தொடர்கள்
புத்தக விமரிசனம்
காருகுறிச்சியை தேடி  ஆசிரியர் : லலிதாராம் புத்தக விமர்சனம்- இந்துமதி

20250506181709445.jpeg

என்னுடைய பால்யத்தில் தாத்தாக்கள் மாலையானால் திண்ணையில் வானொலியை சுற்றி அமர்ந்து ஆல் இந்தியா ரேடியோவில் நாதஸ்வரம் கேட்ட நினைவுகள் பசுமையாக நினைவில் உண்டு. அப்போது அந்த இசை குறித்த பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்லை, ஆனால் நாதத்தில் இனிமையிலுள்ள சின்ன சின்ன குழைவுகளையும் ரசித்த அந்த முதியவர்களின் ரசனையை கண்டு வியந்திருக்கிறேன். நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது, இன்றும் சிங்கார வேலனே தேவா பாடலை கேட்கும் போதெல்லாம் கொஞ்சும் சலங்கையாய் காருகுறிச்சியாரின் நாதஸ்வரம் நம் காதில் ஒலிக்கும். அதுமட்டுமே அவரின் மேதமைக்கான அடையாளம் அல்ல, அதற்கு முன்பே அவரின் புகழ் பட்டி தொட்டியல்லாம் பரவி இருக்கிறது.

தொலைக்காட்சி பெட்டிகளும், செல்போன்களும் இல்லாத ஐம்பதுகளில் காருகுறிச்சியாருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது. அந்நாட்களில் எல்லாம் திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிக்க வரும் வித்வான்கள், வெறும் ஊர்வலத்திற்காக முன்னால் வருபவர்கள் அல்லர். ஒரு ராகத்தை எடுத்து அதில் மணிக்கணக்கில் ஆலாபனை செய்யத் தொடங்கினால் மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளி நிற்கும் சுவாமியும் அந்த இசையை நின்று கேட்கும். வித்வானே அந்த பாடலை முடித்து அந்த இடம் விட்டு நகர்ந்தால் தான் கூட்டமும் சாமியும் நகரும், அந்த அற்புதமான நாட்களுக்கு நம்மை அழைத்து போகிறது இந்த நூல்.

1921ல் பிறந்த திரு. காருகுறிச்சி அருணாசலத்திற்கு 2021ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கான முன்னெடுப்பாக அவரை பற்றி ஒரு கட்டுரை எழுத தலைப்பட்டிருக்கிறார் ஆசிரியர் லலிதாராம். காருகுறிச்சியாரின் பேரன் திரு. தீபக்கின் துணையுடன் திருநெல்வேலி, திருச்செந்தூர், கோவில்பட்டி என்று காருகுறிச்சியார் வாழ்ந்த, கச்சேரி செய்த இடங்களுக்கு சென்று பார்க்கிறார். அங்கு சந்தித்த வயதான ரசிகர்கள், வித்வான்களுடன் எல்லாம் காருகுறிச்சியாரை பற்றியும் அவரின் அபாரமான வாசிப்பை பற்றியும் தங்கள் நினைவுகளை சிலிர்ப்புடன் பகிர்ந்து கொள்கிறார்கள். திருச்செந்தூரில் ஒரு வயதான ரசிகர் பேசவே இல்லையாம் கண்ணை மூடி ஒரு நிமிடம் அந்த இசையை அசைபோட்டு அப்போதும் உடல் சிலிர்த்தாராம் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அந்த சிலிர்ப்பு அப்படியே எஞ்சி நிற்கிறது என்றால் அது எப்படிப்பட்ட கானமாக இருந்திருக்கும் ! என்னே காருகுறிச்சியாரின் மேதமை ! தொன்னூத்தி எட்டு வயதான தஞ்சை சங்கர ஐயரை அந்த பெருந்தொற்று காலத்தில் சந்தித்து பேசி அவரை பாடவைத்து கேட்டதெல்லாம் மிக பெரிய பிராப்தம் தான், அது எழுத்தாளர் கிருஷியால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது.

காருகுறிச்சி ஊரில் இருக்கும் காருகுறிச்சியாரின் சிலை வெகு சுமாராகவே இருக்கிறது, அதற்கான கதையை கேட்டால் மனம் நெகிழ்ந்து போகிறது. சிலை செய்ய ஏழை மக்களிடமிருந்து வசூல் செய்துவிட்டு ஒருவர் கடைசி நேரத்தில் ஊரைவிட்டு ஓடிவிட, அந்த நேரத்தில் குயவர்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் செய்த சிலையாம் அது. பார்க்க அழகாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த சிலையில் நாதம் ததும்பி வழிகிறது. திருச்செந்தூர் திருவிழாக்களில் இசைப்பதென்பது காருகுறிச்சியாருக்கு மிகவும் பிரியமாம். ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவிலில் அவர் நடத்திக் கொடுத்த கச்சேரிகள் அநேகம் என்கிறார்கள். இன்று வரை அங்கு நிகழும் ஆடித் திருவிழாவிற்கு அனைத்து வித்வான்களும் வந்து வாசித்துவிட்டு போவார்களாம். அந்த கோவிலில் தான் குடியரசு தினத்தன்று டெல்லியில் காருகுறிச்சியார் கச்சேரி செய்த போது எடுத்த படங்களும் செய்திகளும் ஆசிரியருக்கு கிடைக்கிறது. கருக்குறிச்சியாரின் நாட்டுப் பற்றும் கதராடையும் வெகு பிரசித்தமான ஒன்று என்பதற்கான சாட்சி அது. காருகுறிச்சியாரின் மகள் திருமதி சுப்புலட்சுமி அம்மாளின் நினைவுகள் நெகிழ்ச்சியாக பதிவுசெய்ய பட்டிருக்கிறது.

