சுடும் வெயிலில் தனது கோதுமை வயலில் நிற்கும் பஞ்சாபை சேர்ந்த விவசாயி “ 10கிமீ தள்ளி உள்ள வெளிநாட்டின் பெப்சி தொழிற்சாலை ஒரு நாளைக்கு எடுக்கும் லட்சக்கணக்கான லிட்டர் நீருக்கு அவர்கள் வரி செலுத்த வேண்டாம் . ஆனால் என் சொந்த வயலில் என் நிலத்தில் எடுக்கும் நீருக்கு நான் வரி செலுத்த வேண்டும் என அரசு சொல்கிறது. இது என்ன அநியாயம்?” என குமுறுகிறார்.
மத்தியரசு இந்திய விவசாயிகள் தங்கள் வயல்களில் எடுக்கும் நீருக்கு வரி என்று ஒரு திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இது உண்மையா என்று தெரியவில்லை.
ஒரு வேளை உண்மையாக இருந்தால்......
இதற்கு காரணமாக கூறப்படுவது இந்தியாவின் நிலத்தடி நீரில் 80% விவசாயத்திற்காக எடுக்கப்படுகிறது
விவசாயிகள் பல காலமாகவே நீர் அதிகம் தேவைப்படுகிற அரிசி கரும்பு போன்றவைகளை பயிரிடுவது தான் காரணம்.
நமது அரசாங்கம் தானே இப்பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP), மானியங்கள் மற்றும் ஏற்றுமதி கொள்கைகளை இதற்காக வடிவமைத்து விவசாயிகளை ஊக்குவித்தது . இப்போது நிலத்தடி நீர் 80% விவசாயிகள் எடுக்கிறார்கள் என பழிப்போடுவது என்ன நியாயம்?
நீர் அதிகம் தேவைப்படுகிறது என்றால் கால்வாய் கட்டமைப்பு, மழைநீர் சேகரிப்பு திட்டம் என இவற்றை அரசாங்கம் செயல் படுத்தியிருக்கலாமே?
கோகோ கோலா, நெஸ்லே, உணவு பதனிடும் தொழிற்சாலைகள் சிமெண்ட் தொழிற்சாலைகள்,ஜவுளி ஆலைகள் இவை எல்லாம் அளவுக்கதிகமாக நிலத்தடி நீர் எடுக்கின்றன.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் இவற்றை கண்காணிக்கிறதா?
ஒரு புறம் அதானி குழுமம் பிரமாண்டமான தானிய கிடங்குகள், உணவு பதனிடும் இடங்கள், பசுமை ஹைட்ரஜன் ஆலைகள் நிர்மாணம் செய்து வருகிறது.
அம்பானியின் ரிலையன்ஸோ, உழவர் சந்தையில் இருந்து நுகர்வோருக்கு மின்னணு வர்த்தகம், விவசாயப்பொருட்கள் சேமிப்பு மற்றும் விநியோக சங்கிலிகள் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.
பிரமாண்டமான தனியார் நிறுவனங்கள் விவசாயத்தொழிலில் இறங்க ஆயுத்தமாகும் இவ்வேளையில் சிறு விவசாயிகள் விவசாயம் செய்யவே வழியில்லா நிலைமைக்கு இழுத்து செல்லப்பட போகிறார்கள்.
மஹாராஷ்டிரத்தை சேர்ந்த ஒரு விவசாயி “அதிக நீர் தேவைப்படும் கரும்பை பயிரிட சொன்னது அரசாங்கம். இப்போது என்னவென்றால் நீரை வீணாக்குகிறோம் என அரசு எங்கள் மீதே பழிப்போடுகிறது. எங்களை முட்டாள் என அரசு நினைத்துவிட்டதா?” என கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்.
இந்த வரி வசூலிப்பு பணம் மத்தியரசுக்கு செல்லாது . மாநிலரசுகளுக்கு தான் இவ்வரிகள் போகும். இருந்தும் இந்தமுடிவை மத்தியரசு எடுக்க காரணங்களாக சொல்லப்படுவது , இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் உள்ள விளைநிலங்களை மத்திய அரசு மறைமுகமாக கட்டுப்படுத்த முடியும்.
அதுமட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களை விவசாய துறையில் எளிதில் உள்ளே கொண்டு வர முடியும்.
முரண்டு பிடிக்கும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி தர முடியாது என நெருக்கடி கொடுக்க முடியும்.
சர்வதேச முதலீட்டார்களுக்கு நிலத்தடிநீரிலும் வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்க முடியும்.
மத்திய நிலத்தடி நீர்ஆணையம், நிலத்தடி நீரை இஷ்டத்திற்கு உறிந்து, தங்கு தடையின்றி இயங்கும் தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தாமல் நாங்கள் நிலத்தடிநீரை காப்பாற்றுகிறோம்” என்று சொல்லிக்கொண்டு விவசாயிகளின் அடிமடியில் கை வைக்கிறது என்றால் அதன் கவலை சுற்றுச்சூழலைப் பற்றியது அல்ல..
அது தண்ணீரை செல்வாக்கு மிக்கவர்களுக்கு செல்வமாக மாற்றி தருவது பற்றியது எனலாம்.
Leave a comment
Upload