எங்கெங்க வாங்கினீங்க இந்த செடியை? நானும் நாள் தவறாமல் தண்ணிய ஊத்திக்கிட்டே இருக்கேன் ஒரு பூ இன்னும் பூத்தபாடு இல்ல.உங்களுக்குனே வைத்திருந்தாங்க போல, என்று புலம்பலோடு கணவர் நர்சரியில் வாங்கி வந்த ரோசா செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் சரசுவதி.
அது எப்போ பூக்கனுமோ அப்போது பூக்கும், அதற்கு நான் என்ன செய்வேன்? என்ற கணவர் விச்சு என்கிற விசுவை முறைத்தாள்.
விசு,சரசு தம்பதியருக்கு ஒரே மகன் வயது முப்பதாகியும் மணம் முடியவில்லையே எனக் கவலை இருவருக்கும். மகன் குமாருக்கு சுமாரன வேலை என்பதால் பெண் கிடைப்பது கடினமாக இருக்கிறது.
தேவையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டே நீர் ஊற்றுவதால் கூட பூக்காமல் இருக்கலாம் என்றவரை, காலாங்கார்த்தாலே போதும் விமர்சனம்,போய் மகனை அழைச்கிட்டு வாங்க என ஏவினாள்.
காலை ஏழு மணிக்கெல்லாம் ரயில் வந்திடும். அப்படியே நாங்க வரும்போது வெளியே டிபன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம் என்ற கிளம்பினார் விசு.
அந்த ஓட்டல் பரபரப் பாகவிருந்தது. காலை நாலறை மணியிலிருந்தே பொங்கல் வடை சூடாக கிடைக்கும் என பயணிகள் பார்சல் கட்டிக்கொண்டு ரயிலையும் பேருந்தையும் பிடிக்க ஓடுவார்கள். காலை மைசூர் ரயிலில் வந்திறங்கிய மகன் குமாரோடு சாப்பிடலாமென ஓட்டலினுள் நுழைந்தார் விசு.
இவர்களைக் கண்டதும் பார்சல் பகுதியில் இருந்த கடை ஊழியர் தாசு கல்லாவிற்குச் சென்று ஓனரிடம் பேசியபின் சாப்பிடும் டேபிளில் ஒருவராகப் போய் அமர்ந்துக்கொண்டார்.
அதே டேபிளில் விசுவும் வந்தமர்ந்ததும் சங்கடத்தில் நெளிந்தார் தாசு. அவரை அடையாளம் கண்டுக்கொண்ட விசு,
என்ன தாசு ஊருக்கு எப்போது வந்தாய் ? ஏன் பார்க்க வரலை என உரிமையோடு கேட்க..
யாருப்பா ? என குமார் கேட்டதும்,நீயும் மறந்துட்டியா ? நம்ம எதிர் வீட்டிலே இருந்தாங்களே தாசு அங்கிள்டா...என்றவர் என்ன தாடி கீடியெல்லாம் வச்சு அடையாளம் தெரியாமல்..என பேசும்போதே வந்த ஓட்டல் ஊழியர்,
பார்சல் காபி பில்லைப் போடுங்க, பார்சல் கூட்டமா இருக்கு,நீங்க இங்கே வந்து உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்க என்ற போதுதான் தெரிந்தது விசுவிற்கு தாசு இங்கே ஓட்டலில் வேலை செய்வது.
சங்கடத்தில் நெளிந்த தாசை என்னாச்சு என விசு விசாரித்தார் கரிசனமாக.
என்னத்த சொல்வேன், மகள் காயத்ரிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு பக்கத்திலேயே இருப்போம் என நாங்களும் சாகை மாறி சென்னைக்குப் போனோம்.
இரண்டே வருடந்தான்... கையிலே ஒரு குழந்தை, திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாள், அல்பாயுசிலே போயிட்டார் மாப்பிள்ளை என்றபோது அவர் கண்களில் நீர் வழிந்தோடியது.
