தொடர்கள்
அரசியல்
உடைகிறதா பெரியார் மண் பிம்பம்- ஜாசன்

20250527171651537.jpg

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்தில் பெரியார் பெருமை பேசும். இத்தனைக்கும் அந்தக் கட்சித் துவங்கப்பட்டதே பெரியாரை எதிர்த்து தான்.

கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் பெரியாரால் அண்ணா கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். பதிலுக்கு அவர்களும் பெரியாரை விமர்சனம் செய்தார்கள். பெரியார் அளவுக்கு கடுமையாக இருக்காது.

இப்போதைக்கு பெரியார் பேசும் பொருள் இல்லை என்று ஆகிவிட்டது.

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகபொதுச் செயலாளர் வீரமணி கூடபெரியார் பெருமை பேசுவது எப்போதோ அபூர்வம் என்று ஆகிவிட்டது. இப்போது அவரது பணி தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ் பாடுவது, ஸ்டாலினை குஷிப் படுத்துவதற்காக பாஜக மீது விமர்சனம், இப்போதைக்கு வீரமணியின் பணி இப்படி தான் என்று ஆகிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது கூட வீரமணி பெரிய அளவு கொந்தளித்து பேசவில்லை.

வீரமணியின் நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்து தனியாக இயக்கம் நடத்தும் ராமகிருஷ்ணன் தான் சீமானை கடுமையாக சாடினார்.

திமுகவும் பெரிய அளவு இந்த விஷயத்தை கண்டு கொள்ளவில்லை. வீரமணியின் ஒன்லைன் அஜெண்டா இதுதான். பெரியார் சேர்த்து வைத்திருக்கும் பல்லாயிரம் கோடி சொத்துக்களை தான் அனுபவிக்க வேண்டும் அதன் பிறகு தனது மகன் அனுபவிக்க வேண்டும் இப்படித்தான் அவர் திட்டம் இருக்கிறது.

உண்மையில் இப்போது பெரியார் பேசும் பொருள் அல்ல இப்போது பேசும் பொருள் தமிழ் கடவுள் என்று திராவிட தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ள முருகர் தான். இதற்குக் காரணம் இந்து முன்னணி பாஜக இணைந்து மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு தான்.

ஜூலை ஏழாம் தேதி திருச்செந்தூர் முருகர் கோயில் குடமுழுக்கு.

மிகப் பிரமாண்டமாக அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து பார்த்துப் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது. அந்த அளவுக்கு அவர்களுக்கு தற்சமயம் முருகர் பயம் இருக்கிறது.

இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களை சந்திக்கும் போதெல்லாம் இந்துக் கோயில்களுக்கு திராவிட மாடல் அரசு செய்து வரும் பணிகளை பட்டியல் போட்டு பேசுவதை பழக்கமாகவே வைத்திருக்கிறார்.

சமீபத்தில் கூட நிருபர்கள் ஒரு கோயில் குடமுழுக்கில் கூட கலந்து கொள்ள வில்லையே ? என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான். "நாத்திகர்கள் ஆத்திகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த இந்த அரசு 3,117 கோவில்களில் இதுவரை குடமுழுக்கு நடத்தி இருக்கிறது .இறைவனையோ இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சனம் செய்வது எதிர் கருத்தை கூறுவது என்பதை வாடிக்கையாக கொள்ளாதவர் முதல்வர் ஸ்டாலின். அதுவே இறைவனை வணங்குவதற்கு சமம் "என்று சொல்லி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம் வாக்கு வங்கிக்காக பெரியாரை ஓரங்கட்டி விட்டு சேகர் பாபு மூலம் இது ஆன்மீக அரசு என்று தொடர்ந்து சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் போகாத கோயிலே இல்லை.

பெரியார் கொள்கை கட்சி என்று சொல்லும் திமுகவின் உண்மை நிலைமை இதுதான். இதை வீரமணி கண்டு கொள்வதே இல்லை.

துர்கா ஸ்டாலின் பூஜை சமூக வலைதளங்களில் ஒரு பேசும் பொருள். அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும் வீடியோ கூட வைரலாகி கொண்டு இருக்கிறது.

60களில் திராவிட பற்றாளராக திமுக உறுப்பினராக இருந்து சிவாஜி கணேசன் திருப்பதிக்கு போனபோது அன்றைய திமுக அதை கடுமையாக விமர்சனம் செய்தது. இதனாலேயே வெறுத்துப் போய் சிவாஜி காமராஜர் சீடர் ஆனார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அப்படிப்பட்ட அந்த கட்சிதான் இன்றைக்கு ஆன்மீகமா நாத்திகமா என்று தெளிவாக முடிவெடுக்க முடியாமல் முழிக்கிறது.

பெரியார் கொள்கை பற்றி காஞ்சி சங்கரமட சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் "பெரியார் கொள்கையை பெரியாருடன் சேர்ந்து அவரது சமாதியில் அடக்கம் செய்து விட்டார்கள் என்று சொன்னார்.