹாசன் என்கிற இரு பெயர்கள் தான் அதற்க்கு காரணம்.
இந்த படம். மணிரத்தினம் பாணியில், கருப்பு வெள்ளை பின்னணியில் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இன்றி துவங்கியது.
தொடர்ந்து கமலின் மூத்த அண்ணனான சந்திரஹாசனின் படம் காண்பிக்கப்பட்டு, அதன் கீழ் அவருக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கும் விதமாக கமல் ஆங்கிலத்தில் கவிதை எழுதிய கவிதையும் திரையில் வந்தது.
படம் துவங்கியதுமே, நாயகனின் சாயல் பல இடங்களில் தெள்ளத் தெளிவாக வந்து போகின்றது.
நாயகனில் நாம் பார்த்த கமலை, நம் முன் கொணர்ந்து நிறுத்திய இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டுகள்.
த்ரிஷாவும் அந்த படத்தின் சாயலிலேயே அறிமுகமாகிறார் என்ற ஒரு சின்ன குறிப்போடு உங்கள் கற்பனைக்கே அதை விட்டுவிடுகிறேன். கதை மேலே நகர்ந்து சிம்பு, நாசர், அபிராமி, ஜோஜோ ஜார்ஜ் என அனைவரும் கதைக்குள் வருகிறார்கள்.
அடுத்தடுத்த காட்சிகள் அனைத்துமே ஊகிக்கும் விதத்தில் அமைந்திருந்தாலும் கூட, மணிரத்தினத்தின் பாணி, ஆங்கிலத்தில் கூறினால் அவரது டச் ஆங்காங்கே இருப்பது படத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
எதுக்கட்டாக, படத்தில் வரும் ஜிங்குச்சா பாடல். அலைபாயுதேவில் வரும் "யாரோ யாரோடி", காற்று வெளியிடை படத்தில் வரும் சரட்டு வண்டியிலே போன்று இந்த படத்தில் ஜிங்குச்சா பாடல். இது ஒரு வித சலிப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி விடாதா என்றால் இல்லை என்பதே என்னுடைய கருத்து.
இதற்கு, இசையமைப்பாளர் ரஹ்மான் அவர்கள் மணிரத்தினத்திற்கு உறுதுணையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது இசையின் மூலம், சலிப்பிற்கு சிறிதும் வாய்ப்பில்லாது காண்போரை தன் வசப்படுத்தியிருக்கிறார். இருப்பினும், முத்த மழை பாடல் படத்தில் இடம் பெறாதது ஒரு பெரும் குறையே.
ரவி கே.சந்திரன் அவர்களின் ஒளிப்பதிவு பாராட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
குறிப்பாக, சண்டை காட்சிகளில் அவரது ஒளிப்பதிவு துல்லியமானதாக அமைந்திருப்பது சிறப்பு. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் இந்த படத்தின் முதுகெலும்பு என்றே கூறலாம்.
பல கிளைக்கதைகள், கிளை வில்லன்கள் இருந்த போதிலும், கதையில் குழப்பமில்லாமல் படம் அமைந்ததற்கு இவரது படத்தொகுப்பே முக்கிய காரணம்.
துணை நடிகர்களாக வந்த அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை கன கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, அசோக் செல்வன் தன் நடிப்பின் மூலம் இப்படத்தில் பிரகாசித்துள்ளார்.
கமலின் நடிப்பை நம்மால் பாராட்டாமல் இருக்க இயலாது.
சிம்புவும், கமலும் ஒன்றாக வரும் காட்சிகளில், தேவர் மகனில் வரும் சிவாஜி கமலின் காட்சிகள் நம் கண் முன்னே வந்து போகின்றன. கமலின் நடிப்பில், குறிப்பாக இந்த படத்தில் சிவாஜியின் சாயல் அதிகம் தெரிகிறது. சண்டைக் காட்சிகள், சிம்புவுடன் அவரது உரையாடல், காதல் காட்சிகள் என அனைத்திலும் மிளிர்கிறார்.
சிம்பு நன்றாக நடித்திருந்தாலும், இன்னும் அவரது நடிப்பு முழுமையாக இந்த படத்தில் அமையவில்லையோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கால கட்டத்தில் வரும் அனைத்து தமிழ்ப் படங்கள் போன்றே, இதிலும் வன்முறை அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது. தணிக்கை குழு இதில் வரும் பல காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பதும் ஆச்சரியமே!
ஓகே கண்மணியில் "லிவிங் டுகெதர்" என்கிற நவீன தலைமுறையினர் பழக்கத்தை படம் பிடித்து காட்டிய மணிரத்னம், இந்த படத்தில் விவாகரத்து ஆகியும் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நண்பர்களாக இருப்பது போன்றும், சேர்ந்து வாழ்வது போன்றும் காட்சி அமைத்திருப்பது, நான் இன்னும் இந்த தலைமுறையை சேர்ந்தவன் என்று வலுக்கட்டாயமாக கூறுவதற்க்காகவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
படத்தில் பல சொதப்பல்கள் இருந்தாலும், மணிரத்னத்தின் ஒற்றை வரிகள் பல இடங்களில் சலிப்பு தட்டும் விதத்தில் செயற்கையாக பொறுத்தப்பட்டிருந்தாலும் - தக் லைப் - உயிர் பெறும்!
Leave a comment
Upload