தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 27 இனிப்பதில்லை கரும்பு. - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250527165212570.jpg

கரும்பு சாகுபடி செய்யும் ஊர்களையும், சர்க்கரை ஆலைகள் கொண்ட ஊர்களையும் கொண்ட மாவட்டங்களில் நிருபர்கள் வருடம் தவறாமல் எழுதிவரும் செய்திக் கட்டுரை அரசு நிர்ணயிக்கும் கரும்பின் விலை பற்றியது.

தென்னாற்காடு மாவட்டத்தில் பெண்ணாடம், பெரியசெவலை, நெல்லிக்குப்பம், முண்டியம்பாக்கம், கள்ளக்குறிச்சி, மூங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் உண்டு. அவ்வப்போது ஏதாவது ஒரு செய்திக்காக அங்கு சென்றுவரும் அவன் வருடம் தவறாமல் கரும்பு விலை பற்றியும் விவசாயிகளின் அதிருப்தி பற்றியும் எழுதிவந்தான். அவனது கட்டுரைகளில் சில அரசாங்கத்தை கொஞ்சம் நோகடித்தன. அதில், கரும்பு விலை சங்கதியும் ஒன்று.

கரும்பு விலை அதன் சாறு பிழி திறன் அளவையொட்டியது. அதை ‘ரிக்கவரி’ என்பார்கள். ஒரு டன் கரும்பில் இருந்து 8.5 சதவிகித சர்க்கரை தயாரிக்க முடியும் என்றால், அதுவே ஆதார விலை. ரிக்கவரி கூடினால் அதற்கேற்ப கரும்புக்கு விகிதாச்சாரப்படி விலையுண்டு. முந்திய வருடத்தின் சாறு விகிதத்தை ஒட்டியே, மறு வருட விலை நிர்ணயிக்கப்படும். மறுவருடத்தில் பிழி திறன் அதிகமாக இருந்தாலும், முந்தைய வருடத்தின் விலையே நிர்ணயிக்கப்படும்.

இது ஒருபுறம் இருக்க, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கொடுப்பதில்லை. நிலுவைத்தொகை அதிகமாகிய போது அரசாங்கத்துடனும், ஆலைகளுடனும் கரும்பு விவசாயிகள் மோதிக்கொள்வது வழக்கம். அவனுக்கு கரும்பு விவசாயம் பற்றி நிறைய தெரிந்திருந்தது. அதற்குக் காரணம் அவன் குடும்பத்தின் பின்புலம். தஞ்சை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்து வந்த அவனது தாத்தா பிரணதார்த்திஹரன் ஆலைகள் ஒழுங்காக பணம் கொடுப்பதில்லை என்பதனால், தானே ஒரு அச்சுவெல்லப் பட்டறையை தொடங்கினார். இதனால் அவருக்கு ‘அச்சுவெல்லம் அய்யர்’ என்ற பெயர் வந்தது.

இந்த பின்புலத்துடன் அவன் கரும்பு சாகுபடி பிரச்சனைப் பற்றி எழுதி வந்தான். அரசாங்கத் தகவல் வந்த அதே தினத்தில் பெரிய கரும்பு விவசாயிகளைத் தொடர்பு கொள்வான். அப்போது கவனமாகவும், நிதானமாகவும், பொறுப்புணர்வுடனும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொன்னவர்கள் கொத்தட்டை ஆறுமுகம் என்பவரும், பகண்டை அருணாச்சலம் என்பவரும். இருவர் கருத்தும் முக்கியமானதென்று விவசாயிகளே ஒப்புக்கொள்வார்கள்.

கடலூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் இருந்தது. விஷ்வேஸ்வரன் என்பவர் அந்த சங்கத்தின் தலைவர். அவரை அன்று மாலை அவன் தொடர்பு கொள்ள முயன்றான். அவர் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் உளவுத்துறை அதிகாரியான ஞானக்கண் என்பவர் தானும் விஸ்வேஸ்வரனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், ஆனால் சங்கத்தினர் கடலூரில் எங்கோ கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும் என்றார். அது போதும் அவனுக்கு.

அவன் விஸ்வேஸ்வரன் தலைமையிலான சங்கம் என்ன தீர்மானங்கள் போட்டிருக்கும் என்பதை ஊகித்து செய்தி கட்டுரை எழுதி அனுப்பினான். மறுநாள் அது ஹிண்டுவில் வெளிவந்தது சங்கத் தலைவர் விஷ்வேஸ்வரன் ஆச்சர்யப்பட்டார். அவர் சொன்னார், ‘சார் நாங்கள் நேற்று மாலையில் சங்க நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினோம், அதில் இயற்றிய தீர்மானங்களை இன்று காலையில் உங்களிடம் கொடுப்பதாக இருந்தோம். ஆனால் அதற்குள் நீங்கள் தீர்மானங்களை அப்படியே எழுதிவிட்டீர்களே? நானும் எங்கள் சங்க நிர்வாகிகளைக் கேட்டேன். அவர்கள் யாரும் உங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றார்கள். நீங்கள் எப்படி இவ்வளவு தெளிவாக எங்கள் தீர்மானங்கள் பற்றி எழுதினீர்கள்.

