
ஜானகி அம்மா நம் பால்யத்தின் நினைவுகளில் நிறைந்திருக்கும் பெயர் .
வானொலி காலத்தில் இருந்தே அக்குயில் குரலுக்கு உரியவரை நாம் அறிவோம். ' நேயர் விருப்பம், விரும்பிக்கேட்டவை ,தேன் கிண்ணம் ' மற்றும் இலங்கை வானொலி என்று அலைக்கற்றைகளை மாற்றி மாற்றி கேட்ட தலைமுறையில் வந்தவருக்கு 'ஜானகி' என்னும் பெயரும், அந்த மாயம் நிகழ்த்தும் குரலும் மறப்பதிற்கில்லை. இன்று தொலைக்காட்சி காலத்தில் பிறந்து வளர்ந்தவர்க்கும் , இணையத்தில் இணைபவர்களும் இவ்வுண்மையை மறுப்பதில்லை.
"தேனோடு கலந்த தெள்ளமுது
கோல நிலவோடு சேர்ந்த குளிர்தென்றல்" என்று ஜெமினி கணேசன் அறிமுகம் செய்த குரல் அல்லவா அது.
சிங்காரவேலன் சந்நிதியில் 'சிங்காரவேலனே தேவா' என்னும் பாடலை .காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசையுடன் ,ஜானகியின் குரல் குழலாக இழைந்தோடிய விந்தையை கேட்டு வியந்த போது நான் சிறுமி. இன்னும் சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இளம் பெண்களும், சிறுமியரும் அப்பாடலைப் போலவே பாட முயற்சிப்பதும் , அப்பாடலுக்கு வெகு அருகில் நெருங்கி செல்வதும் அழகு.
பல பழம்பெரும் இசையமைப்பாளர்களின் இசையில் ஜானகி அம்மா பாடி இருக்கிறார்கள்.எம்.எஸ்.வி யின் இசையை உயிரோட்டத்துடன் கலந்துப் பாடினார்,
"இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்' போலீஸ்காரன் மகள் பாடலில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்த மென்சோகம் ததும்பும் பாடல் எந்நாளும் மறக்க முடியாத பாடல்.
"பொன்னென்பேன், சிறுபூவென்பேன்" என்னும் அதே படத்தின் பாடல் இன்னும் ஒரு மறக்க இயலாத பாடல்
.அழகுக்கும் , மலருக்கும் ஜாதியில்லை, நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை ' ,
'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள், காணாத கண்களை காண வந்தாள்'
'சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி'
'ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி' :
கூந்தலிலே நெய் தடவி,குளிர் விழியில் மை தடவி'
'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா " பாடல் மட்டுமல்ல ,பாடல் காட்சியும் கூட நினைவில் ரீங்காரம் இடுகிறது.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்" போன்ற பாடல்கள் ஜானகியின் குரலில் அத்தனை அழகு
ஜானகி அம்மாவின் திரை வரலாற்றை , 'இளையராஜாவுக்கு முன் , இளையராஜாவுக்குப் பின்'என்றே பிரித்தே எழுதலாம், எழுத வேண்டும் .
'அன்னக்கிளி' அவருக்கு புனர்ஜென்மம் தந்த படமாக, ஒரு அறிமுகப்படகி போன்ற வரவேற்பை தமிழ் மக்களிடம் பெற்று தந்தது.
இளையராஜாவின் பல ஹிட் பாடல்களை ஜானகியும் எஸ்.பி.பியும் பாடினார்கள். ஊர் உலகில் இல்லாத பூவான 'செந்தூரப்பூவே ' பாடல் பட்டி தொட்டி எல்லாம் இரவு பகலாக ஒலித்தது. அன்னக்கிளி பாடல்கள் அத்தனையும் ஹிட் .
ஜானகிக்கு தேசிய விருது தேடி வந்தது
'சிப்பி இருக்குது , முத்தும் இருக்குது' பாடலில் ஸ்வரங்களைப் பின்னுவதும் , "இஞ்சி இடுப்பழகா " வில் வாயில் தாளம் போடுவதும் அவரது குறும்புக்குரலில் இனிமையாய் ஒலித்தன.
'கண்மணியே காதல் என்பது, கற்பனையோ'
"வா வா அன்பே, அன்பே '
'"ஊரு சனம் தூங்கிடுச்சி '
'காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி?
காற்றில் எந்தன் கீதம்..
தென்றல் வந்து என்னைத் தொடும் '
மாங்குயிலே ,பூங்குயிலே சேதி ஒன்னு கேளு...
'"அழகு மலராட " என பாடல்கள் வரிசை கட்டி வருகின்றன
" சின்னத்தாயவள் தந்த ராசாவே " பாடலில் அவர் குரல் காட்டும் தாய்மை நாம் தனித்திருந்து கேட்கும் போது நம்மை விம்மி அழ வைக்கும்.
அவ்வாறே, அனிருத் இசை அமைத்த "அம்மா அம்மா நீ எங்க அம்மா " என்று தனுஷுடன் பாடும் பாடலும் அதே வித உணர்ச்சிகளைக் கடத்தும்.
ஏ.ஆர் .ரஹ்மானின் இசையில் பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்
"மார்கழி திங்கள் அல்லவா " கர்நாடக சங்கீதத்தில் ஓர் அழகிய பாடல்.
ஒட்டகத்தைக் கட்டிக்கோ
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
நெஞ்சினிலே நெஞ்சினிலே
கத்தாழை காட்டு வழி " இந்தப் பட்டியலும் ஒரு நீண்ட பட்டியல் தான்.
பல பல இசை அமைப்பாளர்கள் ,பல பாடல் ஆசிரியர்கள், பல படங்கள் . இப்பாடல்களுக்கு உதட்டசைத்த பல பல நடிகையர்கள் ,ஆனால் எல்லோருக்கும் ஒரே விதமாக ஒத்துழைத்த ஒப்பற்ற பாடகி எஸ் .ஜானகி
டி.எம்.எஸ் முதல் தனுஷ் வரை தலைமுறை தாண்டி அவருடன் பாடிய பாடகர்கள் ஏராளம் .அவற்றை எல்லாம் தேடி எழுதுவதும் ,ஆவணமாக்குவதும் சுலபமில்லை.
"கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது.
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது ' என்று அவர் பாடிய பாடலுக்கு அவரே பொருத்தமானவர்.
இப்போது பாடுபவர்களுக்கும், இனி பாட வருவோர்க்கும் அவர் பாடல்கள் இலக்கணமாகவும், இலக்கியமாகவும் இருக்கும் .
நன்றி ஜானகி அம்மா !!
அந்த இசை தேவதையின் குரலில் ஏராள பாடல்கள் வலைதளத்தில் இருக்கின்றன. ஒரு சாம்பிளுக்கு இங்கே...


Leave a comment
Upload