ஐதராபாத்தில் ,2025-ம் ஆண்டுக்கான 72-வது உலக அழகிப் போட்டி நடந்தது. இந்தியாவில் மூன்றாவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில், 108 நாடுகளை சேர்ந்த 110 அழகிகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு ‘ஃபெமினா மிஸ் இந்தியா’வாக தேர்வான நந்தினி குப்தாவும் பங்கேற்றிருந்தார்.
'பியூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடந்த இந்த அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று கடந்த மே 31-ம் தேதி இரவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த இறுதிச் சுற்றில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா, எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த ஹஸெட் டெரிஜி, மார்டினிகை சேர்ந்த ஆரேலியா ஜோச்சேம், போலந்து நாட்டை சேர்ந்த மஜா லாஜா ஆகிய 4 பேரும் தகுதி பெற்றனர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா முதலிடத்தைப் பெற்றார். ஹஸெட் டெரிஜி 2-வது இடத்தையும், மஜா லாஜா 3-வது இடத்தையும், ஆரேலியா ஜோச்சேம் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
22 வயதே ஆன ஓபல் சுசாட்டா, 107 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை வீழ்த்தி, உலக அழகியாக வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, நடப்பு ஆண்டு உலக அழகியான ஓபல் சுசாட்டாவுக்கு கிரீடம் சூட்டினார்.
இதுகுறித்து ஓபல் சுசாட்டா கூறுகையில், “மார்பக புற்றுநோய் என்ற எனது நோக்கத்தை தொடர விரும்புகிறேன். புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உலக அழகி பட்டத்தின் மூலம், புற்றுநோய் குறித்து எதிர்காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முடியும். இறுதிப் போட்டியில் நான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு குழப்பம் வந்துவிட்டது.
ஏனென்றால், நானும் எனது நாட்டு மக்களும் 72 வருடங்களுக்கு மேலாக இந்த கிரீடத்திற்காக காத்திருக்கிறோம். என் நாட்டுக்கு என் மூலமாக முதல் கிரீடம் கிடைத்துள்ளது. என் தலையில் கிரீடம் சூட்டும்போது, எனது குடும்பம், மக்கள் முகம்தான் நினைவுக்கு வந்தது!” என உணர்ச்சி பொங்க பேசினார்.
Leave a comment
Upload