தொடர்கள்
பொது
அழியாத ரேகைகள்"விகடன் எம்.டி " பற்றி வீயெஸ்வீ - வேங்கடகிருஷ்ணன்

20250505203433633.jpg

எழுத்தாளர் மாலன் அவர்களின் முயற்சியால், மதுரத்வனி வழங்கும் பத்திரிக்கை உலக மாமனிதர்கள் பற்றிய சொற்பொழிவுகள் "அழியாத ரேகைகள் " என்ற பெயரில் நடைபெறுகின்றன.

மயிலை ஆர். கே. கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இதில் விகடன் எம்.டி எஸ்.எஸ். பாலன் பற்றி விகடனில் எடிட்டராக பணியாற்றிய வரும், சங்கீத விமர்சகரும், எம். டி யோடு அவரின் இறுதி காலம் வரை தொடர்பில் இருந்தவருமான வீயெஸ்வீ பேசினார்.

20250505145355258.jpg

அவர் விகடன் அச்சகத்தில் அவரது மாமாவான பரணீதரன் (கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் ) சிபாரிசில் சேர்ந்ததிலிருந்து துவங்கி , படிப்படியாக வளர்ந்து, பின் ஆசிரியர் குழுவில் இணைந்தது , எம்.டி யின் அயராத உழைப்பையும், தனி சிறப்பான குணங்களை பார்த்து மகிழவும் வாய்த்தது பற்றி தன் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.


சினிமா விமரிசனம் எப்படி ஒவ்வொரு வாரமும் நடக்கும் என்பது பற்றி அவர் விளக்கியத்தையே ஒரு குறும்படமாக எடுக்கலாம். எல்லோருடைய விமரிசனத்தையும் தனித்தனியாக எழுதி வாங்கி அதில் சில பகுதிகளை மட்டும் அங்கீகரித்து அவற்றையெல்லாம் சேர்த்து விமரிசனக் கட்டுரை உருவாகும் என்பதை அவர் சொன்னபோது, வாசகர்களுக்கு விகடன் தந்த மதிப்பு , எம் .டி யின் வாசகர் விசுவாசம் போன்றவைகளை எல்லோரும் நினைக்கும்படி செய்துவிட்டார் வீயெஸ்வீ.

"மிருதங்க சக்கரவர்த்தி " பட விமரிசனத்தில் சில உண்மைப் பிழைகள் (Factual Errors) இருந்ததை வாசகர்கள் சுட்டிக்காட்டி கண்டனக் கடிதங்கள் அனுப்பியபோது, அவருடைய வழக்கமான பாணியில் " வணக்கம்" என்று துவங்கி தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டது, இனிமேல் சினிமா விமரிசனம் விகடனில் வெளிவராது என்று சொன்னது மட்டுமல்லாமல், விமர்சனக் குழு கலைக்கப்படுகிறது என்றும் எழுதி அதை செயல்படுத்தி காட்டியவர் எம்.டி .

ஜனநாயக வழிகளில் அவருக்கு அவ்வளவு மதிப்பு உண்டு. ஆறுமாதங்கள் சென்ற பின்பு வாசகர்களின் வற்புறுத்தலுக்கு செவி சாய்த்து மீண்டும் சினிமா விமரிசனம் வெளிவரத் துவங்கியது.

ஒரு முறை ஆசிரியர் குழுவோடு எம். டி மிகவும் சீரியஸான முறையில் எதோ பேசிக்கொண்டிருக்கும்போது மறுநாள் வெளிவர இருக்கும் விகடனில் முதல் பிரிண்ட் காபி அச்சகத்திலிருந்து வந்தது.

எல்லோரும் ஆர்வமாக அதை கைகளில் வாங்கி புரட்டி பார்க்கத் துவங்க, பேசிக்கொண்டே இருந்த எம். டி எல்லோர் கவனமும் புத்தகத்தில் இருப்பதை கவனித்து , திடீரென்று தனது சேரிலிருந்து எழுந்து வெளியே சென்று விட்டார்.

மறுநாள் அவர் ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்தி மட்டுமே வந்தது.

அந்த ஆசிரியர் குழுவில் தானும் இருந்ததாக வீயெஸ்வீ சொன்னபோது அந்த நிகழ்வின் பாதிப்பை அவரின் முகத்தில் நம்மால் பார்க்க முடிந்தது.

பின்னர் நீண்ட நாட்கள் சென்ற பின்பே எம் .டி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார் என்றார்.

