நாக்கைக் கடித்துக்கொண்டு விட்டேன்.
நட்ட நடு நாக்கில் என் பல் ஒன்றே நன்கு பதிந்து சிவந்து விட்டது.
வலிக்கிறது..
மும்பை வீட்டிலிருந்தாலாவது, நாக்கிலே ‘உவ்வா உவ்வா’ என்று மனைவியிடம் அரற்றலாம். ஒரு வார கால பயணமாக ஹைதராபாத்துக்கு தனி ஆளாக வந்திருக்கிறேன். அரற்றவும் வழியில்லை!
சில காலம் பூட்டியே இருந்த என் ஃபிளாட்டை அர்பன் கம்பேனி ஆட்கள் நாலுபேர் வந்து சுத்தப் படுத்தினார்கள்.
கொஞ்சம் ஒழுகும் சமையலறைக் குழாய், ஓடாத மின்விசிறி, சத்தம் போடும் குளிர் சாதனம் என ஒவ்வொன்றாக சரி செய்தபடி இருக்கிறேன்.
நடுவே சமையல், பூஜை என தனி ஆவர்த்தனங்கள் வேறு.
எதையும் உபயோகப் படுத்தாமல் விட்டால் தொல்லை தான். பூட்டி வைத்த வீட்டைப் போல..
சரியாக உபயோகப் படுத்துவதில் கவனம் இல்லா விட்டாலும் சிரமம் தான்… என் ‘தற்கடி’யில் சிவந்த நாக்கு போல…
புருஷன் பொண்டாட்டி சண்டையில் நடுவில் புகுந்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் வீட்டுப் பெருசு போல இந்த நாக்கு கடிபட்டுக் கொண்டது. சரியான புண்ணாக்கு நானோ?!
எதையோ கொறித்துக் கொண்டிருந்த பற்களிடையே என் நாக்கும் பஞ்சாயத்துக்குப் போவானேன்? இப்படியொரு பதிவு போடுவானேன்!
இனிமேல் தான் சமைக்க வேணும்..
கத்தரிக்காய் கறி, குடமிளகாய் கேரட் போட்டு சாம்பார், நல்ல தயிர். அவ்வளவு தான் மெனு.
அதுவும் கத்தரிக்காய் கறிக்கு மேல் தூவலாக இவள் இடித்துக் கொடுத்த பொடியைப் போட்டு, கொஞ்சம் நல்லெண்ணை விட்டு, குறைந்த தீயில்…. ஆஹா… அடடா!
இந்த நாக்கு இருக்கே…. பொல்லாத நாக்கு!
Leave a comment
Upload