தொடர்கள்
தொடர்கள்
கானகத்தின் குரல்  - இந்துமதி கணேஷ் 

20250527233910518.jpeg


"சில கனவுகளை அபிநயித்தபடி பாடி

ஆடி வரும் நீரோடையால் மட்டுமே

கூழாங்கற்களுக்கு அழகிய வடிவம்

தரமுடிகிறது

சுத்தியல்களால் முடிவதில்லை"

என்ற தாகூரின் வார்த்தைகள் எவ்வளவு அற்புதமானவை. இப்படி நதியால் செதுக்கப்பட்ட கூழங்கல்லாய், கருக்கொண்ட மேகங்கள் சிந்தும் ஒற்றை மழைத் துளியாய், பாறைகளில் சலசலத்து ஓடும் காட்டாற்றின் மிதந்து வரும் ஒற்றைச் சருகாய், பகலிலேயே இருள் போர்த்தி இருக்கும் காடுகளில் மரக் கவிகைக்குள் வெளிச்ச கீற்றுக்காய் சற்றே தலை உயர்த்தும் ஒற்றை தாவரமாய் வாழ முடிந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும். வளங்கள் செழித்திருக்கும் குறிஞ்சியும் முல்லையும் எப்போதுமே நம்மை குதூகல படுத்துபவை தானே. சோலைகளும், மரங்களும், பூக்களும், எழில் கொஞ்சும் அருவிகளும், சுனைகளும், நதிகளும் மனதிற்குள் ஏற்படுத்தும் புத்துணர்வு அலாதியானது. இயந்திர வாழ்க்கைக்கு நடுவே இந்த குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஒரு பயணம் என்றால் மனம் சிலிர்த்து போகாதா என்ன ?

இப்படி ஒரு சிலிர்ப்பை, வியப்பை ஒரு வாசிப்பே நமக்குள் ஏற்படுத்தினால் எவ்வளவு அலாதியாக இருக்கும், ஆம் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி புதினம் அதை தான் எனக்குச் செய்தது. பகலென்றும் இரவென்றும் தெரியாமல் பறம்பிலேயே எம்மை தங்க வைத்தது. இயற்கையை நேசிக்கும் பாரியை ஒரு கூட்டமே நேசித்தது, அவன் கரம் பற்றியபடி நடக்க விழைந்தது. அடுத்த தலைமுறைக்கு காட்டின் அறிவை தான் கற்பித்தான் பாரி. அவனும் அதையே கற்று தான் பல்லுயிர்களையும் பேணினான், அதை காடறிதல் என்றே அழைத்தார் ஆசிரியர் திரு. சு. வெ அவர்கள். இவர்களுக்கு காட்டையும் அங்குள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பற்றி கற்றுத் தரும் ஆசானுக்கு தேக்கன் என்று பெயர். இப்படி ஒரு தேக்கனுடன் நாமும் ஒரு காடறிதல் பயணத்திற்கு போனால் எப்படி இருக்கும் என்ற பெருங்கனா தான் பெருந்தொற்று காலத்தில் மன அழுத்தமில்லாமல் தப்பிக்க உதவியது.

இந்த வாசிப்பிற்கு பிறகு மனம் எப்போதும் காடறிதல் பற்றியே சிந்தித்ததுண்டு. அப்படி ஒரு பயணத்தை சாத்தியபடுத்தலாமா என்று நண்பர்கள் குழு யோசித்த போதும், அது பெருந்தொற்றால் கைகூடாமல் நின்று போனது. கிட்டதட்ட ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அப்படி ஒரு பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தால் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் என்பதை வார்த்தைகளில் விளக்க தேவையில்லை. எங்கு சென்றாலும் பாரியின் கரங்கள் எம்மை விட்டதில்லை என்பதை உணர்த்தும் விதமாய் பாரி தந்த உறவான ஸ்ரீதரின் பரிச்சயம் மூலம் கிடைத்தது தான் இந்த காடறிதல் பயணத்திற்கான முகாந்திரம். பயணம் செய்ய நாம் தயாராக இருந்தாலும் இயற்கையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒரு தேக்கன் நமக்கு வேண்டுமே என்ற கவலைக்கு மாற்றாய் வந்து சேர்ந்தார் கோவை சதாசிவம் ஐயா. இயற்கையோடு இயைந்து வாழ பழகியவர், பல்லுயிர்களை சுவாசமாய் நேசிப்பவர், இவை எல்லாவற்றையும் விட காட்டின் ஒவ்வொரு தாவரத்தையும் விலங்கையும் அறிந்து வைத்திருக்கும் பேரறிவாளன். இவருடனான பயணத்தை ஒருங்கிணைப்பவர் யானைகளின் காதலர். கிழக்குத் தொடர்ச்சி மலையில் யானைகளின் வாழிட சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த மனிதரான ஆற்றல் பிரவீன் குமார். நமது ஆசைகளை இந்த பிரபஞ்சத்திடம் கூறிக் கொண்டே இருந்தால் அது நிச்சயமாய் ஒரு நாள் அதை நிறைவேற்றும் என்பதை இந்த காடறிதல் பயணம் முடிவான அன்று தான் எண்ணி வியந்தேன்.

