தொடர்கள்
ஆன்மீகம்
திருச்செம்பூர் திருமுருகன் (மும்பை முருகன்)  - பால்கி

20220308190322803.jpg

தென்னகத்தை விட்டு வடக்கே சென்றால் கார்த்திக் ஸ்வாமி என்றே அறியப்படும் நமது அனைத்து தமிழரின் முதற்கடவுளாம் அழகன் முருகன் பேச்சிலர் என்றும் அறியப்படுபவரும் கூட. இங்குள்ள சில கார்த்திக் கோயில்களில் பெண்களும் போக அனுமதியில்லை அல்லது துணிவதில்லை என்றால் மிகையில்லை. ஆச்சர்யமாயிருக்கிறதல்லவா! இங்கு அவர் அவரோட தம்பி அய்யப்பன் மாதிரி நைஷ்டிக்க பிரம்மச்சாரியென கருதப்படுபவதால் தான். இதே மாதிறி தான் தென்னகத்தில் விநாயகன் பேச்சிலர், ஆனால் இங்கோ ரித்தி சித்தி என்று இரு மனைவியருண்டு.

அப்படியிருக்கும் மஹராஷ்ட்ரா மும்பை மத்திய நகரில் செம்பூர் பகுதியில் குடி கொண்டிருக்கும் முருகன் வள்ளி தேவசேனாவுடன் எழுந்தருளி அருள் பாலிப்பது சிறப்பு தான். பாருங்களேன். செம்பூர் என்பதயும் இங்குள்ளோர் திருசெம்பூர் என்றே அன்புடன் அழைக்கின்றனர். இன்னும் சிறிது காலத்தில் செம்பூர் என்ற இந்த பகுதியை திருசெம்பூர் என்று மாநிலம் அறிவித்தால் அதில் ஆச்சர்யபடுவண்டாம்.

சற்றே மூணு கால் நூற்றாண்டு பின்னோக்கி சென்றால் இந்த கோயில் அமைந்த வரலாறு கிட்டும்.

ஸ்ரீசுப்ரமண்ய சமாஜம், மும்பையின் அப்போதைய 'மினி-மெட்ராஸ்' மாட்டுங்காவின் மத்திய புறநகர்ப் பகுதியில் நாற்பதுகளின் மத்தியில் சுப்பிரமணிய பகவானின் பேரில் அன்பு கொண்ட சில பக்தர்களால் உருவானது. தெற்கில் இருந்து இறையுணர்வு கொண்ட புலம்பெயர்ந்தோர் நமது பண்டைய முனிவர்கள் மற்றும் புனிதர்களால் முன்வைக்கப்பட்ட பக்தி-வழிபாட்டு முறையின் அடிப்படையில் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கைவிடாது போற்றி வந்தனர். தென்னிந்தியாவின் பக்தி-இயக்கம், தெய்வீகத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாட்டிலும், ஒட்டுமொத்த சமூகத்தையும் உள்ளடக்கியதாக உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் மற்றும் கோயில்களில் புராணங்களின் வெளிப்பாடு ஆகியவற்றில் இது வெளிப்படுத்தப்பட்டது, இதனால் சாதாரண மனிதன் தனது அன்றாட மற்றும் ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்த முடியும். இறுதி ஆயிரத்து தொள்ளாயிறத்து நாற்பதுகளின் இத்தகைய தாழ்மையான சூழ்நிலையில்தான், மாட்டுங்காவில் உள்ள மறைந்த ஸ்ரீ டி.வி.லக்ஷ்மணனின் ('விம்கோ லக்ஷ்மண்' என்று பிரபலமாக அறியப்பட்டவர்) இல்லம், இன்று ஸ்ரீ சுப்பிரமணிய சமாஜமாக இருக்கும் மையமாக மாறியது, மேலும் அது தொடர்ந்து செயல்பட்டு வந்தது. 1980 வரை அந்த முகவரி. ஸ்ரீ சங்கர மடம் மற்றும் தென்னிந்திய பஜன் சமாஜத்தின் அறங்காவலர்கள் தங்களுடைய வளாகத்தை கிடைக்கச் செய்ததாலும், திறந்தவெளியில் தற்காலிக/மாற்றுப் பந்தல்களைப் பயன்படுத்துவதற்கு மாநகராட்சி அனுமதித்ததாலும் அவர்களுக்குச் சொந்த இடம் இல்லாதது ஒரு தடையாக இருக்கவில்லை. ஸ்கந்த ஷஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முக்கிய விழாக்களும், ஹரிகதா காலக்ஷேபம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும், சமய சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன.

