சென்ற வாரம் ஜூன் 20 தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், அதனை சார்ந்தவர்களுக்கும் பேரிடியை வந்து விழுந்தது ஸ்ரீராமின் மரணம். விஜய் டிவியில் பல ஆண்டு காலம் பயணித்து இன்று அந்த தொலைக்காட்சியை தவிர்க்கமுடியாத பொழுதுபோக்கு நிறுவனமாக மாற்றியதில் ஸ்ரீராமின் பங்கு மிக அதிகம். சுமார் 16 ஆண்டு காலத்திற்கு பிறகு தன் கனவு தேசத்தை கனவு தொழிலை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கியது தான் சங்கரா டிவி . இந்து மதத்தை சார்ந்த ஆன்மீகவாதிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கு, வயதான தாத்தா பாட்டிகளுக்கும் ஒரே நிம்மதி சங்கரா டிவி தான்.
காலை முதல் இரவு வரை அனைவரையும் கட்டிப்போட்டார் ஸ்ரீராம். இணையத்திலும் கவசம் கனெக்ட் என யூடுபிலும் மிக பிரபலம்.
தனது தாய், மனைவி மற்றும் ஒரே மகனை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நண்பர் கூட்டத்தையும் விட்டுவிட்டு திடீரென விடைபெற்றார் ஸ்ரீராம்.
அவரிடம் அனுதினமும் நெருங்கி பழகிய இரண்டு நண்பர்களிடம் அவரை பற்றி பேசினேன். நெகிழ்ந்தார்கள்.
திரு பாம்பே சாணக்யா, இயக்குனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தனது அனைத்து படைப்புகளையும் சங்கரா டிவியில் ஒளிபரப்பி வருகிறார் பாம்பே சாணக்யா. ஸ்ரீ ரமணர் பற்றி, ஸ்ரீ மஹா பெரியவா பற்றி இவர் இயக்கிய தொடர்கள் சங்கரா டிவியில் வந்து கொண்டிருக்கிறது. இவரது படைப்பை பற்றி கேள்விப்பட்டு அதனை யூடியூபில் பார்த்து இவரை அழைத்து வாய்ப்பு அளித்து ஊக்கமளித்துள்ளார் ஸ்ரீராம். ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால் We lost a thorough Gentleman என்றார்.
திரு. M V பாஸ்கர், வழக்கறிஞர், நாடக நடிகர்
ஸ்ரீராமின் மிக நெருங்கிய நண்பர் . ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை பாஸ்கர். ஆரம்பத்தில் என்ன சொல்வது, எதை பற்றி சொல்வது, எப்படி சொல்வது என்று யோசித்து பின்பு தன் அன்பையும்,நட்பையும்,சோகத்தையும் கொட்டி தீர்த்தார்.
ஸ்ரீராம் ஒரு விளையாட்டு பிரியர். பேட்மிட்டன்,டேபிள் டென்னிஸ் என அணைத்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டி நேரம் செலவிட்டாலும். கிரிக்கெட் பைத்தியம். மணிக்கணக்கில் கிரிக்கெட் பற்றி பேசுவார்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் எந்த போட்டி நடைபெற்றாலும் நண்பர்களுடன் கிரிக்கெட் பார்க்க சென்றுவிடுவார். நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவார். இப்படி ஓடி ஆடி விளையாடி ஆரோக்கியமாக இருந்தவர், எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒருவர் திடீரென மறைத்தது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
தன் அலுவலகத்தில் தான் பொறுப்பில் இருக்கும்போது அதற்கு நேர்மையாக நண்பர்களிடத்தில் கூட கறாராக இருந்திருக்கிறார். ஜாலியாக கையேந்தி பவன்களில் சாப்பிடுவதும், அவர்களோடு அரட்டை அடிப்பதுமாக இருந்த ஒருவர் திடீரென அவர்கள் மத்தியில் இல்லாததை இன்னும் அவர்களின் மனது ஏற்கமறுகிறது.
எந்த வித பந்தாவும் இல்லாமல் சாதாரண சகா மனுஷனாக,தோழனாக அனைவரிடத்திலும் பழகியுள்ளார்.
அனுதினமும் பிரார்த்தனை செய்த ஒரு பக்தர், ,தன் தாயின் மீது பெரும் பாசமும் வைத்த மகன், மனைவி மகனுடன் அன்போடு இருந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நொடிப்பொழுதில் குலைந்துபோனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தொழில்சார்ந்தோருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தை கொடுத்துள்ளது.
இயக்குனர் பாலசந்தர் அவர்களின் மகன் கைலாசம் மறைந்தது சின்னத்திரை உலகுக்கு எப்பேர்ப்பட்ட இழைப்பாக கருத்தப்பட்டதோ அதேபோல் இன்றும் நாம் ஒரு ஊடக ஜாம்பவானை இழந்திருக்கிறோம்.
வாழ்க்கை அடுத்த நிமிடத்தில் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று நாம் யூகிக்க முடியாது. இருக்கும் வரை நண்பர்களோடும், சொந்தங்களோடும் அன்பை பரிமாறி வாழ்வோம்.
Leave a comment
Upload