‘அரசின் முடிவு எனக்குத் தெரியும், கரும்பு விலை கட்டுப்படியாகாது என்பதும் உங்களைப் போன்ற விவசாயிகள் நினைப்பதும் தெரியும். சங்கத்தின் தீர்மானங்கள் இப்படித்தான் இருக்குமென்று ஊகிப்பது இரண்டும் இரண்டும் நான்கு என்பது போல் தானே என்றான். அத்துடன் CESS தொகை சரியாக செலவிடப்படுவதில்லை என்ற விவசாயிகளின் மனக்குறையையும் குறிப்பிட்டிருந்தான். அவன் கரும்பு விவசாயிகளிடம் தெரிந்து கொண்ட இன்னொரு உண்மை, கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையில் குறிப்பிட்ட குறைந்தபட்ச சதவிகித்தை CESS என்ற முறையில் ஆலைகள் பிடித்தம் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பிகின்றன. அதன் நோக்கம், கரும்பு வாகனங்கள் செல்லும் சாலை, சீர்படுத்தப்பட வேண்டும் என்பது. ஆனால் அந்தத்தொகை அந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்படுவதில்லை என்று கரும்பு விவசாயிகள் கருதினார்கள்.

இந்த விஷயத்தில் பிற பத்திரிகைகளை விட அவன் முந்திக்கொண்டான், சரியான ஊகம் செய்ததனால். ஆனால் ஊகம் செய்து செய்திகளை எழுதுவதில் ஒரு ரிஸ்க் இருக்கிறது. ஊகம் தவறானால் அவன் பெயர் கெட்டுப் போகும். பத்திரிகையின் புகழும் பாதிக்கப்படும், அவனுக்கு வேலை போய்விடும். இந்த ரிஸ்க் உடன் தான் அவன் தன் கட்டுரையை எழுதினான். ஊகம் சரியாக இருந்ததால் ரிஸ்க் விலகி போய்விட்டது. அவ்வப்போது சர்க்கரை ஆலைகளுக்கு சென்று வந்தபோது அவனுக்கு ஆலைத் தரப்பிலும் பல விஷயங்கள் தெரியவந்தன. கள்ளக்குறிச்சி அருகே உள்ள மூங்கில் துறைப் பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் சொன்னார் ‘Your waste product is costlier than our end product’. இதைவிட நயமாக வேறு யாரும் சர்க்கரைப் பற்றியும் எடைக்குப் போடும் இந்து பேப்பர் பற்றியும் சொன்னதில்லை. மாதக் கடைசியில் உதவும். மடித்து வைத்த இந்து என்ற புதுக்கவிதை வரியின் அர்த்தம் புரிந்தது. மாதக் கடைசியில் கையில் பணம் இல்லாதபோது ஒரு கிலோ ஹிண்டு பேப்பரை எடைக்குப் போட்டால் ஒருநாள் செலவை சமாளித்து விடலாம். ‘அதாவது ஒரு கிலோ பழைய ஹிண்டு பேப்பர் மூன்று ரூபாய் ஐம்பது பைசா. ஒரு கிலோ சர்க்கரை இரண்டு ரூபாய் முப்பது பைசா. அதுதான் உண்மை. அதை அவர் சொன்னவிதம் அவனுக்கு பிடித்திருந்தது.

நெல்லிக்குப்பத்தில் EID Parry நிறுவனம் நடத்திய சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்கியதால், அதன் நிர்வாகத்தை சீர்படுத்த ஈசோ ஜான் என்ற நிபுணரை நியமித்தார்கள். அவரது ஆலோசனைப்படி நெல்லிக்குப்பம் ஆலையில் ஆள்குறைப்பு நடந்தது. அதன் விளைவே அங்கே ஊழியர் போராட்டம். சி.ஐ.டி.யு யூனியன் அந்த ஆள்குறைப்பு பிரச்சனையை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. அதன் பின்விளைவாக கோவிந்தராஜன் என்கிற சி.ஐ.டி.யு பிரமுகருக்கு கத்தி குத்து விழுந்தது.

அன்று மாலை கோவிந்தராஜன் கத்தியால் குத்தப்பட்டார் என்ற செய்தியை பி.டி.ஐ நிறுவனம் எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பியது சென்னையின் ஹிண்டு சப் எடிட்டர் அந்த இரண்டு வரி செய்தியை, செய்தி ஆசிரியரிடம் காண்பித்து வெளியிடலாமா என்று கேட்டார். அப்போது இரவு 7.30 மணி. செய்தி ஆசிரியர் கே.நாராயணன், அந்த சப் எடிட்டரிடம், ‘கொஞ்சம் பொறுத்திரு, 8 மணி வாக்கில் நம் நெய்வேலி நிருபர் விபரமான செய்தி அனுப்புவார்’ என்றார் நம்பிக்கையுடன். அவர் அவனைத் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை, அவனும் முன்னோட்ட செய்தியையும் அனுப்பவில்லை. செய்தி ஆசிரியர் எதிர்பார்த்தபடி 8.15 மணிக்கு அவனிடமிருந்து கத்தி குத்து சம்பந்தமாக, கைது செய்யப்பட்டவர்கள் யார்? என்ன பிரச்சனை என்ற விபரங்களுடன் அவனது தந்தி செய்தி, செய்தி ஆசிரியருக்கு வந்து சேர்ந்தது. காலம் தாழ்த்தாமல் அவன் ஹிண்டுவுக்கு விபரமான நம்பகமான செய்தி அனுப்புவார் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை தான் அவன் பலம்.