ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 'ஹார்வெஸ்டிங் ரோபாடிக்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது. இது, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்களைப் பயன்படுத்தி, விளைநிலங்களில் களை அகற்றுதல், உரமிடுதல், அறுவடை செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் ‘டென்வர்’ என்பவரை, தங்களின் குழுவில் இணைத்துள்ளது. இது, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. ‘டென்வர்’ என்பது ‘கோல்டர் ரிட்ரீவர்’ வகை நாய்!
இந்த நாயை ஹார்வெஸ்டிங் ரோபாடிக்ஸ் நிறுவனத்தின் 'முதன்மை மகிழ்ச்சி அதிகாரி' (Chief Happiness Officer) ஆக நியமித்து உள்ளதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் அரெபகா தகவலை பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ராகுல் கூறுகையில், “எங்களுடைய குழுவில் புதிதாக சேர்த்துள்ள ‘முதன்மை மகிழ்ச்சி அதிகாரி’ டென்வர். அவருக்கு உடைகள் குறித்து விதிகள் இல்லை, அவர் எதற்கும் கவலைப்பட மாட்டார். அவர் வந்ததுமே பலரின் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டார். குழுவினரை எப்போதுமே உற்சாகமாக வைத்திருக்கிறார். அவரை எங்கள் குழுவில் சேர்த்தது சிறந்த முடிவு. அதிகாரபூர்வமாக எங்கள் பணியிடம், இதன்மூலம் செல்லப் பிராணிகளின் நண்பன் என்கிற அடையாளத்தையும் பெற்றுள்ளது!” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
மனிதன், செல்லப்பிராணிகள் பிணைப்பு ஆராய்ச்சி கழகமான ஹப்ரி (Human Animal Bond Research Institute) என்ற நிறுவனம், ‘பணியிடத்தில் செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் 91 சதவிகித ஊழியர்கள் வேலையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதாக கூறுகிறது. மேலும் 85 சதவிகித பேர் உடல்நிலை சரியில்லாத காரணத்தைத் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் அலுவலகத்திற்கு தவறாமல் வந்துவிடுவதாகவும் தெரிவிக்கிறது.
அலுவலகங்களில் செல்லப் பிராணிகளை சேர்ப்பது மனஅழுத்தத்தை குறைத்து, அனைவருடன் அதிகம் கலந்து பேசும் வாய்ப்பை வழங்குவதாகவும், பணியிட மனஉறுதியையும் செல்லப் பிராணிகள் மேம்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் செல்லப் பிராணிகளை பணியிடங்களில் அனுமதிப்பதற்கான கொள்கைகளை நீண்ட காலத்துக்கு முன்பே செயல்படுத்தி வருகின்றன
Leave a comment
Upload