தொடர்கள்
கவர் ஸ்டோரி
முருகன் -தமிழ்க்கடவுள் -தில்லைக்கரசிசம்பத்

20250527173511405.jpeg

முருகன் என்பது சங்ககால தமிழரின் உள்ளார்ந்த உணர்வின்படி பசுமை நிலங்களின் காவலனும், போரில் வெற்றியைத் தருபவனும், காதலின் ரகசியத்தை கண்களிலும், அநீதிகளை காணும் கணம் கோபத்தின் தீவிரத்தை புருவநெறிப்பிலும், குறும்பின் தோன்றும் புன்னகையை கன்னக்கதுப்பிலும் காட்டும் ஒரு இளம் அழகியதெய்வம்.
பழந்தமிழகத்தில் மொழியுடன் இணைந்த இயற்கையே தெய்வவழிபாடாகஇருந்தது. தமிழ்நாட்டிற்கே உரிய மலைநில தெய்வமாக, குறிஞ்சி நிலத்தின் தலைவனாக முருகன் வந்தார். தமிழைத் தாய்மொழியாக கொண்ட வேடர், குறவர், பழங்குடிகள் முருகனை வழிபட்டார்கள்.

தமிழ்ச்சங்க புலவர்களும் முருகனை அழகின் உருவம், வலிமையின் வடிவம், போர், காதல் ஆகியவற்றுடன் இயைந்த உயிராய் பேசுகிறார்கள். கிமு300லிருந்து கிபி300 வரையான காலக்கட்டத்தில் எழுதப்பட்ட அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை , பரிபாடல், முருகனை குறிப்பிடுகின்றன.

கி.பி.1ஆம் நூற்றாண்டிலிருந்து 3ஆம் நூற்றாண்டுக்குள் நக்கீரர் எழுதிய பத்துப்பாட்டு தொகுப்பிலொன்றான திருமுருகாற்றுப்படை, முருகனைப் பற்றிய முழுமையான, அர்ப்பணிக்கப்பட்ட தொகுப்பாகும்.

முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் குறிப்பிடும் முதல் இலக்கியம். முருகனை வீரத் தெய்வமாக, வழிகாட்டியாக, யானை ஏற்றிய குருசாமியாக, செவ்வந்தி மாலை அணிந்தவனாக விவரிக்கிறது.

தாய்லாந்தை சேர்ந்த இந்திய வழிபாடு ஆய்வாளர் கமில் (Kamil Zvelebil) “Murugan is the only Dravidian god fully formed in native Tamil thought.” என கூறுகிறார். மயில், குறிஞ்சிமலை, வேல், காதல், வீரம் எல்லாமே தமிழ்மண்ணின் அடையாளங்கள். எல்லாவற்றையும் விட பழங்குடி பெண்ணான வள்ளியை காதலித்து மணமுடிக்கும வேலவனை தமிழ்கடவுள் என்றல்லாமல் வேறெப்படி உருவகப்படுத்தமுடியும்!? என கேள்வியெழுப்புகிறார்.

முருகனை பற்றி சங்க இலக்கியத்திலிருந்து, நடுவில் அருணகிரிநாதரின் திருப்புகழ் வந்து, இப்போது ஏ.கே. ராமானுஜன் பாடல்கள் வரை தமிழர் இலக்கியத்தில் ஒரு தொடர்ச்சியான வரலாறாக முருகன் வந்துக்கொண்டே இருப்பதாலே தமிழ்நாடென்பது, முருக கடவுளின் தேசம் என சொல்கிறார். முருகனை “தமிழ்க் கடவுள்” எனச் சொல்வது பொதுவழக்குப் பேச்சு அல்ல.

இது நேரடி இலக்கிய ஆதாரங்கள் மற்றும் பன்மொழித் தரவுகளால் உறுதி செய்யப்படும் வரலாறு. தேவாரம், திருப்புகழ்,திருமுறைகள் தமிழில் முருகனைத் துதிக்கின்றன. கந்தர் அலங்காரம், கந்தசஷ்டிகவசம் மூலம் தமிழர்களின் நாவிலும் நெஞ்சிலும் முருகன் ஒட்டியிருக்கிறார்.

திருப்புகழ் பாடல்கள் “முருகனே தமிழ் மொழியில் அருள்புரியும் கடவுள்” என்கிறது .திருப்புகழில் அருணகிரிநாதர் “தமிழ் மொழி பிறந்தமுகில் தவமலர் மரபின் திருத்தெய்வம்” என பாடுகிறார்.

முருகன் கோயில்களில் பண்டைய வழிபாட்டுமையங்களில் பாடல்கள், இசை, பூஜை எல்லாம் முழுமையான தமிழில்.. மொழி, இசை, உரை, நயம் அனைத்தும் முருகனின் பெயரில் ஒலிக்கின்றன. முருகன் கடவுளா? இல்லை தமிழ் மொழியா? அல்லது தமிழ்மொழியே கடவுளாக அவதரித்து முருகன் என பெயர் தரித்தானா? என தோன்றுகிறது.

தற்போது தமிழக அரசியல்களத்தில் முருகன் மையம் கொண்டிருக்கிறார். தசாப்தங்களுக்கு முன்பே பெருமாள் தளங்களை ஏற்க மறுத்த திராவிட அரசியல், முருகனை “தமிழ்சமயத்தின் அடையாளமாக” தாங்கியது.

தற்போது தேசிய இனவாத அரசியலும் முருகனை போற்றி புகழ்கிறது. பழங்குடிப்பெண்ணான வள்ளியை மணந்து சமயநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முருகனுக்கு பழநியில் எடுக்கும் விழா , தாழ்த்தப்பட்ட, நடுத்தர மற்றும் மேல்வர்க்க மக்களின் கூட்டாக இருக்கிறது.

திருத்தணிக்கான பல்லக்கு பூஜை, தமிழர் கலை, தொழில், சங்கக்கால வழிபாட்டின் ஆதாரமாக விளங்குகிறது. முருகன் என்பது வெறும் கடவுள் அல்ல. அவர் தமிழர் இன அடையாளம்.

நீங்கள் முருகனை ஏற்றுக்கொண்டால் தமிழை ஏற்றுக்கொள்கிறீர்கள்! சாதி,இன வேறுபாடற்ற ஆதிதமிழரின் வாழ்வியல் முறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். யாருக்கும் தலைவணங்காத தமிழ்மண்ணையும், பெருமைமிக்க தமிழன் என்ற உணர்வின் அடையாளத்தையும், ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது.

தமிழர்களும், தாய்மொழித்தமிழ் இல்லாமல் முருகன் இல்லை. முருகனை வழிபடும் தமிழர்களின் உளவியல், சமூகவியல் புரியாமல், வெறும் முருகனை மட்டும் கொண்டாடினால் தமிழ்மக்கள் வசப்பட்டுவிடுவார்களா என்பதனை இனி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.