தொடர்கள்
அழகு
தந்ததும் பெற்றதும் - மோகன் ஜி

20250524221322497.jpg

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் உருக்கமும் நயமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எப்போது படித்தாலும் நம்மை நெகிழச் செய்யும் பாமாலை அது.

அதிலிருந்துஒரு சில வரிகளை இன்று சிந்திப்போம்

பதிகம்:

தந்தது உன் தன்னை - கொண்டது என் தன்னை!

சங்கரா! ஆர் கொலோ சதுரர்?

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என் பால்?

சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்

திருப்பெருந்துறையுறை சிவனே!

எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.

இந்த எளிய இனிமையான பாடலுக்கு பொருள் காண்போம்:

சங்கரனே! ஒப்பிலாத உன்னையே எனக்குக் கொடுத்து விட்டாய்! ஆனால் பதிலுக்கு எதை ஏற்றாய்? என்னைத் தானே ஈடாகப் பெற்றுக் கொண்டாய். இப்போது சொல்! நம்மிருவரில் யார் கெட்டிக்காரர்?

உன்னை அடைந்த பேற்றால் நானோ முடிவில்லாத பேரானந்தத்தைப் பெற்றேன்.

ஆனாலும் என்னால் நீ அடைந்த பயன் ஏதுமுண்டோ? எதுவுமில்லை அல்லவா?

எனது சித்தத்தையே கோயிலெனக் கொண்ட எம்பெருமானே!

திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே!

எனது தந்தையே!

ஈசனே!

எனது உடலையும் உன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டாய்!

உன்னுடைய இந்த உதவிக்கு நான் என்ன தான் கைம்மாறாக செய்துவிட முடியும் ஐயனே!

மேல் விளக்கம்:

‘யார் சதுரர்?’ (கெட்டிக்கார்) கேலியாகச் சொன்னதில் மாணிக்கவாசகர் எடுத்துரைப்பது, ‘உயர்ந்த ஒன்றுக்காக தாழ்ந்த ஒன்றை சிவனார் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது பெருமானின் எல்லையில்லாக் பெருங்கருணையையே ஆகும்.

இந்தப் பாட்டில் முதலில் என் சித்தத்தைக் கோயிலாகக் கொண்டாய் சிவனே! என்ற மாணிக்கவாசகர், அடுத்து என் உடலையும் இருப்பிடமாகக் கொண்டாய் என்று தொடர்கிறார். கோயில் என்றாலே பரமனின் இருப்பிடம் அல்லவா? பின் ஏன் சித்தத்தையும் அடுத்து உடலையும் குறிப்பிடவேண்டும்?

சிந்தையில் தெய்வம் குடிகொண்டு விட்டால், தன்னால் உடலும் தன்னை தெய்வத்தன்மை பூண்டொழுக தயார் செய்து கொண்டு விடும். உடலை இயக்கும் புலன்கள் இறையுணர்வுக்கு லயப் பட்டுவிடும். பக்தியால் சிந்தை பெற்ற அகத்தூய்மை, உடலின்பால் புறத்தூய்மையையும் ஏற்படுத்தி நெறியில் நிற்க ஏற்றதாக்கி விடும்.

திருமூலர் ‘உள்ளமே பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்…’ என்றது இவ்வகையில் தான்.

பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலுக்குத் தானே இறைவன் எழுந்தருளினார்?

‘என்ன கைம்மாறு செய்வேன் சிவனே!’ என்று மாணிக்க வாசகர் கேட்பதில் சிந்திக்க இடம் உண்டு.

பிறரிடம் தாம் பெற்ற உதவிக்கு பிரதியுபகாரமாக அதற்கான விலையையோ, உழைப்பையோ தந்து விடலாம்.

கைம்மாறு செய்யவே முடியாத உதவிகளும் உண்டு தாமே?

உண்மையான நட்புக்கும், பேராபத்தில் கிடைத்த உதவிக்கும், பெற்றோர் நம்மை ஆளாக்கியதற்கும் சரிநிகர் கைம்மாறு என ஏதும் உண்டோ?

பரம்பொருளே தன் அவ்யாஜ கருணையினால் நம்மைச் சேர்வதற்கு என்றானால், அதற்கு எது தான் கைம்மாறாகி விடும்?!