பட்டுப் புடவையில் வெற்றிலை பாக்கு பழங்கள் பத்திரிக்கை மஞ்சள் குங்குமத்துடன் சுகுணா கிளம்பிவிட்டாள். மகள் திருமணத்திற்கு மாதவன் மாமா வந்தால் அவளுக்குப் பெருமை. ஆனால், மாமா இப்போது எப்படிஇருக்கிறார் என்று எந்தத் தகவலும் இல்லை. எப்படியோ புது முகவரி வாங்கிசித்தியுடன் வீட்டை நெருங்குகிறாள்.
கல்யாணமான புதிதில் புகுந்த வீட்டில், எந்த வார்த்தையையும் தாங்க முடியாதமகா பலவீன மருமகளாக இருந்தபோது, வரிந்துகட்டிக்கொண்டு சப்போர்ட்செய்த முதல் ஆம்பளை ஆத்மா.
மாதம் ஒரு முறையோ இரு முறையோதான் அங்கு வருவார். அவர் நுழையும்போதே மனதில் பலம் கூடும். யாரையாவது குறை சொன்னால்,“இப்போ இந்த டாபிக் வேணுமா?” என்று சொல்வார். பெண்களைஅதட்டினால், அதட்டியவர்களை அதட்டுவார். சாந்தமான மாதவப்பெருமாளாக இருந்தவர் ருத்ர மூர்த்தியாவதைப் பார்க்கவேண்டுமே!
…வழியெல்லாம் சித்தியிடம் மாமா புராணம் பாடிக்கொண்டேயிருக்க,அத்தனையையும் ஆமோதித்த சித்தி, “அவருக்கு அப்போ பிரகாசமான வயசு. நாப்பது அம்பது வரை எல்லாமே நல்லாதான் இருக்கும். உடம்பு படுத்தா மனசும் படுத்திடும். வயசு ஓய்ஞ்சு போகும்போது, வாய் ஓயாமப் போகும். ஆனா, அதுல நல்லதா நாலு வார்த்தை வருமா? ம்ஹூம். இதுல வியாதியும் வந்துட்டா… கோழிக்கால் மாதிரி மனசு பழசையே கிளறிக் கிளறி எல்லாரையும் சபிக்கும். இதான் எல்லாருக்கும் விதிச்சது… யார் தப்பிச்சா?” என்று பாடம்எடுத்தாள்.
*** *** ***
சுகுணா பழசையெல்லாம் மனதில் புரட்டிக்கொண்டிருந்தாள்.
“வாம்மா… நீ தான் குத்து விளக்கு ஏத்தணும்…” - முதல் நாள் மாமியார்அழைத்தார். சுகுணாவிற்கு இடது கைப்பழக்கம். அம்மா வீடு, படிப்பு,விளையாட்டு, வேலை எல்லா இடத்திலும் இப்படியே பழகிவிட்டது. இங்கேவயதான உறவுகள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று உதற ஆரம்பித்தது.
அப்போதுதான் மாதவன் மாமா அறிமுகம். மனைவியோடு வந்திருந்தார். முதல்சந்திப்பு. பத்து வருஷம் பழகியதுபோல், ஓர் ஒளிப்புன்னகை செய்தார். சின்னப்பெண்ணாகிய தன்னை அவர் கையெடுத்துக் கும்பிட்டது சுகுணாவுக்கு முதல்அதிர்ச்சி.
எந்த விஷயத்திற்கும் அவரிடம் இன்னொரு கோணம் இருந்தது. அவரிடம் ஜவுளி வாங்கி விற்ற ஒரு வியாபாரி ஆறு மாதம் பணத்திற்கு இழுத்தடித்தார்.எப்படியோ, அவரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு கோடு போடாத செக் பத்து நாள் தள்ளி தேதி போட்டு வாங்கி வந்துவிட்டார். வங்கியில் போய் பணம் கேட்டால் போதிய பணம் இல்லை. வங்கி குமாஸ்தா தெரிந்தவர் என்பதால் ஐநூறு குறைவாக உள்ளது தெரிந்தது. மாமா உடனே குறையும் பணத்தையும் சற்று கூடுதலாகவும் சேர்த்து, தன் கையில் இருந்து, வியாபாரியின் கணக்கில் கட்டிவிட்டார். வேண்டிய பேலன்ஸ் வந்தது. செக்கை பணமாக மாற்றிக்கொண்டு வந்தார். ஒன்பதாயிரம் வசூல். ஆயிரம் நஷ்டம். தள்ளுபடி.
