தொடர்கள்
ஆன்மீகம்
மெலட்டூர் பாகவத மேளா - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20250410115343184.jpeg

தஞ்சாவூர் கலைகளின் தாய்மடி.அதில் சந்தேகமே இல்லை. இங்கிருந்து புறப்பட்டு உலகையே வசப்படுத்திய கலைகள் ஏராளம்.. அப்படிப்பட்ட தஞ்சைப் பகுதியில் இருக்கும் அழகிய கிராமம் தான் மெலட்டூர். எங்கும்பச்சைபசேல் வயல்கள். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் சோலைகள் .

இந்த ஊர் பற்றிச் சொன்னால் போதும் சட்டென்று எல்லோருடைய மனதிலும் நினைவுக்கு வருவது பாகவத மேளாதான்.

இந்த வருடம் இந்தப் பாகவத மேளா வரும் மே 10/5/25அன்று தொடங்கி 19/5/25 அன்று நிறைவடைகிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கலையோடு நெருங்கி செயல்பட்டுகொண்டுருப்பவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 2002 இல் கலைமாமணி பட்டம் பெற்றவரும்,ஆந்திர தெலுங்கானா அரசால் 2023 ம் வருடம் Pratibha Puraskar விருது பெற்றவரும். பிரகலாத சரித்திரத்தில் ஹிரண்ய கசிப் பாத்திரமாகவே மாறி கடைசி க்ளைமேக்ஸ் காட்சியில் மிக உணர்ச்சிமயமாக அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தவருமான, எஸ் .குமார், நிர்வாக அறங்காவலர் பாகவத மேளா நாட்டிய சங்கம் மெலட்டூர் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகத் தோற்றமளிப்பவர். சாந்தமான முக தோற்றத்தையும் கனிவாக எல்லோரிடமும் பேசும் குணமும் பெற்றவர்.

20250410115405259.jpeg

இவரா ஹிரண்யகசிபு நாடகத்தின் climax காட்சியில் கிட்ட தட்ட 30 நிமிடம்.ஹிரண்யகசிபு வதத்தில் .அவ்வளவு உணர்ச்சிபூர்வமான நடிப்பால் மெய்சிலிர்க்க வைத்த நபர் என்று வியக்க வைத்தவர்..

மெலட்டூர் பாகவத மேளா குடும்பத்தைச் சேர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாக முக்கிய வேடத்தில் நடித்து வருபவர்.

20250410115750221.jpeg

இவரது மூத்த சகோதரர் எஸ். நடராஜனின் மறைவுக்குப் பிறகு பாகவத மேளா பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, இந்நாள் வரை திறம்பட நடத்தி வரும் இவரிடம் பாகவத மேளா பாரம்பரியம் குறித்த விளக்கங்கள் கேள்வி பதிலாகப் பெற்றோம்.

20250410115810863.jpeg

பாகவத மேளா எப்படி யாரால் முதன் முதலில் இந்த மெலட்டூர் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.?

“பாகவத மேளா பழைமை வாய்ந்த பக்தி மார்க்கத்தின் ஒரு பகுதி.பாகவதலு அல்லது பாகவதர் என்று அழைக்கப்படுபவர்கள் இதனைச் செய்தார்கள். அதனால் தான் இதற்குப் பாகவத மேளா என்றபெயர்வந்தது.இந்தக்காலம்முழுவதும்,பாகவத மேளாவின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, நடனம், நடிப்பு, பாடுதல் போன்ற அனைத்து வேடங்களும் ஆண்களால் மட்டுமே நடத்தப்படும்.

பாரம்பரிய நடனத்தை விரும்புவோருக்கு, பாகவத மேளா கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இசையை விரும்புவோருக்கு, பாகவத மேளாவில் பாரம்பரிய கர்நாடக இசை சிறப்பாகக் காணப்படுகிறது. நாடகத்தை விரும்புவோருக்கு, பாகவத மேளா என்பது பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் வகுக்கப்பட்ட நமது பண்டைய நாடக பாரம்பரியத்துடன் ஒரு உயிருள்ள இணைப்பாகும்.

இவ்வாறு பாகவத மேளா என்பது ஆன்மீகம், நடனம், நாடகம் மற்றும் கற்பு பாரம்பரிய இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும்.

பாகவத மேள நாடகத்தில், பாகவதர்கள் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் புராணக் கதைகளைப் பாடுகிறார்கள்,ஆடுகிறார்கள்.

பக்திக்காக ஏற்பட்டது என்ற காரணத்தினால் இந்த் கலையானது கோயில்களிலும் அதனைச் சுற்றிலும் இன்றளவும் நடந்து வருகிறது.

