தொடர்கள்
கவிதை
"நாங்கள் மனிதர்களல்ல" - ‎இர.மணிகண்டன்

20250813064733530.jpeg

‎வீசத்தொடங்கிய லேசானக் காற்று

‎புயலெனத் தோன்றியது

‎உதிர்ந்து கொண்டிருக்கும்

‎ரோஜா மலருக்கு!

‎கொஞ்ச நேரம்

‎வலது புற இலையிலும்

‎கொஞ்ச நேரம்

‎இடது புற இலையிலும்

‎சாய்ந்தபடி தன்னை

‎நிலைபடுத்திக் கொண்டிருந்தது.

‎மேலிருந்த இலை

‎சற்றுக் குனிந்து

‎காற்றின் வேகத்தைக்

‎குறைக்க முற்பட்டது!

‎முள்கள் யாவும்

‎சற்றுத் தடிமனான தண்டினால்

‎பற்றிக் கொண்டு

‎பூவை அசையாமல் காத்தன!

‎கவனித்துக் கொண்டிருந்த

‎ரோஜாப்பூ கேட்டது

‎என் துன்பத்தைத் தங்கள்

‎துன்பமாகக் கருதி

‎என்னைக் காக்க இவ்வளவு

‎துயருற்றுப் போராடுகிறீர்களே,

‎இதற்குக் காரணம் தான் என்ன?

‎இலைகளும், முள்களும்,

‎தடிமனானத் தண்டுகளும்

‎கோரஸாகச் சொன்ன வார்த்தை

‎"நாங்கள் ஒன்றும் மனிதர்களல்ல"

‎***