கோடை விடுமுறையில் எப்படியாவது குடும்பத்துடன் கோவை சதாசிவம் அய்யா மற்றும் ஆற்றல் பிரவீன்குமார் இருவரும் ஒருங்கிணைக்கும் காடறிதல் பயணத்திற்கு சென்று வருவது என்று முடிவெடுத்தோம். அதெப்படி உங்கள் இஷ்டப்படி அவ்வளவு எளிதாக என்னிடம் வந்துவிட முடியுமா என்ன ? நான் அழைத்தால் மட்டுமே நீங்கள் என்னிடம் வர முடியும் என்று சவால் விட்டன காடுகளும் மலைகளும். கோடையில் ரயிலிலும் பேருந்திலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும், என்பதால் அந்த நேரத்தில் காடறிதல் பயணம் வேண்டாம் என்று தள்ளி வைத்திருந்தனர். மழைக்காடுகள் தினம் மற்றும் புலிகள் தினம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே பயணம் ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட கூடாது என்று ஜூன் மாதத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பே ரயிலில் முன்பதிவு செய்து வைத்தோம்.

விடுமுறையின் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்து சிணுங்கி கொண்டே பிள்ளைகள் புத்தகப்பையுடன் பள்ளிக்கு போய்வர தொடங்கிவிட்டார்கள். எப்போதடா வார இறுதி வரும் என்ற காத்திருப்பிற்கு நடுவில் தான் காடறிதல் பயணம் ஒரு வரமாய் வந்து சேர்ந்தது. எப்போதுமே நெல்லை, மதுரை, திருச்சி என்று மட்டுமே இருந்த எங்கள் பயணங்களுக்கு நடுவில் புதுவிதமாக காட்டை அறிய போகும் இந்த பயணம் மிகுந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. மகனுக்கும் மகளுக்கும் அவரவருக்கான துணிகளையும் பொருட்களையும் தனிப் பையில் வைத்த போது அவர்களின் ஆவல் பன்மடங்கானது. "அம்மா அங்க என்னவெல்லாம் இடங்கள் இருக்கும் ? யானையை பாக்கலாமா ?" போன்ற கேள்விகளால் எங்களை மொய்க்கத் தொடங்கினார்கள்.

பல ஊர்களில் இருந்து கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வர வேண்டி இருந்தது. வனப்பகுதிக்குள் செல்லும் முன்பு கூட வேண்டிய பொது இடமாக உடுமலைப்பேட்டை தேர்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன் இந்த ஊருக்கு நாங்கள் சென்றதே இல்லை. அந்த ஊரை பற்றி ஒன்றுமே தெரியாது அனைத்தையும் நம் குழு பார்த்துக் கொள்ளும் என்று நம்பி தைரியமாக கிளம்பிவிட்டோம். இரயில் நிலையத்திற்கு சென்று சேர்ந்ததும் ஆற்றல் பிரவீன்குமார் எங்களுக்கான ஜீப்புகளுடன்(வல்லுந்துகள்) காத்திருந்தார். முதல் முதல் ஜீப்பை கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் பார்த்த நாளில் இருந்து அதில் ஏறி மலைகளில் பயணிக்கும் கனவு எனக்கு இருந்தது. ஆனால் அந்த நாட்களில் காரில் பயணிப்பதே பெரிய விஷயம் எனும் போது ஜீப் என்பது நடவாத காரியம் என்பதால் மனதை தேற்றிக் கொண்டு மனதின் ஆழத்திற்கு தள்ளிவிட பட்ட ஆசையது. நகர வாழ்வில் எத்தனையோ முறை ரோட்டில் ஜீப்புகளை பார்த்திருந்தாலும் அதில் ஏறி பயணிக்கும் வாய்ப்பு அமைந்ததில்லை. இவ்வளவு உயரமாக இருக்கிறதே ஏறிவிட முடியுமா என்று யோசனையுடன் தான் ஏறத் தொடங்கினேன் ஆனால் அது அவ்வளவு கடினமில்லை சுலபமாகவே ஏறமுடிந்தது. நகரத்து சொகுசு வாழ்க்கை நம்மை எவ்வளவு சோம்பேறியாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்த நொடி அது.

குளித்த பிறகு தான் உணவு என்று நினைத்திருந்த எண்ணத்திற்கு மாற்றாக முதலில் உணவை உட்கொண்டு விடுங்கள், குளியலை பிறகு பார்த்து கொள்ளலாம் என்றனர் குழுவினர். சோறு முக்கியம் அமைச்சரே என்று உணவை வளைத்து கட்ட அமர்ந்து விட்டோம். பொங்கலை ஆசையாக கபளீகரம் செய்ய பாய்ந்த போது தான் கணவர் காதோரம் வந்து கிசுகிசுத்தார், "இனிமேல் தான் மலையேற போறோம், ஜீப்ல வேற போகணும் பார்த்து சாப்பிடு", அடடா மண்டைல இருக்க கொண்டையை மறந்துட்டோமே என்று அடக்கமாக இரண்டு இட்லிகளுடன் என் காலை உணவை முடித்துக் கொண்டேன்.