கோவில் இருப்பிடம் – மும்பையின் செம்பூர் செட்டா (Chedda Nagar) நகரில் தேவப்ரஸ்னத்தின் மூலம் ஏற்ற இடத்தை உறுதி செய்து தகுந்த நிலத்தை வாங்கினர். அடர்ந்த காடாக இருந்த இப்போதைய செட்டா நகர்பகுதி பழங்காலத்தில் தேவ தேவியர்களை போற்றி வருவதர்க்காக அனேக புண்ணியஆத்மாக்கள் "தவம்" மேற்கொண்ட இடமாக இருந்ததாம், எனவே, இந்த இடம் கோவில் கட்டுவதற்கு ஏற்ற இடம் என்றும் தொடர்ந்து நடந்த அஷ்டமங்கல ப்ரஸ்னமும் வெளிப்படுத்தியதாம்.

கோவில் கட்டுமான குழுவில் பேராசிரியர் டி.வி.ராமானுஜம் தலைவராகவும், ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஎம்டி சர்வஸ்ரீ கே.கே.உன்னி, அன்றைய மும்பையின் தொழில் நிறுவனகளின் தலைவர்களான வி.ராமதுரை, எஸ்.வெங்கடேஸ்வரன், முன்னணி மூத்த வழக்கறிஞர், கே.என்.எஸ்.சாஸ்திரி மற்றும் பலரைக்கொண்டு கோவில் கட்டுமானக் குழு அமைக்கப்பட்டது.

பாலாலயம் (கோயில் கட்டும் முன்பும், கும்பாபிஷேகத்திற்கு முன்பும் அமைக்கப்பெறும் அக்கோயிலின் மூலவர் மற்றும் பிற தேவதைகளின் உறைவிடம்)- ஆகம சாத்திரங்கள் விதித்தபடி, சமாஜம் ஒரு பாலாலயத்தைக் கட்டியது, அங்கு முருகன், விநாயகர் மற்றும் தர்ம சாஸ்தா சிலைகள் நிறுவப்பட்டன. 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கற்றறிந்த சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்பட்ட பாலாலயத்தின் கும்பாபிஷேகம், முருகப்பெருமானின் தீவிர பக்தரும், ஸ்கந்தபுராணத்தின் பிரபல விரிவுரையாளருமான ஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அருளப்பட்டது.

காஞ்சி முனிவரும், காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆச்சாரியாருமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் புனித ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதலும் கோயில் திட்டம் நல்லவிதமாக பரிணமித்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது அருள் இக்கோவில் வளாகத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் உணரப்படுகிறது எனில் மிகையாகாது.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி அவர்களின் ஒப்புதலுக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், கோவிலின் வடிவமைப்பு மற்றும் மாதிரியுஅவர் முன் வைக்கப்பட்டன. அவரது ஆசியில் செப்டம்பர் 1972 இல் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. 'பஞ்ச ஸிலன்யாசம்' புகழ்பெற்ற பிரமுகர்களான ஸ்ரீ வி.எஸ். பகே (அப்போதைய மகாராஷ்டிர சட்டமன்றக் கவுன்சில் தலைவர்), பேராசிரியர். டி.வி.ராமானுஜம் (முன்னாள் ஷெரிப், மற்றும் சண்முகானந்த சபையின் தலைவர்) மும்பை, ஸ்ரீ கி வா ஜகந்நாதன் (சிறந்த தமிழ் அறிஞர் மற்றும் கலைமகள் ஆசிரியர்), ஸ்ரீமத் பாகவதத்தின் சிறந்த விரிவுரையாளர் ஸ்ரீ அஞ்சம் மாதவன் நம்பூதிரி (குருவாயூர்) மற்றும் ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் (இயக்குநர், பாரதிய வித்யா பவன்) ஆகியோரின் கைகளால் நடத்தப்பட்டதுப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களால் உரிய சடங்குகள் நடத்தப்பட்டன.