"மாணவர் பத்திரிக்கையாளர் திட்டம்" , அவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டமாய் இருந்தது பற்றியும், அவரே மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்வார் என்றும், அவர்களுக்கு பயிற்சியும், அந்த வேலை நேரத்தில் சம்பளமும் வழங்கினார் என்றும் சொல்லி, அப்படித் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சி முடித்த பலர் விகடனுக்கு பின்னர், பத்திரிக்கைத் துறை, சினிமாத்துறை, நீதி துறை என்று பல துறைகளில் வெற்றிகரமாக வளம் வந்து கொண்டிருப்பதை சொன்ன வீயெஸ்வீ யாரும் அரசியல்வாதியாகவோ, மந்திரியாகவோ ஆகவில்லை என்று தனக்கேயுரிய குறும்பு மிளிரச் சொன்னார்.

20250505144534133.jpg
எம். டி யைப் பற்றி ஒரே புத்தகம் தான் இதுவரையில் வெளிவந்திருக்கிறது, விகடனில் பணியாற்றியவரும் எம். டி யின் நேர்முக உதவியாளராகவும் இருந்த ஜே.வி . நாதன் எழுதிய "சேவற்கொடியோன் " என்ற புத்தகம் தான் அது. அதே புனை பெயரில் " உன் கண்ணில் நீர் வழிந்தால்", "என் கண்ணில் பாவை அன்றோ" "பேசும் பொற் சித்திரமே" என்ற தொடர்களை எம். டி எழுதி இருப்பதை நினைவு கூர்ந்தார் வீயெஸ்வீ.

அவருடைய சிறு வயதில் " சந்திரிகா" என்ற பெயரில் கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை எம்.டி நடத்தி வந்ததை பகிர்ந்து கொண்டபோது , இந்த புது தகவல் வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

20250505144612830.jpg

அவருடைய மதுரை பண்ணை மற்றும், படப்பை பண்ணை வீடு, அங்கு அவர் வளர்த்த 800 க்கும் மேற்பட்ட பறவை வகைகள், அவை அவரிடம் காட்டிய பேரன்பு , அவரின் கார் தூரத்தில் வருவதை பார்த்தவுடனேயே ஆப்பிரிக்க கிளி "பாலு...பாலு " என்று கத்த ஆரம்பித்து விடுமாம். அந்த கிளி மற்றும் பல பறவைகள் "இந்தியன்" படத்தில் நடித்தது குறித்த ஒரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

அவரின், காபி ரசனை, இருவகை சமையலையும் மணக்க மணக்க சமைத்து தன் நண்பர்களுக்கு விருந்து வைக்கும் பாங்கு, அவரின் இசை அறிவு மற்றும் இசை கலைஞர்களின் மேல் அவருக்கிருந்த ஈடுபாடு. அன்றைய பிரபல எழுத்தாளர்கள் அனைவரையும் அவர் தன் பால் ஈர்த்து வைத்திருந்த விதம் என பலவற்றையும் சொன்னபோது, எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று வியக்க வைத்தார்.

20250506073842472.jpg

முடிவாக தனது காலத்திற்கு பிறகு தனது உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆய்வுக்கு பயன்படவேண்டும் என்றும் உயில் எழுதி வைத்ததையும், கொடுக்கும் பொது தனது உடலுறுப்புகள் சரியாக இருக்கவேண்டும் என்பதால் வருடத்திற்கு இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.
அவர் இறந்து வருடங்கள் கடந்த பின்னும் ஏன் இன்னும் விகடன் குடும்பத்தினர் மனதில் நிற்கிறார் என்பதை உணர முடிந்தது.

நமது ஆசிரியர் மதன் ஒருமுறை என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது, "நான் வேலை செய்யும் போது என் அறையின் வாசலில் ஒரு சிவப்பு விளக்கினை எரியச் செய்தார், அப்படி எரிந்து கொண்டிருந்தால், அவரே என் அறைக்கு வரமாட்டார், அது பற்றி அவரிடம் கேட்டபோது, " நீங்க எனக்காக வேலை செய்யறீங்க, நானே வந்து அதை டிஸ்டர்ப் பண்ணலாமா ?" என்று சொன்னார், மற்றவர்களை அவர் மதிக்கும் விதம் ,நாமெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டியது " என்றார்.

20250505145500673.jpg

மதன் சார் தன்னுடைய ஆசானுக்கு அளிக்கும் குரு தட்சணை விகடகவி டிஜிட்டல் மின்னிதழ் .