இதனுடைய பாரம்பரியம் சோழ நாட்டில் கி பி பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கியது.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, பல நேரங்களில் பல இடையூறுகளுக்கு உள்ளானாலும், அப்படியே தேங்கி விடாமல் தொடர்ந்து செயல் பட்டு வருவது தான் இதன் சிறப்பு.

பதினாறாம் நூற்றாண்டு தொடங்கிய இந்த நிகழ்வுக்கு இடையில் இடையூறு என்று சொன்னீர்கள். எப்படிப்பட்ட தடங்கல்கள் ?

1932 ம் வருடம் பாகவத மேளாவுக்கு முக்கியக் காரணகர்த்தா பரதம் நடேசய்யர் நோய்வாய்ப்பட்டுக் காலமானார்..இதனால் நாடக நிகழ்ச்சி மெலட்டூரில் நின்று போனது.

1938,ம் வருடம் என் தாத்தா வெ. கணேசய்யர் அவர்கள் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கினார்.

காலமான நடேசய்யர் அவர்களின் சீடர்கள் பலர் அப்போது மெலட்டூரில் இருந்தனர். அவர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டார், என் தாத்தா.

உங்கள் தாத்தா தன்னுடைய 40 ஏக்கர் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமா விற்று இந்தக் கலையை வளர்ப்பதற்காகச் செலவிட்டார் என்று கேள்விப்பட்டோம்; அதைப் பற்றி. …

ஆமாம் நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். தாத்தா ஒரு தீவிர நரசிம்ம பக்தர். கிராம மக்களிடம் நிதி திரட்டி ,தன் நிலத்தை விற்ற பணத்துடன், ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சிலையை ஐம்பொன்னால் ஆக்கி உற்சவ மூர்த்தியாக வடிவமைத்துப் பிரதிஷ்டை செய்தார்.

தன்னுடைய. நாற்பது ஏக்கர் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு வருடா வருடம் உற்சவம் நடத்தினார்.

உங்கள் தாத்தா வை பாகவத “மேளாவின் தந்தை “என அழைக்கப் பட்டதாக அறிந்தோம். எப்படி அந்தப் பெயர் வந்தது?.

உண்மை தான். 1941 ம் வருடம் மெலட்டூர் ஶ்ரீ வரதராஜ பெருமாள் சந்நிதி முன்பாகப் பிரகலாத சரித்திரம் என்ற நாட்டிய நாடகத்தினை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் இந்தப் பாகவத மேளா என்னும் கலை உயிர்த்து எழுந்தது .அது எங்கள் குடும்பத் துக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறோம்.

அவர் தொடங்கி வைத்த இந்தக் கலை,மூலம் அவருக்கு இந்தப் பட்டப் பெயரை மக்கள் சூட்டி கொண்டாடினார்கள்.

உங்கள் தாத்தா மறைவுக்குப் பிறகு எப்படி இந்தக் கலை உயிர்த்தெழுந்தது?

பதில். தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தந்தையார் கலைமாமணி ஜி சுவாமிநாதன் பாகவத மேளாவின் பொறுப்பினையும்,முக்கிய வேடங்கள் ஆன ஹிரண்யகசிபு, ஹரிச்சந்திரன் வேடங்களை ஏற்று மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். இந்த நேரத்தில் என் தாயார் ஶ்ரீமதி கல்யாணி அவர்களின் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது.

என் தந்தைக்குப் பிறகு என் அண்ணா நடராஜன் வசம் இந்தப் பொறுப்பு வந்தது. இன்றைக்கு இந்தக் கலை உலகம் முழுவதும் சேரக் காரணமாக இருந்தவர் அவர் தான்.

.அது மட்டுமல்ல பெண் வேடங்களான லீலாவதி, சந்திரமதி முதலிய பாத்திரங்களை ஏற்று மிக நளினமாகத் தத்ரூபமாக நடித்து வந்தார்.

உங்கள் கூற்றுப்படி இந்தக்கலை வடிவம் உயிர்ப்போடு தொடர்வதற்கு எது காரணம் என்று சொல்வீர்கள் ?

ஆமாம் .இன்றளவும் இந்தக்கலை உயிர்ப்போடு தொடர்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் இதில் பங்கேற்கும் அர்ப்பணிப்பு மிக்கக் கலைஞர்கள். கடந்த 80 வருடங்களாக எந்த வித சன்மானமும் இல்லாமல் ஆணடவனுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார்கள். அவர்களின் ஆழ்ந்த பக்தியும் இந்தக் கலையின் மீதான ஈடுபாடு மட்டுமே காரணம்.

இந்தக் கலை இவ்வளவு வருடங்கள் தொடர்வதற்கு ஊராரின் பங்கு எப்படிப் பட்டது ?