20220308190423506.jpg

நிதி திரட்டல் முயற்சியாக பல தன்னார்வலர்களும் வீடு வீடாக சென்று நன்கொடை வஸூலித்தனர். ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது வழக்கமான சொற்பொழிவுகளின் போது சிறிய ஹுண்டி பெட்டிகள் மூலம் பக்தர்கள் பங்களிக்குமாறு அறிவுறுத்தினார். இவ்வாறு சில துளிகள் வெள்ளமாக மாறத்தொடங்கியது. மும்பையின் காஸ்மோபாலிட்டன் பொதுமக்களிடமிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நன்கொடைகளின் நீரோடைகளாக மாறியது. இந்த கோயிலில் குருவாயூரப்பன் மற்றும் துர்கா தேவியின் ஸன்னிதிகளை நிறுவுவதற்கு ஸ்ரீ அஞ்சம் மாதவன் நம்பூதிரி நடத்திய பாகவத சப்தாஹ நிகழ்ச்சிகளின் ஒரு பேருதவியாக இருந்தது. ஸ்ரீ அஞ்சம் மாதவன் நம்பூதிரியின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட அஷ்டமங்கலப் பிரஸ்னம், இந்த இடம் பழங்காலத்தில் துர்கா தேவியின் இருப்பிடமாக இருந்ததையும் வெளிப்படுத்தியது.

நிதி திரட்டுவதற்காக பல இசை கச்சேரிகள், நடனம் மற்றும் நாடக விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன மற்றும் பலர் தாராளமாக நன்கொடை அளித்தனர். மகாராஷ்டிரா அரசாங்கமும் தனது சார்பாக கட்டட பரப்பளவு பெருதாக்க இசைந்தது. இந்திய அரசு, ரயில்வே அமைச்சகம் கிரானைட் கற்களைக் கொண்டு செல்வதற்கு சலுகை வழங்கியது மற்றும் நிதி அமைச்சகம், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80G 2(b) இன் நோக்கத்திற்காக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் புகழ்பெற்ற பொது வழிபாட்டுத் தலமாக கோயிலை அறிவித்தது.

20220308190446373.jpg

கோவில் கட்டுமானம்- 4.5 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கான கல் தமிழகத்தின் மயிலத்தில் இருந்து பெறப்பட்டது. பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட உற்சவ மூர்த்தி சுவாமிமலையைச் சேர்ந்த கைவினைஞர்களால் செய்யப்பட்டது. திரு குமரேச ஸ்தபதி (ஜனாதிபதி விருது பெற்றவர் மற்றும் மகாபலிபுரம் சிற்பக் கழகத்தின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர்), அவரது உதவியாளர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐம்பது கைவினைஞர்களைக் கொண்ட அவர்களின் குழுவினர் இந்த சிலைகளை செதுக்கினர். சுமார் 800 டன் கிரானைட் (பகுதியாக முடிக்கப்பட்ட கோயில் அமைப்பு) மகாபலிபுரத்தில் இருந்து பம்பாய்க்கு படகில் கொண்டு செல்லப்பட்டது ஒரு சிறப்பு செய்தியே.