வெயில் உச்சிக்கு வந்திருந்தது, லேசான காற்று இருந்த போதும் வெக்கையை உணர முடிந்தது. கருப்பு, அவுரி(blue), பச்சை, உரைப்பால் நிறம்(sandal), ஈரல்நிறம்(purple) என்று பல வண்ணங்களில் ஜீப்புகள்(வல்லுந்துகள்) ஓட்டுநர்களுடன் தயாராய் நின்றிருந்தன. குழுவில் இன்னும் இரண்டு பேர் வரவேண்டி இருந்தது, அவர்களுக்காக காத்திருந்த போதே எங்கெல்லாம் செல்ல போகிறோம் என்பதை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் கோவை சதாசிவம் ஐயா. என்ன கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம் என்றவுடன் பலர், "அய்யா நாம் போகும் பாதையில் யானைகளை பார்க்க முடியுமா ?" என்ற கேள்வியை எழுப்பினர். பால்யம் முதல் யானைகள் மீதான ஈர்ப்பு நமக்கு தீர்வதே இல்லை. "வெயில் இறங்கும் முன்பே கிளம்பி இருந்தால் யானைகளை பார்த்திருக்க கூடும், அப்படி குழுவாக இருந்த எட்டு யானைகளை போனமுறை பார்த்தோம் ஆனால் இவ்வளவு வெயில் இறங்கிய பின் அவைகளை காண இயலாது" என்றவுடன் எங்களில் பாதிபேரின் முகங்கள் சோர்ந்து போனது. எங்கள் முகங்களை பார்த்ததும் "இன்று இல்லாவிட்டாலும் நாளை பார்க்கலாம்" என்ற தேறுதல் வார்த்தைகளை கூறினார், தொலைந்த உற்சாகம் மீண்டது.

ஒருவழியாக அந்த இரண்டு பேர் வந்து சேர்ந்துவிட, பயணம் தொடங்கியது. காட்டின் ஆழ் பச்சை வண்ணமடித்த ஜீப்பில் பயணத்திற்கு தயார் ஆனோம். எங்களுடன் நான்கு வாத்தியார்கள் ஏறிக் கொண்டார்கள். நாங்கள் நால்வரும் ஒன்றாக அமர முடியாதது குழந்தைகளுக்கு சற்றே வாட்டத்தை ஏற்படுத்தியது. எனினும் இதை போன்ற பொது பயணங்களில் இதுமாதிரி சிக்கல்கள் நிகழக் கூடும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துவதும் ஒருவித கற்பித்தல் தானே, அவர்கள் அப்போது தானே அனைவருடனும் ஒன்றி பழகுவார்கள் என்ற சமாதானத்தை கூறிக் கொண்டு பயணத்தை தொடங்கினோம்.

இசை இல்லாத பயணம் ஒரு பயணமா என்ன ... இளையராஜா எங்களுடன் கூடவே பயணித்தார். "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா...குக்கூ குக்கூ குக்கூ..." என்று சித்ராவின் இனிமையான குரலில் சீரான மலைச் சாலையில் ராஜாவின் இசை தாலாட்ட மெல்லிய குளிர் இதம் பரப்ப முன்னேறிக் கொண்டிருந்தோம். போகும் வழியெல்லாம், இடமும் வலமும் நிறைய சின்னச் சின்ன சிற்றருவிகள் சலசலத்து குளுமையை கூட்டின. சற்றே தூரத்தில் தெரிந்த பெரிய அருவியை காட்டி அங்கு தான் போக போகிறோம்(திட்டமாக) என்று மகளிடம் கூறினேன். அப்போது சட்டென்று இளையாராஜா விடைபெற்றுக் கொண்டார் குத்துப் பாடல்கள் தொடங்கின.

ஜீப்பின் பின்பக்கங்களிலும் ஸ்பிக்கர் பொறுத்தப்பட்டிருந்ததால் ஜீப்பே பாடல்களால் அதிர்ந்தது. ஆடத் தெரியாதவன் கூட ஆடி விடுவான் போல என்று நினைத்துக் கொண்டிருந்த போது தான், நீங்களும் ஆடலாம் செல்லங்களா என்று ஜீப் எங்களை குலுக்கத் தொடங்கியது. தார் சாலையில் இருந்து விடைபெற்று கொண்டு சாலையே இல்லாத வேறு ஒரு கிளை மலைப் பாதைக்கு திரும்பினோம். நல்ல வேளை பொங்கலை ருசி பார்த்ததோடு வைத்து விட்டோம் என்று எண்ணுமளவுக்கு ஜீப் எங்களை குலுக்கி எடுத்தது. இவ்வளவு குலுக்கு குலுக்கி நம்மை அருவிக்கு தான் அழைத்து போகிறார்கள் என்று பார்த்தால் .... அருவியல்ல அது வேறொரு இயற்கையின் அற்புதம்..... கிட்டதட்ட ஒரு காலப் பயணம்...

தொடரும் ......