தொடர்கள்
பொது
விண்வெளியில் ஒரு சூரியமின்நிலையம்-தில்லைக்கரசிசம்பத்

20250505212458847.jpg

விண்வெளியில் இருந்து சூரியஒளியை சேகரித்து பூமிக்கு அனுப்பி மின்சாரமாக மாற்றும் ஜப்பானின் திட்டம் விண்வெளி சூரியமின்சக்தி (Space-Based Solar Power (SBSP))என்கிறார்கள்.

நிலவிற்கு அருகில் உள்ள நிலையான சுற்றுப்பாதையில் (geostationary orbit) பெரிய சோலார் பேனல்கள் (solar panels) அமைக்கப்படுகின்றன. இவை எப்போதும் சூரியனைக் காணும் இடத்தில் இருப்பதால், எந்நாளும், தொடர்ச்சியாக ஒளி பெறமுடியும்.

சூரியஒளி மின்சக்தியாக மாற்றப்பட்ட பிறகு, மைக்ரோவேவ்(microwave)/லேசர்கதிராக(laser) உருமாற்றி, பூமியிலுள்ள ஒரு கதிர் வாங்கி நிலையத்துக்குள் அனுப்பப்படும். அங்கே சிறப்பு ஆண்டனாக்கள் (rectennas) அந்த லேசர்கதிரை பிடித்து, அதை மீண்டும் மின்சாரமாக மாற்றும்.

2025-ல் தொடங்கிய ஜப்பானின் JAXA(Japan Aerospace Exploration Agency) இந்த முக்கியமான சோதனை, தற்போது குறைந்த அளவில் சூரியஒளியை சேகரித்து, அதை பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பும் முயற்சி நடக்கிறது.

2030-க்குள் இத்தொழில்நுட்பம் முழுமையாகும். இத்திட்டம் மிகுந்த செலவு பிடிப்பது மட்டுமின்றி, விண்வெளியில் பிரமாண்ட சூரிய ஒளித்தகடு வரிசைகள்(solar arrays)அமைப்பதும் சிக்கலானது.

லேசர்கதிரை பாதுகாப்பாக பூமிக்கு அனுப்புவது மிகப்பெரிய சவால். இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய மதிப்பில் தோராயமாக ரூ83,000கோடியிலிருந்து ரூ8.3 லட்சம்கோடிகள் வரை செலவாகும்.

பூமியில் நமது வழக்கமான சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க 1மெகாவாட்டுக்கு 1மில்லியன் டாலர் ஆகிறது.

விண்வெளி சூரியமின்சக்தியில் அதே 1மெகாவாட்டுக்கு 20-30 மில்லியன் டாலர்கள் செலவாகும் .

இவ்வளவு செலவா என்று மலைப்பாக இருந்தாலும் தடையில்லா சூரிய ஒளியால் தங்குதடையற்ற மின்சாரம் வந்துக்கொண்டே இருக்கும் என்பதால் வருங்காலத்தில் அது லாபம் .

நிலநடுக்கம்,சுனாமி,புயல் ஆபத்து உள்ள ஜப்பான், மின்சக்திக்கு அணுமின்உலையை மட்டுமே நம்பியிருந்தால் என்றைக்குமே ஃபுகுஷிமா விபத்து போன்ற ஆபத்து இருக்கிறது.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் பெரும்செலவிற்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பதால் பிரச்சனை இல்லை.

இத்திட்டம் வெற்றிகரமாக மாறும் பட்சத்தில், அது பசுமைஆற்றல் (Green Energy) துறையில் ஒரு பெரும்புரட்சியாக விண்வெளி சூரிய ஒளிமின்சக்தி திட்டத்தில் ஜப்பான் முதல் நாடாக வரும்.

இத்திட்டத்தின் மிகப்பெரிய பயன் நிலநடுக்கம், புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகளில் பொதுவாக மின்சாரம் முடங்கிவிடும்.

அத்தகைய இடங்களுக்கு விண்வெளி மூலம் நேரடியாக மின்சாரம் அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளலாம்.

மற்ற சிக்கல்களும் இல்லாமல் இல்லை.

விண்வெளியிலிருந்து மின்சாரம் லேசர்கதிராக பூமிக்கு அனுப்பும்போது அது ஒரே இடத்தில் கோடி வாட்ஸ் சக்தியை குவித்து ஒரே பாய்ச்சலாக வரும்போது மனிதர்கள், பறவைகள், விமானங்கள் குறுக்கே வந்து தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

லேசர்கதிர்பூமியின் தவறான இடத்தில் விழும் அபாயமும் உள்ளது.

விண்வெளியில் சூரியமின்தகடுகள் வைக்கப்படும்போது, அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.

இத்தொழில்நுட்பம் வெற்றிப்பெறும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஒரு கணினி,அல்லது வீடு நேரடியாகவே விண்வெளியிலிருந்து மின்சாரம்(focused beam) பெறும்நாள் வெகுதொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா,சீனா,ஐரோப்பிய நாடுகள்,தென்கொரியா என ஜப்பானுக்கு அடுத்தபடியாக வரிசைக்கட்டி நிற்கின்றன.

மனிதஇனம் ஆக்சிஜனுக்கு அடுத்தப்படியாக மின்சாரசாதனங்களை நம்பி வாழ்கிறது.

மின்சாரம் இல்லாமல் எதிர்காலம் இல்லை. இத்திட்டம் வெற்றிப்பெற்றால் நம் பூமியின் நிலத்தடி வளங்களை மனிதன் வெறிக்கொண்டு சுரண்டுவது ஓரளவு குறையும் என்பதால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி பூமிப்பந்தை மீண்டும் பசுமை உருண்டையாக்கலாம்.