கட்டிடக் கலைஞரான திரு. சிஎஸ்கே ராஜ், ஆகம சிற்ப கலைகளின் ஆணைகளின்படி கோயிலை வடிவமைக்கும் தனித்துவமான பொறுப்பைக் கொண்டிருந்தார், அதே நேரத்தில் சட்டப்பூர்வ நகராட்சி மற்றும் அரசாங்க அமைப்புகளின் விதிகள், விதிமுறைகளுக்கும் இணங்கியும் செயல்பட்டார். சன்னதிகளின் பூமியுடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டிய தேவையை பூர்த்தி செய்ய, அதே உயரத்தில் மணல் நிரப்பப்பட்ட கான்கிரீட் தூண்களை அமைப்பதன் மூலம், அவை பிரத்தியேக அடித்தளங்களாக செயல்படுவதோடு கட்டமைப்பிற்கு வலு சேர்க்கின்றன. நீல நிற கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கருவறை மற்றும் கோவிலுக்கு செல்லும் 108 படிகள் ஆகியவை கோயிலின் இரண்டு சிறப்பான அம்சங்களாகும். கோயில் கட்டிடத்தின் உச்சியில், வானத்தை பார்ப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட கோயில் கட்டிடம் பழங்கால மற்றும் நவீன கட்டிடக்கலையின் தனித்துவமான அடையாளமாக திகழ்கிறது.

இக்கோயிலில் காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதா பீடம், துவாரகா பீடம், சகடபுரம் மற்றும் மாதா அமிர்தானந்தமயி ஆச்சார்யர்கள் அவ்வப்போது முகாமிட்டு கோவில் வளாகத்தை மென்மேலும் புனிதப்படுத்தியுள்ளனர்.

24 ஜனவரி 1980 அன்று புதிதாகக் கட்டப்பட்ட கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் முறையே 12 டிசம்பர் 1991, 27 மார்ச் 2000, 26 ஜனவரி 2011 என மகாகும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. இதோ 6 ஏப்ரல் 2022 மஹா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. ஆகம சாஸ்திரங்களின்படி, மஹா கும்பாபிஷேகம் என்பது ஒரு இந்து கோவில் சடங்கு ஆகும், இது தெய்வத்தின் மாய சக்திகளை ஒருங்கிணைக்கும், மற்றும் ஒன்றிணைக்கும். நமது சாஸ்திரங்களின்படி, கும்பாபிஷேகம் செய்வதும், கோயிலின் ஜீரணோதரனத்தில் பங்கேற்பதும் 100 அஸ்வமேத யாகங்கள் செய்ததற்குச் சமம்.

ஆகம விதிகளின் படி ஒரு வார கால யாக சாலை வைபவங்களோடு நேற்று மூலவருக்கும் மற்றும் அனைத்து சன்னிதி தேவதைகளுக்கும் ப்ரதான கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் மஹராஷ்ர ஆளுனர், திரு பகத் சிங் கோஷியரி, டாடா சன்ஸ் மற்றும் ஏர் இண்டியா சேர்மேன் திரு சந்திரசேகரன் தலைமையில் நடந்தேறியது. முதல் கும்பாபிஷேக கமிட்டியிலும் சரி நேற்றைய கும்பாபிஷேக கமிட்டியிலும் ஏர் இண்டியாவின் மூத்த தலைவர்களே முன்னின்று நடத்தி வைத்திருப்பது மற்றுமொரு சிறப்பே என சொல்லலாம்,

தினசரி பூஜை முறைகளும், விசேஷ நாள்களில் பெரிய ஆன்மீக வைபவங்களையும் தமிழக மற்றும் கேளாவைச் சேர்ந்த முறையே ஆகம விதிகளில் முதிர்ந்த சிவாச்சாரியர்களும் தந்த்ரிகளும் மேற்கொள்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த தந்திரிகள் தந்திர சாஸ்திரங்களின்படி குருவாயூரப்பன் மற்றும் தர்ம சாஸ்தா கோயில்களில் சடங்குகளை (அர்ச்சனைகள், அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள்) செய்கிறார்கள்.

