தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 24 24. வாழ்த்து இங்கே, புகார் அங்கே! -மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250506192028768.jpeg

நெய்வேலியில் வசித்த போது அவனது தினசரி வழக்கம் காலை ஏழு மணிக்கெல்லாம் தபால் ஆபீசுக்கு சென்று தன் கடிதங்களைப் பெற்றுக் கொள்வது. சில அழைப்பிதழ்கள் தாமதமாக வரும். தபால்களைப் பொறுத்துதான் அவன் தன் வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்வான்.

அவன் செல்லும்போது, ஸ்கூட்டர் சவாரிக்கு ஆசைப்பட்ட அவனது இரண்டரை வயது மகள் அதில் முன்புறத்தில் ஏறி நின்று கொள்வாள். அவன் போஸ்ட்மாஸ்டரை சந்திக்கும்போது அவளும் உடன் இருப்பாள். வரலட்சுமி என்ற பெண் ஊழியர், அவளிடம் சில தாள்களையும் பேனாவையும் கொடுத்து ஏதாவது படம் வரையச் சொல்வாள். வீட்டிற்கு வரும் தபால்காரர் சந்திரன் ‘‘என்ன பாப்பா?’’ என்று நலம் விசாரிப்பார். இதற்கிடையே போஸ்ட்மாஸ்டரும் அவனும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் அன்று காலை வெளிவந்த செய்தியைப் பற்றி.

ஒரு வருடம் பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக தபால் ஆபீசுக்கு சென்றான். வழக்கம் போல் குசலம் விசாரித்த போஸ்ட்மாஸ்டர் அவன் மகளைப் பார்த்து, ‘‘பாப்பா உனக்கு எந்த சாமி படம் பிடிக்கும்?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘இந்தா சாமி படங்கள்’’ என்று சில பொங்கல் வாழ்த்து அட்டைகளைக் கொடுத்தார். அவன் கேட்டான், ‘‘சார், குழந்தைகளிடம் இவற்றை கொடுக்கிறீர்களே? இதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேர வேண்டாமா?’’

அதற்கு ‘‘சார் வரும் போது சில வாழ்த்து அட்டைகள் தனியாகவும், முகவரி கொண்ட கவர் தனியாகவும் வந்திருக்கின்றன. அப்படியும் சில கவர்களில் வாழ்த்து அட்டைகளைப் போட்டு வைத்திருக்கிறோம். அனுப்பிய இடத்திலோ வழியிலோ கழன்றுவிட்ட அட்டைகள் இவை. தபால் பைகளை துழாவித் துழாவிப் பார்த்தாலும் முகவரி கவர்கள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட வாழ்த்து அட்டைகள் இங்கே சில இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தை குழந்தையிடம் கொடுத்தேன். டெலிவரி செய்ய முடியாத வாழ்த்து அட்டைகளைத்தான் குழந்தையாவது சந்தோஷப்படட்டுமே என்று கொடுத்திருக்கிறேன்.’’

தபால் ஆபீசுக்கு போனோம், தபால்களை வாங்கிக் கொண்டு வந்தோம். குழந்தைக்கு சந்தோஷத்துடன் சில வாழ்த்து அட்டைகள் கிடைத்தன என்ற அளவோடு அவன் அந்த நிகழ்ச்சியை ஒதுக்கிருக்க வேண்டாமோ? போஸ்ட்மாஸ்டரிடம் இதேபோல் இரண்டு, மூன்று நாட்களாக முகவரி கவர் இல்லாத வாழ்த்து அட்டைகள் வந்திருக்கின்றனவா? என்று கேட்டதற்கு, ‘‘நிறைய வந்துள்ளன, இனியும் வரும்’’ என்றார்.

ஏனென்றால் இந்த வாழ்த்து மடல்களின் கவர்கள் ஒட்டப்படுவதில்லை, புக்போஸ்ட் என்ற சலுகை காரணமாக. கவர் திறந்திருக்க வேண்டும், உள்ளே உள்ள வாழ்த்து அட்டை சிறியதாக இருந்தால், நான்கைந்து இடங்கள் மாறி மாறி வரும்போது அவை இப்படி தனித்தனியாகவோ, கவர் இல்லாமலோ வந்துவிடுகின்றன. நேற்றும் வந்தது, இன்றும் வந்தது, நாளையும் வரும்’ என்றார். ஆர்.எம்.எஸ். அலுவலகங்கள் இரவில் திறந்திருக்கும் என்பதனால் விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்.-ஸைப் பார்த்து விட்டு இரவு ரயிலில் விழுப்புரம் சென்று, அங்கிருந்த ஆர்.எம்.எஸ்.ஸில் தபால் பைகள் குவிந்திருப்பதை பார்த்துவிட்டு ஆர்.எம்.எஸ். ஊழியர்களை இதுதொடர்பாக விசாரித்துவிட்டு, அதிகாலை ரயிலில் விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் திரும்பினான்.

