தொடர்கள்
சினிமா
போதையின் பிடியில் தமிழ் சினிமா ?- லைட் பாய்

20250527170406571.jpg

மதுபான விடுதியில் நடந்த அடிதடி தகராறில் பிரசாத் என்பவர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

பிரசாத் தற்சமயம் அதிமுகவில் இருக்கிறார். இவர் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுகவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

இந்த அடிதடி பிரச்சனையை விசாரித்த காவல்துறைக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் இவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதும், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்ற விவரமும் தெரிந்தது.

குறிப்பாக பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோகைன் என்ற போதை சப்ளை செய்திருக்கிறார் என்றும் பிரசாத் போலீஸிடம் தெரிவித்து இருக்கிறார்.

கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் பிரசாத்துக்கு இந்த போதை மருந்து வாங்க கூகுள்- பே மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் பிரசாத்துக்கு பணம் அனுப்பி இருக்கிறார்.

இந்த அடி தடி சண்டையில் பிரதீப்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர் போதை பொருள் பற்றிய போலீசுக்கு சொன்ன தகவலில் போதை பொருள் சப்ளை செய்யும் ஜானிடம் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினர் போதைப் பொருட்கள் வாங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் குடும்பப் பிரச்சினை காரணமாக போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனேன். நான் யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். இப்போது இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவையும் தற்சமயம் போலீஸ் விசாரிக்கிறது.

தமிழ் சினிமாவில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் கைதுக்கு பிறகு நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இந்த பழக்கம் ரொம்ப நாட்களாக இருக்கிறதுதானே என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகைகள் சிகரெட் மற்றும் மது போதைக்கு பழக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போதை மருந்து பழக்கமும் அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் கூட ’ஸ்ரீகாந்த் பாவம் எனக்குத் தெரிந்த திரை உலகில் நிறைய பேர் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் 'என்று சொல்லி இருக்கிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில் நான் மது குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று பதிவு செய்திருந்தார் ஆக போதைப்பொருள் பழக்கம் என்பது தமிழ் சினிமாவுக்கு புதியதல்ல.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டிய அரசாங்கம் சரி வர கண்காணிக்கிறதா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது.

மலையாள சினிமாவில் கூட சில திரை பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்கள். இதைவிட அதிர்ச்சி தகவல் ஒரு படத்தின் பட்ஜெட்டில் நட்சத்திரங்களுக்கு போதை பொருள் பயன்பாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுவதாக புகார் சொன்னார் நடிகை சாண்ட்ரா தாமஸ்.

கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடிகர்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்கிற உறுதியை தரும் வகையில் ஒரு புதிய பிரிவை சேர்த்திருக்கிறார்கள். தமிழ் பட தயாரிப்பாளரும் இதை பின்பற்றலாம் .

இப்போது கூட விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்துவோர் என்று நடிகர் நடிகைகள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்த விஷயத்தை ஆளும் தரப்புக்கு கொண்டு சென்றுள்ள காவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறது.