தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் - குறள் பார்வை - தமிழ்நந்தி

20250527151821321.jpg

இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மகாபாரதம் காலந்தோறும் பல வடிவங்களில் மக்களிடம் சேர்க்கப்பட்டு வருகிறது.

• ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து

• மகாபாரதம் தொலைக்காட்சி தொடர்கள்

• நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படம்

• சுகி சிவம் அவர்களின் காலட்சேபம்

குர்சரண் தாஸ் எழுதிய The Difficulty of Being Good: On the subtle art of Dharma புத்தகம் முக்கிய பாத்திரங்களைப் பற்றிய புதிய பார்வை கொடுத்தது.

பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் டால்ஸ்டாயால் காந்தியடிளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறளுக்கு உரை எழுதாத ஆசிரியர்களே இல்லை எனலாம்; மு வ, வ உ சி, நாமக்கல் கவிஞர், ராஜாஜி, கலைஞர், அரங்கண்ணல், சுஜாதா, சாலமன் பாப்பையா ஆகியோர் சிலர். வைரமுத்து இணைவார்.

முத்தமிழ் அறிஞர் கி ஆ பெ விஸ்வநாதம் அவர்கள் எழுதிய சில புத்தகங்கள் குறளை இப்படியும் அணுக முடியுமா என்ற சிந்தனையை தூண்ட ' மகாபாரத மாந்தர்கள் குறள் வழி பார்வை' கிடைத்தது; குறள் 932 நம்பிக்கை கொடுத்தது. சரித்திர புராண நாயகர்கள் குறித்த குறள் வழி பார்வை கொண்ட இந்த முயற்சியில் பிழை இருப்பின் பொறுத்தல் வேண்டுகிறேன்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

மகாபாரதத்தில் கதை வாயிலாக மாந்தர்களின் செயலும் அவர்தம் போற்றுதல் தூற்றுதல் மூலம் பாத்திரங்களின் குண நலன்களும் புலனாகின்றன. குறள் வழிப்பாதையில் அவர்கள் சென்றார்களா என நாம் பார்ப்போம்.

20250527151856278.jpg

நகுஷன்

பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட இந்திரன் பதவியை விட்டு நீங்கியதால், பூலோகத்தில் நல்ல அரசனாக இருந்த நகுஷனுக்கு தேவராஜ பதவி வந்தது. தவறான எண்ணத்தால் இந்திரன் மனைவி மீது மையல் கொண்டு அவளை அடைய விரும்பினான். தேவர்கள் கூறிய ஆலோசனைகளை ஏற்காது, இந்திராணியிடம் "மூன்று லோகங்களுக்கும் நான் அதிபதி; என்னை பதியாக அடைவாயாக" என்றான். அவள் (தன் பதியான) இந்திரனை கண்டு ஆலோசித்துவிட்டு நகுஷனை ரிஷிகள் பல்லக்கு தூக்க வரச் சொன்னாள். அவனும் பல்லக்கில் ஏறி, மோகம் தலைக்கேற முனிவர்களை வேகமாக செல்ல சொன்னதோடு அகத்திய முனிவரை காலால் உதைத்து ஸர்ப்ப ஸர்ப்ப (வேகமாக போ போ) என்றான். அவரோ (நீ) சர்ப்பமாக கடவது என சாபம் அளிக்க, பல்லாண்டு மலை பாம்பாக கிடந்தான்; பீமனை கண்டான்;பிடித்துக்கொண்டான். தருமன் வந்து வணங்கி சம்வாதம் செய்து விடுவித்தான். நகுஷனும், தருமனை ஆசீர்வதித்து, சொர்க்கத்துக்கு (மீண்டும்) சென்றான்.

குறளும் பொருளும்

பிறன் மனைவியை விரும்பும் மடத்தனம் தேர்ந்த அறிவுள்ளவர்களிடம் இருக்காது.

பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம் பொருள் கண்டார்கண் இல் 141

உலகத்திலேயே நன்மைக்குரியவர் பிறர் மனைவியை தொடாதவர்.

நலக்குரியர் யாரெனின் நாம நீர் வைப்பின்

பிறர்க்குரியாள் தோள் தோயாதார் 149

ஒழுக்கமுள்ளவர்தான் மேல் ஜாதி; ஒழுக்கம் இல்லாதவர் கீழ் ஜாதி.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும் 133

உயர்ந்த கொள்கை உள்ளவர்கள் கோபத்திற்கு உள்ளானால் அரசனும் ராஜ்யத்தை இழப்பான்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடை முரிந்து

வேந்தனும் வேந்து கெடும் 899

நல்லொழுக்கம் உடையவர்கள் வாய் தவறி கூட கெட்ட வார்த்தை பேச மாட்டார்கள்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல் 139