தொடர்கள்
அனுபவம்
நயத்தகு நற்றிணை 27 -  மரியா  சிவானந்தம் 

20250527170931208.jpg

தலைவி நகைத்துக் கொண்டே இருக்கிறாள்....

அவளது சிரிப்புக்குக் காரணம் என்னவென்று அறியாத தோழி திகைக்கிறாள் .

"என்ன நடந்தது சொல் ?" என்று உரிமையுடன் வினவுகிறாள் .

"நான் என்னவென்று சொல்வேன்?

" நீ என் உயிரைப் பறித்துக்கொண்டவள் " என்று என்னிடம் என்தலைவன் கூறுகிறான் . ஒன்றும் அறியாத சிறு பிள்ளை போல பேசுகிறான். அவன் அல்லவா என் உயிரைப் பறித்துக்கொண்டவன் ?"

என்னதான் நடந்தது என்ற தோழியின் கேள்விக்கு தலைவி கூறுகிறாள்.

" என் தலைவன் என்னிடம் கூறுகிறான் .

"அழகாக பூத்திருக்கும் தாமரை மலர்களில் , சிறந்த பூக்களைத் தேர்ந்தெடுத்து நீலமணிபோன்ற கூந்தலில் சூடிக்கொண்டு நீ நீரலைகளில் தோழிமார்களுடன் சேர்ந்து விளையாடுகிறாய் .

மெல்லிய இடை கொண்டு உலவும் உன் அழகில் நான் மயங்கி விட்டேன் .உன் இனிய பேச்சில்உள்ளம் பறி கொடுத்தேன். உன் அழகிலும் பேச்சிலும் ,என் உயிரைப் பறித்துக் கொள்கிறாய், நீ அணங்கா ?' என்று என்னை வணங்குகிறான் அவன் .

உண்மையில் நடந்தது என்ன தெரியுமா ?

அணிகலன்கள் அணிந்த குதிரைகள் பூட்டிய தேரில் அவன் வரும் அழகில் என்உள்ளத்தையும் , உயிரையும் அவன் பறித்துக் கொண்டான் .

இந்த உண்மை அவனுக்குத் தெரியாமல் , என்னை அவன் என்னை அணங்கு என்னும் போது , எனக்குச் சிரிப்புதான் வருகிறது

பெண்ணை "அணங்கு " என்று அழைப்பது வள்ளுவருக்கும் பிடித்தமானது தானே ?

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. (குறள் 1081)

இந்த நற்றிணைப் பாடலுடன் தொடர்புடைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்குவருகிறது .

'மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் .

மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய் ?

மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன்

உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன் "

'செங்கமலத்தீவு' திரைப்படத்துக்காக எழுதியவர் திருச்சி தியாகராஜன்.

இந்த நற்றிணைக் காட்சியும் திரைப்படம் போலவே உள்ளது ,

இதை இயற்றியவர் அல்லங்கீரனார் .

நகையாகின்றே தோழி! ''தகைய

அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை

மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,

துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,

ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,

தெளி தீம் கிளவி! யாரையோ, என்

அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?'' என,

பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,

தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்

தான் அணங்குற்றமை கூறி, கானல்

சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,

பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

(நற்றிணை -245)

மேலும் ஒரு நற்றிணைக் காட்சியுடன் சந்திப்போம்

-தொடரும்