கண்டிப்பாக ஊர் மக்களின் ஒத்துழைப்பு போற்றத்தக்கது. இந்தக் கலையை வளர்ப்பதற்குப் பலபேர் தூண்கள் ஆக இருந்துள்ளனர்..எவ்வளவு கலை விற்பன்னர்கள், ஜாம்பவான்கள் அது ஒரு பெரிய லிஸ்டை தரும்.

குறிப்பாகப் பரதம் காசி நாதய்யா, வீரபத்ராய்யா போன்றவர்களுடன் வெங்கட்ராம சாஸ்திரி 12 நிருத்ய நாடகங்கள் எழுதி உள்ளார். அவர் தந்தைககு தாய் மொழி தெலுகு . அப்படியே அவர் மகன் வெங்கட்ராம் சாஸ்திரிகள் எழுதிய நாடகத்தைத் தான் இன்றும் பின் பற்றிகிறோம் .

நாங்கள் கடந்த 84, வருடங்களாக இந்த மெலட்டுரில் எழுந்தருளி யிருக்கும் ஶ்ரீ வரதராஜ பெருமாள் சந்நிதியின் முன்பாக அந்த 12 நாடகங்களை நடத்திக்கொண்டு வருகிறோம்.

இந்த வருடம் மே 11 அன்று ஶ்ரீ நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு பிரகலாத சரித்திரத் துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் படுகின்றன.

இந்த நாட்டிய நாடகங்களைப் பொறுத்து ஜீவன் என்றால் இசை தான். அந்த இசைக் கலைஞர்கள் பற்றி……

இங்கு இசை தான் ஜீவன். ஆரம்பக் காலங்களில் பாகவத மேளாவின் குருவாகவும் , சூத்திர தாரியாகவும் இருந்து வந்த ஶ்ரீ கிருஷ்ணமூர்த்திச் சர்மா சங்கீத சாம்ராட் என்று அழைக்கப்படும் திருகருகாவூர் ஜி ஶ்ரீனிவாச ராகவன் , வீரராகவன் மிகவும் பக்தியோடு எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் பாகவத மேளாவின் இசையைப் பெரிய நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அதற்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாகத் திருவையாறு சகோதரர்கள் எஸ் நரசிம்மன்,முனைவர் எஸ் வெங்கடேசன் பின் பாட்டிலும் மற்றும் நாகை பிரபு ஶ்ரீராம் மிருதங்கதிலும்,கண்ணன் பாலகிருஷ்ணன் சுத்த மத்தளம் கஞ்சிராவிலும். கோகுல கிருஷ்ணன் புல்லாங்குழலிலும், ஏ.வி துரை வயலினிலும் , ஒரு தெய்வார்ப்பணமாகத் தொண்டாற்றி வருகின்றனர்.

முக்கியமாக வெங்கட்ராம் சாஸ்திரிகள் தன் சாகித் தியங்களில்,பொதுவான ராககங்களைப் பயன்படுத்தினாலும் மிகவும் அரிதான வழக்கத்தில் இல்லாத ராகங்களையும் உபயோகப்படுத்தி உள்ளார். உதாரணத்துக்கு . மெலட்டூர் கண்டா ,ஆகிரி போன்ற ராகங்கள்பாகவத மேளாவில் உபயோகப்படுத்தும் கண்டா மெலட்டூர் கண்டா என்றே அழைக்கப்படுகிறது.

மாறி வரும் இந்த நவீன உலகில் பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன இத்தகைய சூழலில் பாகவத மேளாவின் நிலைமை வரும் காலங்களில் எப்படி இருக்கும்?

ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவர் மீண்டும் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு,

“இந்தக் கலை அழிந்து போகும் துர்பாக்கியம் நேரவே நேராது. இவ்வளவு தன்னம்பிக்கையுடன் நான் சொல்ல காரணம் அடுத்தத் தலைமுறை இளைஞர்கள் இந்தக் கலையில் மிகுந்த ஈ டுப்பாடு காட்டத் தொடங்கி உள்ளார்கள்.

திருவையாறு சகோதரர்களின் வாரிசுகள் வெங்கட கிருஷ்ணன், வெங்கடசுப்ரமணியன் இருவரும் ஆறு வருடம் முன்பே இந்தக் கலைக்குத் தயாராகி இப்போது நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்கள்.