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் அனுப்புவது ஒரு பழக்கமாக இருந்தது. வெவ்வேறு விலைகளில், வெவ்வேறு வண்ணங்களில் வாழ்த்து வாசகங்களுடன் பொங்கல் வாழ்த்துகள் கிடைத்தன. ஆனால் அந்தக் காலத்தில் பொங்கல் சமயத்தில் தபால் அலுவலகங்களிலும், ஆர்.எம்எஸ். என்று அழைக்கப்படும் ரெயில்வே மெயில் சர்விஸ் அலுவலகங்களிலும், பொங்கல் வாழ்த்து அட்டைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, வேறு தபால் பைகளில் போடப்பட்டிருக்கும். இந்த வாழ்த்து அட்டைகள் அதிகம் குவியும்போது சில கிழிந்துவிடுகின்றன. சிலவற்றில் முகவரி கவர் காணாமல் போய்விடுகின்றன என்பதை விருத்தாசலத்திலும், விழுப்புரத்திலும் அவன் நேரில் சென்று தெரிந்து கொண்டான். அவர்கள் சொன்னார்கள், “சாதாரண தபால்களுக்கே முன்னுரிமை. வாழ்த்து மடல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் டெலிவரி செய்வோம்” என்றார்கள் ஆர்.எம்.எஸ்.காரர்கள்.

அவன் திரட்டிய தகவல்களைக் கொண்டு ‘Pongal yet to be’ என்ற தலைப்பில் சுவாரஸ்யமாக ஒரு செய்தியை எழுதி அனுப்பினான். மறுநாள் பெட்டிச்செய்தியாக அது வெளிவந்து, பல வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. வாசகர்கள் இதை ரசித்தாலும், அவனுக்கு வேறுவிதத்தில் ஒரு சங்கடம் வந்தது. அவனுக்கு மட்டுமா? அந்தப் பத்திரிகையின் முதலாளிக்கும்தான், எப்படி?

இந்த செய்தி வந்த தினத்தில் சென்னையில் ஹிண்டு ஆசிரியர் குழுவில் இருந்த ஒரு நண்பர் போன் செய்தார், இப்படி நடந்தது உரையாடல்:

‘‘என்னப்பா இப்படிப் பண்ணிட்டியே? தபால் தாமதமாக வருவது சகஜம்தானே. இதை போய் பெரிசு பண்ணி எழுதிட்டியே?’’

அப்படியில்லை. பொங்கல் வாழ்த்தை மக்கள் உரிய நேரத்தில் தபால் பெட்டியில் போட்டாலும், தாமதமாக டெலிவரி செய்யப்படுகிறது. அதுதவிர கார்டு தனி, கவர் தனி என்று கிழிந்துவிடுகிறதே? அதனால் ஏற்படும் சிரமங்களை அல்லவா எழுதினேன்Õ.

‘வாழ்த்து மடல்கள் அதிகம் குவியும்போது தாமதம் ஏற்படுவது இயற்கைதானே? அதைப் பெரிதுபடுத்தலாமா?’

‘‘சரி நான்தான் ஏதோ எழுதிவிட்டேன்? நீங்கள் ஏன் பிரசுரித்தீர்கள்? என் செய்தியை நிராகரித்து இருக்கலாமே?’

‘‘அதெப்படிப்பா, செய்தி சுவாரஸ்யமாக இருந்தது பிரசுரித்துவிட்டோம். இப்போது பிரச்சனை இந்த ரூபத்தில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.”

‘‘என்னதான் பிரச்சனை?”

‘‘போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எடிட்டருக்கு, உன் செய்தியைவிட நீளமாக புகார் கடிதம் எழுதிவிட்டார்.‘”

‘‘எழுதட்டுமே? எப்போதுமே செய்திகளில் குறிப்பிடப்படுவர்கள் கோபப்படுவார்கள். புகார் செய்வார்கள். இதெல்லாம் நமக்கு பழக்கம்தானே?‘”

‘‘அப்படியில்லை, சம்பந்தி சண்டை வந்துவிடும் போலிருக்கிறது?”

“என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லையே?”

‘‘அடுத்த வாரம் நம் நிர்வாக ஆசிரியர் கஸ்தூரியின் மகனுக்கும், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மகளுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி. ஏதோ உன்னால் ஆன கைங்கரியம்.”

‘‘எனக்கு அந்தத் திருமணம் பற்றி எதுவும் தெரியாது? சுவாரஸ்யமான செய்தி எதுவாக இருந்தாலும் எழுதத்தான் செய்வேன். இதில் சங்கடமும் இருந்தது, சுவாரஸ்யமும் இருந்தது.”

‘என்னவோ போ’ என்று சொல்லிவிட்டு நண்பர் தன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். இரண்டு நாட்களில் செய்தி ஆசிரியர், K..நாராயணன், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எடிட்டருக்கு எழுதியிருந்த கடிதத்தின் நகலை அனுப்பி பதில் கேட்டிருந்தார். அவன் நெய்வேலி போஸ்ட் ஆபீஸ் சம்பவம் தொடங்கி விருத்தாசலத்திலும், விழுப்புரத்திலும்,

ஆர்.எம்.எஸ். அலுவலகங்களிலும் தபால் பைகளைப் பார்த்து, தகவல் சேகரித்ததை பதிலாக எழுதியிருந்தான். பிறகு அலுவலகம் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

தபால் ஆபீஸ் மத்திய அரசாங்கத்தின் துறை. மாநில அரசாங்கத் துறை என்றால் போஸ்ட்மாஸ்டரின் மேல்அதிகாரி, போஸ்ட் மாஸ்டரிடம் அந்த நிருபரை அலுவலகத்தில் அனுமதிக்காதீர்கள் என்று சொல்லியிருக்கும்.