காருகுறிச்சியாரை பற்றிக் கூறும் போதே அவரின் குரு திரு. ராஜரத்தினம் பிள்ளையை பற்றி கூறிக் கொண்டே வருகிறார் ஆசிரியர். குருவின் வாசிப்பு ஒரு காட்டாறு போல நம்மை அடித்துச் செல்லும் என்றும் சிஷ்யனின் வாசிப்பு நிதானமாக நதியில் மூழ்கி திளைப்பதை போல ஒரு இன்ப லாகிரியில் நம்மை திளைக்க வைக்கும் என்றும் நிறைய வித்வான்களே கூறுகிறார்கள். காருகுறிச்சியாரின் உசேனியை கேட்டு பலநாட்கள் இராஜரத்தினம் பிள்ளையே திகைத்து ஒரே இடத்தில் நின்றுவிடுவாராம், இப்படி இவர்கள் மாம்பலம் பனகல் பார்க் ரோட்டில் நின்று வாசித்து பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது, எனினும் குருவோ காருகுறிச்சியார் வாசிப்பு முடிந்த பிறகு தான் நகர்ந்தார் என்று சுவாரஸ்யமான பல குறிப்புகளும் புத்தகத்தில் உண்டு.

காருகுறிச்சியாரின் தந்தை பலவேசம் பிள்ளை, பூக்கட்டி விற்கும் தொழில் செய்து வந்திருக்கிறார், அவர் எப்படி ஒருநாள் நடேச பிள்ளையின் நாதத்தை கேட்டு நாதஸ்வர வித்வானாக மாறினார், காருகுறிச்சியார் எப்படி ராஜரத்னம் பிள்ளைக்கு சிஷ்யனாக மாறினார் என்ற சம்பவத்தை "சால கல்லலாடு.." என்ற சிறுகதை வடிவில் அற்புதமாக எழுதி இருக்கிறார் ஆசிரியர் லலிதாராம் அவர்கள். கடம்பூரில் போளி விற்கும் வேம்பு என்ற எளிய மனிதருக்காக புகழின் உச்சத்தில் இருந்த நேரம் கடம்பூர் ரயிலடி விநாயகர் கோவிலில் ஒரு கச்சேரி வாசித்துக் கொடுத்த கதையை "நேனெந்து வெது குதுரா" என்ற சிறுகதையாக எழுதி மனதை நெகிழவைக்கிறார் லலித்தாராம். உசைனி என்ற அத்தியாயம் வெகு ஜோராக இருந்தது, தஞ்சாவூர்காரரும் திருநெல்வேலிக்காரரும் தங்களுக்குள் குரு சிஷ்யர்களைப் பற்றி விவாதிப்பதாய் அமைந்த அந்த அத்தியாயம் வெகு அழகு.

காருகுறிச்சியாருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இருந்த நெருக்கம் பற்றியும் சிவாஜி வீட்டு விழாவில் ஷெனாய் வாசித்த பிஸ்மில்லாகானை இது போல வாசிக்க ஆளில்லை என்று அனைவரும் பாராட்ட கோபம் கொண்ட சிவாஜி உடனே காருகுறிச்சியாரை அதே ராகத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்றாராம். முதலில் தயங்கிய காருகுறிச்சியார் பிறகு பிஸ்மில்லாகான் உணவு உண்ண சென்று விட்ட பிறகு அதே ராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்து அசத்தி இருக்கிறார், அதை கேட்ட பிஸ்மில்லாக்கான் ஓடி வந்து காருகுறிச்சியாரை அணைத்துக் கொண்டாராம். காருகுறிச்சியாரின் நூற்றாண்டை வொட்டி நாறு மாணவர்களுக்கு இலவசமாக நாதஸ்வரம் வழங்கி இருக்கிறது ஆசிரியர் லலிதாராம் நடத்தும் பரிவாதினி அறக்கட்டளை. அரிய இசை ஆளுமைகளை ஆவணப் படுத்தி வருகிறார் ஆசிரியர் லலிதாராம் அவர்கள். இவ்வ்ளவு வாசித்த பிறகு காருகுறிச்சியாரின் உசைனியை கேட்காமல் தீராது என்று அதை ஒலிக்கச் செய்தால் மனம் பாகாய் உருகி ஓடியது, என்ன ஒரு வாசிப்பு. இசை பிரியர்கள் விட்டுவிட கூடாத அற்புத நூல் இது. இந்த புத்தகத்தினை எழுத்து பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.