இந்த இளைஞர்கள் இன்னும் சுமார் 25 வருடங்களாவது பாகவத மேளாவின் இசையினை முன்னெடுத்துச் செல்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

அது போல் நடன கலைஞர்களாக அனுபவம் வாய்ந்த ஶ்ரீ காந்த் நடராஜன் சந்திரமதி, சீதா ,ருக்மணி போன்ற பெண் பாத்திரங்களையும், விஜய் மாதவன்,அரவிந்த் போன்ற இளைஞர்கள் இந்தக் கலையின் மேல் உள்ள ஆர்வத்தினாலும் பக்தியாலும் மிகவும். மகிழ்ச்சியுடன். பங்கேற்கிறார்கள்.

அது ஏன்? எட்டு வயது நிரம்பிய சுதர்சன் நாகை ஶ்ரீராம் அவர்களின் புதல்வன் கடந்த வருடம் நடந்த அரங்கேற்றத் தில் பிரஹலதானாக நடித்து தெலுகு வசனங்களை, உள் வாங்கி ஏற்ற இறக்கத்துடன் பேசி நடித்தது எல்லோராலும் பாரட்டப்பட்டது.

அது மட்டுமல்ல தெலுங்கு கீர்த்தனைகளை .ஆரோகண ஆவரோகணத்துடன் பாடுவது சாதாரண வேலை இல்லை. அதை அந்தப் பாலகன் திறம்படச் செய்தான்.

இன்னும் சில இளைஞர்கள் வாய்ப்புக்காக. காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது. நல்ல மாற்றம் தானே! அவர்களுக்கு இந்தக் கலையில் ஆர்வம் இருப்பது தான் காரணம்.பின் எப்படி இந்தக் கலை அழியும் ?

இந்தக் கலையில் ஈடுபட்டு தொண்டு ஆற்ற . வெளியூரிலிருந்து வரும் கலைஞர்களுக்குத் தங்கும் இட வசதி,உணவு வசதி செய்து தரப்படுகிறது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை வெற்றிகரமாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் இன்னும் புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் இந்தக் கலை இன்னும் செழிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு நாள் விழா எடுப்பதே சவாலாக உள்ள இந்தக் காலக் கட்டத்தில், பத்து நாள் திருவிழாவாக 84 வருடம் முடித்து விட்டு இப்போது 85 வது வருடம் இந்தப் பாகவத மேளா வை கொண்டாடி வருகிறீர்கள் .... ?

இந்த நிகழ்வை நடத்தி முடிப்பதில் பல்வேறு பொருளாதாரச் சவால்கள் உள்ளது என்பது உண்மை தான். வருடாந்திர மஹோத்ஸ்வம் பலருடைய உதவியுடன் நடைபெறுகிறது. கலை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறார்கள். உள்ளூர் மக்களின் நிதி உதவி அவர்கள் சேவை மிகவும் உன்னதம்..

ஆனாலும் இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் நிச்சயம் இந்தப் பாகவத மேளா காலம் காலமாகத் தொடரும்.என்கிற நம்பிக்கை திடமாக உள்ளது. .

இதைச் சொல்லும் போது குமாரின் கண்கள் கலங்கியதை பார்க்க முடிந்தது.

கலைகளை ஆதரிப்பது என்பது நம் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது. நம் வேர்களான பக்தியையும் மரபையும் பாதுகாப்பது. அப்படிப்பட்ட உத்தமமான காரியத்தில் குமாருடைய தாத்தா,அவர் அப்பா,அவர் சகோதரர் இப்போது குமார்,அவருடைய இளைய சகோதரர் அண்ணா பையன்கள் பங்கேற்று நடத்தி வரும் புண்ணியக் காரியத்தில் நாமும் பங்களிப்பது அவசியம் தானே.!

மெலட்டூர் பாகவத மேளா 2025 இன் நேரடி நிகழ்ச்சியைக் காண, நீங்கள் MDnD வலைதளத்தில் சீசன் டிக்கெட்டை வாங்கலாம் . வாங்கிய பிறகு, நேரடி ஒளிபரப்பை அணுக உங்களை அனுமதிக்கும் மின்னஞ்சல் வழியாக ஒரு இணைப்பைப் பெறுவீர்கள். சீசன் டிக்கெட் திருவிழாவின் அனைத்து நேரடி ஒளிபரப்புகளுக்கும் அணுகலை வழங்குகிறது, இது www.mdnd.in இல் ஒளிபரப்பப்படும்.

கலைகளின் பூமியான தஞ்சை மண்ணில் இந்தப் பாகவத மேளா தொடர நம் வாழ்த்துகளையும் பங்களிப்பையும் செய்தோம் என்னும் நிம்மதி கொள்ளலாம்.

இன்னும் நூற்றாண்டு இந்தக் கலை வளரும் என்கிற நம்பிக்கை நம் மனதிலும் தோன்றியது.

www.melattur-bhagavata mela.org.

www.mdnd.in