தொடர்கள்
கதை
கைமேல் பலன் - முனைவர் என்.பத்ரி

20250514091536679.jpeg

நான் அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன். பேருந்தினில் பெண் பயணி ஒருவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். அந்தக் கூச்சலை எழுப்பியது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர்தான்.

பயணிகள் ஒவ்வொருவராக பேருந்தினை விட்டு இறங்கி சென்றுக் கொண்டிருந்தார்கள். நகரில் மனிதம் முழுக்கமாக மறைந்து விட்டதாகவே நான் உணர்ந்தேன்.என்னுடைய தங்கையாக அவளை நினைத்துக் கொண்டு, கைத்தாங்கலாக பேருந்தினை விட்டு மெதுவாக அவளை இறக்கினேன். பேருந்து நடத்துனரின் அழைப்பின் பேரில்108 அவசர ஊர்தி விரைவில் அந்த இடத்தை வந்து சேர்ந்தது.

அவசர ஊர்தியிலிருந்து இறங்கி வந்த ஒரு பெண்மணி விரைவாக செயல்பட்டாள்.மயக்கத்திலிருந்த அந்த பெண்மணியுடன் என் உள் மனம் என்னை போகச் சொன்னது.

அவசர ஊர்தி புறப்பட்டது. ஏறத்தாழ அரை மயக்கத்தில் இருந்த அவள்,என்னுடைய கையில் ஒரு கைப்பேசி எண்ணை எழுதினாள்.

அடுத்த 15 நிமிடங்களில் அவசர ஊர்தி ஓர் அரசு மருத்துவமனையின் வாசலில் போய் நின்றது. மருத்துவமனை ஊழியர்கள் விரைவாக செயல்பட்டார்கள்.

முதலுதவி கொடுக்கப்பட்ட பிறகு வெளியில் வந்த நர்ஸ் ஒரு படிவத்தில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டு சென்றார். ‘அவர்களுக்கு இன்று இரவு குழந்தை பிறந்து விடும்.’என்று சொன்ன அவள் அடுத்த நிமிடம் மாயமானாள்.

அவள் கொடுத்த அந்த கைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.அடுத்த ஒரு ஒரு மணி நேரம் பொறுத்து நான் அழைத்த கைபேசி எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அடுத்த முனையில் இருந்த அந்த ஆண் குரல் தன்னுடைய பெயர் இரவி என்று சொல்லிக் கொண்டது. அந்தப் பெண்மணி குறித்த விவரங்களைச் சொன்னேன். அவள் தன்னுடைய மனைவி பார்வதிதான் என்றுச் சொல்லி மருத்துவமனையின் விவரங்களை கேட்டுக்கொண்டார்.

விரைவாக மருத்துவமனைக்கு வந்த அவர், தன்னுடைய மனமார்ந்த நன்றியை எனக்கு சொன்னார். திருமணமாகியும் நீண்ட நாளாக குழந்தை இல்லாத அவர்களுக்கு அன்று இரவு குழந்தை பிறப்பது குறித்து தனது மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அதற்குள் என்னுடைய மனைவி கமலாவிடமிருந்து எனக்கு குறைந்தது 10 அழைப்புகள் வந்திருக்கும்.நான் நிலைமையைச் சொன்னேன். நன்றாக புரிந்து கொண்டாள்.

நான் இரவியிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்வதற்கு இரவு மணி 11 ஆகிவிட்டது. நடந்த நிகழ்வுகளையெல்லாம் மனைவி கமலாவிடம் சொன்னேன். அவள் உள்ளபடி என்னை பாராட்டினாள். இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதனா?என்று மிகவும் சிலாகித்து என்னை பாராட்டினாள்.திட்டுவாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவளின் பாராட்டு வியப்பினைத் தந்தது.

மேலும்,’உங்களுடைய நல்ல குணத்திற்கு உங்களுக்கு நல்லதே நடக்கும்’. என்றாள். இதையேத்தான் பார்வதியின் கணவன் இரவியும் மருத்துவமனையில் சொன்னார்.

மனதில் இன்று ஒருவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த ஒரு உதவி குறித்து மிகவும் மகிழ்ந்த நான் அன்று இரவு நன்றாகத் தூங்கினேன்.

மறுநாள் காலை இரவி தனக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்த குழந்தைக்கு என்னுடைய பெயரைத்தான் சூட்டப்போகதாகவும் கூறினார்.எனக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

தொடர்ந்து வந்த கைப்பேசி அழைப்பில், பேசிய என்னுடைய அலுவலக மேலாளர் என்னை விழுப்புரக் கிளைக்கு மேலாளராக பதவி உயர்வு கொடுத்து தலைமை அலுவலகத்திலிருந்து மின்னஞ்சலில் ஆணை வந்திருப்பதாகச் சொன்னார்.மனைவியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

எனக்கு பதவி உயர்வு கிடைத்ததில் அவளுக்குத்தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. தினமும் அவள் அவளுடைய அம்மாவை பார்க்கலாமே!

என்னிடம் நெருங்கி வந்து, ’என்னங்க நீங்க நேற்று இராத்திரி அந்த பொண்ணுக்கு பண்ண உதவிக்கு இன்று கை மேல் பலன் கிடைத்துவிட்டதுங்க’ என்று சொல்லியபடியே என்னுடைய வாயில் ஒரு இனிப்பை திணித்தாள்.

அதற்கு வழக்கம் போல் தலையை ஆட்டிவிட்டு அலுவலகம் செல்ல பேருந்தினை பிடிக்க வேகமாக நடந்தேன்.