ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் நடத்திய ஆய்வில், செப்பு பட்டயத்தில் 'ஹேலி' வால் நட்சத்திரம் பற்றிய குறிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்பட்டயத்தில் ‘கி.பி.1456-ம் ஆண்டு, ஜூன் 28-ம் தேதி’ என வால் நட்சத்திரம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.
கி.பி.1456-ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் பகுதி விஜயநகர பேரரசு ஆட்சியின்கீழ் இருந்தது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வால் நட்சத்திரம் பற்றி துல்லியமாக குறிப்பிடப்பட்டிருப்பது, சமீபத்திய தொல்லியல் ஆய்வாளர்களை வியக்க வைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த வால் நட்சத்திரத்தை பற்றி அமெரிக்கர்கள் கண்டுபிடிப்பதற்கு முன், நாம்தான் முதலில் அடையாளம் கண்டுள்ளோம் என்பதுதான்.
இந்த செப்புப் பட்டயத்தில், ஒருவருக்கு விஜயநகர மன்னர் மல்லிகார்ஜுனன் நிலம் தானமாக வழங்கியதை பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டயத்தின் சிறப்பு, அக்காலத்தில் காணப்பட்ட பிரகாசமான வானியல் நிகழ்வான ‘ஹேலி’ வால் நட்சத்திரத்தைப் பற்றிய விரிவான குறிப்பாகும்.
ரிக்வேதம், அதர்வண வேதம் மற்றும் பிருஹத் சம்ஹிதா போன்ற பண்டைய நூல்களில் வால் நட்சத்திரங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், எந்தவொரு உண்மையான வானியல் நிகழ்வுக்கும் குறிப்பிட்ட தேதியைக் குறிப்பிடவில்லை.
ஹேலி வால் நட்சத்திரம் பற்றி ஸ்ரீசைலம் கல்வெட்டு, இந்தியாவில் ஆரம்பகால உறுதியான கல்வெட்டு குறிப்பாகும். இது விஜயநகர காலத்தின் கலாசார முக்கியத்துவத்துக்கான சான்றுகளை வழங்குகிறது.
தெலுங்கில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டு, அக்காலத்திய செப்புத் தகடு மானிய வடிவத்தைப் பின்பற்றுகிறது.
நில மானிய விவரங்களுடன் வானியல் நிகழ்வையும் சேர்த்து குறிப்பிட்டிருப்பது, அத்தகைய நிகழ்வுகள் சட்ட, மத மற்றும் நிர்வாக ஆவணங்களில் பதிவு செய்யுமளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்ததை காட்டுகிறது.
சீனா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சமூகங்களும் வால் நட்சத்திரம் பற்றி பதிவு செய்திருக்கின்றன.
பண்டைய காலத்தில் சீன ஆய்வாளர்கள் தொடர்ந்து வானியல் நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.
ஹேலி வால் நட்சத்திரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு தோற்றமும் சீனப் பதிவுகளில் காணப்படுகின்றன. இந்த நட்சத்திரம் 75-76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்படும்.
கி.பி.1066-ம் ஆண்டு வில்லியம் தி கான்கரர், இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது ஹேலி வால் நட்சத்திரம் தோன்றியது பேயூ டபேஸ்ட்ரியில் (Bayeux Tapestry) பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி.1456-ம் ஆண்டு மீண்டும் வால் நட்சத்திரம் தோன்றியதும் தோற்றமும் ஐரோப்பிய வானியலாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாபிலோனியா, பாரசீகம் போன்ற மத்திய கிழக்குப் பகுதிகளிலும் வால் நட்சத்திரங்களின் பதிவுகள் உள்ளன.
Leave a comment
Upload