முருகா’ என்று நாம் ஒருமுறை சொல்கின்ற பொழுது, முருகனோடு சேர்ந்து மும்மூர்த்திகளும் அருள் புரிய வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் நமக்கு வந்து சேரும் என்பது ஐதீகம்..
எங்கும் நிறைந்தவன் முருகன்..! இயற்கையின் எழில் வடிவம் எல்லாம் அவன் உருவமே…!! அழகுடன் விளங்குபவை எல்லாம் ஆறுமுகனின் தோற்றமே….!!!
அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் சில ஆலயங்களைக் கண்டு தரிசிப்போம்!!
முருகன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது. இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊரில் முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.
முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருள்பாலிக்கிறார்.
கும்பகோணத்தில் உள்ள “வியாழ சோமேஸ்வரர்” ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார்.
திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.
திருவையாறு ஐயாரப்பன் சந்நிதி பின்புறம் கையில் வில் அம்போடு தனுசு சுப்ரம்மண்யர் என்ற பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார்.
திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, மேலும் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார்.
திருப்பூர் அருகே உள்ள கனககிரியில் முருகன் கையில் கிளி ஏந்தியபடி காட்சி தருகிறார்.
செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்கமாலைக் கொண்டு தவக் கோலத்தில் காட்சி தருகிறார்.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறு கரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் திருமாலைப்போல் முருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.
பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகன் வில் அம்பு ஏந்திய பஞ்சலோக சிலை வடிவில் உள்ளார்.
ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ‘காட்டி சுப்ரமணியா’ எனும் சுப்ரமண்யா திருத்தலத்தில் முருகப்பெருமான் பாம்பு வடிவில் காட்சி தருகிறார்.
இப்பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை. அதுபோல், பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதுமில்லை
திருக்கடையூர் அருகில் உள்ள திருவிடைக்கழி முருகன் கோயில் சிவாலய வடிவில் உள்ளது. சிவபெருமான் உருவாக இங்கு முருகன் வீற்றிருப்பதாக ஐதீகம். முருகப் பெருமான் நின்ற கோலத்தில் காட்சி தர அவருக்கு முன்னே ஸ்படிக லிங்க வடிவில் சிவன் அருள் புரிகிறார்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார்
சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். முருகனின் காலடியில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் எதிரெதிரே இருக்கின்றன.
திருவண்ணாமலை – வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி நட்சத்திர கிரி மலையில், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலத்துக் கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேரக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
ஓம் முருகா சரணம் சரணம்!!
Leave a comment
Upload