இந்த கோவில் ஒரு உயரமான கட்டிடத்தில் உள்ளது ஆதலினால் குன்று போன்ற அமைப்பை தருகிறது. ஆம், குன்று தோறும் குமரன் என்ற வாக்கிற்கேற்ப இந்த கோயில் அமந்திருப்பதும் பல அரிய சிறப்புகளில் இதுவும் ஒன்றே. 108 படிகள் ஏற கொடி மரத்துடனும் மூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு கணபதி, ஐயப்பன், துர்க்கை, குருவாயூரப்பன். நவக்கிரக சன்னிதிதிகளும் அமைய பெற்றுள்ளன. த்வார விநாயகர் மற்றும் அனுமான் சந்நிதிகள் படிகள் ஏறும் முன்பு ப்ரதான வாயிலில் இரு புரமும் அமைந்து உள்ளன.

20220308190520701.jpg

நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்து, இங்கு தமிழகத்தின் கோவில் கலாச்சாரத்தை தவறவிடுகிறோமே என்று, கவலைப்பட வேண்டாம். மாம்பலம் அல்லது மயிலாப்பூரின் பைலேன்களில் நீங்கள் காணக்கூடிய அதே தெய்வீக சூழலை இந்த கோயிலும் வழங்குகிறது. காலை மாலை இரு வேளைகளிலும் நாதஸ்வரத்துடன் ஆரத்தி நடக்கிறது, அது உங்களை மயக்கும் என்பது திண்ணமே.

மற்றுமொரு ஹைலைட்டாக இங்கு தங்க ரதமும் உண்டு. மும்பை வாழ் நகரத்தார் மாதத்திற்கு ஒரு முறை பல்வேறு இடங்களில் இருப்பினும் 20, 25 கிமீ குறையாத தூரம் பாத யாத்ரையாக நடந்து இங்கு வந்து கூடி தங்கள் குல விளக்கம் திருமுருகனை கண்ணார கண்டு, ஆடி பாடி பின்பு தாங்கள் தங்கள் கைய்யோடு கொண்டு வந்திருக்கும் உணவினை பங்கிட்டு பிறர்க்கும் ஈந்து தானும் உண்பது ஒரு சிறப்பு செய்தியாகும். ஓரிருமுறை அவர்களுடன் சென்று வந்த அனுபவம்தான்.

தமிழ் கடவுளாம் முருகனின் இக்கோயில் இங்கு வாழும் அனைத்து தமிழ் அறிந்த மக்களுக்கு ஒரு பெரிய வரப்ரசாதமே. பங்குனி உத்திரமென்ன, தை பூசமென்ன, கந்தர் ஷஷ்டியென்ன, சூர சம்ஹாரமென்ன தேவர்களின் கல்யாணங்கள் மற்றும் நாராயணீயம், பாகவதம், இராமாயணம் பாராயண உபன்யாசங்கள் பல பல ஆன்மீக நிகழ்வுகளில் இக்கோயில் விழாகோலம் பூண்டிடும் காவடியாட்டமும் கண்டிடலாம். இயல் இசை நிகழ்ச்சிகள் தென்னகத்து கலைஞர்களை அழைத்து கோலாகலமாக கொண்டாடிவர். அதிலும் அய்யப்ப சீசன் ப்ரசித்தம்.

20220308190552561.jpg

இன்று இக்கோயில் பல்வேறு இடங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைச் சேர்ந்த மக்களுக்கு நம்பிக்கை மற்றும் பக்தியின் முதன்மை நிறுவனமாக உள்ளது என்பது நிதர்சனம். ஒரு கிறிஸ்தவரான திரு. சி.எஸ்.கே. ராஜ், கோயிலின் கட்டமைப்பை வடிவமைத்தார் மற்றும் திரு. அப்பாஸ் ஜுஸ்டன்வாலா, ஒரு போஹ்ரா முஸ்லீம், தமிழ்நாட்டின் பழங்காலக் கோயில் கட்டும் கலையுடன் ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைப்பைக் கொடுத்தார் என்பதன் மூலம் இந்த கோயில், மொத்தத்தில், மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் உயிருள்ள அடையாளம்.

பால்கி

.