துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் இந்த உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கக் கூடிய முருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல், பாடுவோரையும் கேட்போரையும் பரவசப்படுத்தி மன நிம்மதி தரவல்லது. கவசம் என்றால் நம்மைச் சுற்றி வளையம் போலக் காக்கக் கூடியது.
போரில் யுத்த வீரர்கள் தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். அதுபோல கந்த சஷ்டி கவசம் நம்மை அனைத்து இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றுகிறது. முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த கந்த சஷ்டி கவசம்.
கந்தசஷ்டி கவசம் பிறந்த கதை:
கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். "சிரம்", "சென்னி" என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார். கந்தசஷ்டி கவசத்தைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும். நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்யும். என்றென்றும் இன்பமாக வாழ்வார்கள் என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறார் ஸ்ரீ பாலன் தேவராயர்.‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தசஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார்.
மகிமைகள் நிறைந்த கந்தசஷ்டி கவசம்:
கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் படிப்பதால் நம் உடலில் ஒருவித நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். அதனால் நம் செயல் திறன் அதிகரிக்கும். முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்குத் துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சமும், மன நிம்மதியும் உண்டாகும். கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனம், உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரமும் ஏற்படும். கந்த சஷ்டி கவசத்தைச் சஷ்டி அன்றும் செவ்வாய்க்கிழமையிலும் படிப்பதினால் பலன் பன்மடங்காகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்குச் செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.கந்தசஷ்டி கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம். இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை) யில் தானே வரும் என்று பழமொழியாகக் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட அற்புத பலன்களைத் தரக்கூடிய கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் மனமுருகப் பாடி, முருகனின் அருளால் இடர்கள் நீங்கி எண்ணற்ற பல நன்மைகளைப் பெறலாம்…!!
Leave a comment
Upload