காயத்ரி என்று அவர் சொன்னதும் குமாரின் கண்களும் கலங்கியது. அப்போது குமார் காலேஜ் முடித்து வீட்டில் வேலையில்லாமல் இருந்த நேரம்,
நம்ம எதிர்வீட்டு காயத்ரியே நமக்கு மருமகளா வந்தால் நல்லாயிருக்கும் என்றாள் சரசு விசுவிடம்.
ஏண்டியம்மா..உனக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கிறாள்னுதானே சொல்றே, அவாளுக்கு குமாரைப் பிடிக்க வேண்டாமோ என்றதற்கு , பிடிக்காமல் என்ன ? எம்புள்ளைக்கு என்ன குறைச்சல் ? என்றாள் தாய் சரசு.
வேலைதான் என்றார் தந்தை விசு. வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும், என்றதும் அதற்கென்ன? என்றாள் சரசு
உம் பொண்ணாக இருந்தால் நீ கொடுப்பியோ என விசு கேட்டதும் முகத்தை தோளில் இடித்தபடி நகர்ந்தாள் சரசு.
இப்படி ஒரு பேச்சு நடக்கிறது என தாசின் மனைவிக்குத் தெரிந்தபின் காயத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவது நின்றுப் போனது,ஆனால் குமாருக்கு காயத்ரி மீது ஒரு ஈர்ப்பு நன்கு உருவாகி இருந்தது.
இவர்கள் எங்கே தமது பெண்ணை படித்து வேலையில்லாத குமாருக்கு கேட்டுவிடுவார்களோ
என்ற பயத்திலும்,பதட்டத்திலும் அவசரவசரமாக மாப்பிள்ளைப் பார்த்து முடிவு செய்து நிச்சயம் வரை வருவதற்கும் குமாருக்கு வேலை கிடைக்கவும் சரியாக இருந்தது.
காயத்ரி திருமணம் தஞ்சையில் நடந்தபோது விசுவும் சரசுவும் போய் வாழ்த்திவிட்டுதான் வந்தார்கள்.
"ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்க காயத்ரிக்கு அவள் வாழ்க்கைக்கு என்றபோது உடைந்து அழுதேவிட்டார் தாசு.
அவரைத்தேற்றிவிட்டு அவரின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு இருவரும் வீட்டிற்கு திரும்பினர்.
ஏன் ரயில் லேட்டா என விசாரித்த சரசுவிடம்,நடந்தவற்றைக் கூறினார் விசு.
பாவமே,இப்படி வாரிக் கொட்டிக்கவா அவசரவசரமாக திருமணம் செய்தார்கள் என்பதில் தெரிந்தது சரசுவின் கோபம்.
காயத்ரி கையில் குழந்தை, இப்போது அவர்களுக்கு ஒரு வேலை வேண்டுமாம் என்ற விசு,என் நண்பர் பரசுராமன் ஆடிட்டர்கிட்டே சேர்த்துவிடப் போகிறேன் என்ற போது,
செய்யுங்கோ,ஊருக்கு செய்யத்தானே நாம இருக்கோம்,என்ற
போது சரசுவிற்கு அவர்கள் மீதான கோபம் இன்னும் தனியவில்லை என்பது மட்டும் தெரிந்தது.
மறுநாள் காலை,தாசிற்கு போன் செய்தார் விசு.
வேலை விபரங்களைச் சொல்லி காயத்ரியின் பயோடேட்டா ஒன்றினை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
கொல்லையில் ரோசா செடிக்குத் தண்ணீர் ஊற்றக்கிளம்பிய சரசு, கேட்டகிறதுதான் கேட்கிறேள் பயோடேட்டாவோடு அவளது ஜாதகத்தையும் கேளுங்கோ என்றபோது ரோசா செடி நிறையப்பூக்கள் பூத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் சரசு.
ஜாதகமெல்லாம் வேண்டாம்,நம்ம வீட்டிற்கு மருமகளாக வர அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திடுங்களேன் என்ற குமாரைப் பாராட்டினார்கள் விசுவும் கைகளில் ரோசா பூக்களுட வந்த சரசுவும்.
கணவர் வாங்கி வந்த ரோசாவும், குமாரும் ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கியதைக் கண்ட சரசுவின் மனமும் வயிறும் குளிர்ந்தது.
Leave a comment
Upload