ஒருவகையில் அவர் அம்மா கீதாவிடமிருந்து வந்தது, இந்த சாமர்த்தியம்.முன்பு, குடும்பத்துடன் சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் சத்திரத்தில் இரவு தங்கி ஒரு மண்டலம் சேவைக்குப் போனபோது, கைக்கடிகாரம் நின்றுவிட்டிருந்தது. கும்மிருட்டு. முழிப்பு வந்து குளத்தில் குளிக்கப்போனவர்களை கீதா நிறுத்தி, முந்தைய நாள் உறை இட்ட பால் பாத்திரத்தை இலேசாக ஆட்டிப் பார்த்து, “மணி மூணுகூட ஆகலை. இப்போபோகவேண்டாம்” என்று சொன்னாராம். சமயோசிதம்.
*** *** ***
இடதுகையால் விளக்கு ஏற்றினால் என்ன நினைப்பார்கள்… என்று சுகுணா தவிப்பதை மாமா எப்படிக் கவனித்தாரோ,
“வலது கைல குச்சியைப் பிடிச்சுக்கோம்மா. உன்னோட ஃபவரைட் இடதுகைலதீப்பெட்டியைப் பிடி. இப்போ ஏத்து…”
சின்ன யோசனை… பதற்றமில்லாமல் அங்கே விளக்கு பிரகாசித்தது.
*** *** ***
மாமாவின் வீட்டில் நுழையும்போது, மனைவி இல்லாத ஒரு வீட்டில்நுழைந்த வாசனை அறவே இல்லை. வேலையாள் வைத்தே இப்படிப்பராமரிக்க முடியுமா? எல்லோருக்கும் சூடாக பாதாம் பால் வந்தது.படுத்தபடியே எல்லோரையும் வேடிக்கை பார்த்தார்.
“என்ன ஆச்சு மாமா? நடக்க முடியலையா…?” - முதுகுத் தண்டில் சர்ஜரி, முதுமை கவ்விய உடம்பு… ஏதாவது அங்கலாய்த்தால் ஆறுதல் சொல்லலாம்என்று சுகுணா தயாராகத்தான் இருந்தாள். எத்தனை பேசிய மாமா! இப்போதுஎந்த விசாரிப்புக்கும் அவரிடமிருந்து மொத்தமாக, மெளனமாக ஒருதலையசைப்பு. அதே ஒளிப்புன்னகை.
பத்திரிக்கையை நீட்டிவிட்டு, “கண்டிப்பா வரணும்னு கண்டிஷன் போடமுடியல… ஆனாலும், வந்து கொடுக்கணும்னு தோணுச்சு!” என்று எழுந்தாள், சுகுணா.
எல்லோரும் வாசலில் போனபிறகு, சுகுணாவைக் கையசைத்து அழைத்தார்.குனிந்த அவளது காதில் சன்னமாக ஏதோ முணுமுணுத்ததை சித்தி கவனித்தாள்.
*** *** ***
வண்டி கிளம்பியபோது, சித்தி, “பாவம்… வாழ்க்கை முழுக்க அடுக்கடுக்கா எவ்ளோ ரணம்… காதுல என்னடி புலம்பினாரு மாமா?”
சுகுணா… அவர் சொன்னதை அப்படியே சொன்னாள்.
“ நற்பவி… நற்பவி… நற்பவி…”
*** *** *** *** *** *** ***
Leave a comment
Upload