தொடர்கள்
தொடர்கள்
காதல் பொதுமறை -83 காவிரி மைந்தன்

20220102222315873.jpg

20220201213110902.jpg

ஆனந்தபைரவியில் அன்பே எனைத் தாலாட்டு!

20220308164145107.jpg
அன்பின் அணிவகுப்பே! அழகின் முழுப் படைப்பே!

எழுதி முடியாத ஏகாந்த ஓவியமே!

என்னுள் வாழும் இன்ப நிலவே!

உனை எண்ணி வரைகின்ற மடல்கள் எல்லாமே உயிர்பெற்றுத் திகழ்வதைப் பார்!

திரைமறைவில் நடக்கின்ற காட்சிகள்கூட மனக் கண்முன்னே தெரிகிறது காண்!

விழிவிருந்தை தினம் தந்து எனை மயக்கும் கண்மணியே!

உன் மடியில் தலைசாய்ந்தபடி வரிவரியாய் கவிசொல்லத் துடிக்கிறது எந்தன் மனம்!

அதிகாலை குயில்பாடும் ஆனந்த முகவரியில் உன் தோள்மீது சாய்ந்தபடி ஊர்வலங்கள் வேண்டுகின்றேன்!

அந்திமாலை வந்துவிட்டால் அடியே உன்னோடு சங்கமிக்கும் அந்தப்புரம் வேண்டுமென்பேன்!

இடையில் மட்டும் உன் நினைவு இல்லாமலா போய்விடும்! எனவேதான் அவ்வப்போது இன்பத்தமிழ் உரையாடுகின்றேன்!

களவினைக் கற்று மற என்றார்களே.. எங்கே நீ களவாடியதைத் திருப்பிக் கொடுக்காதவரை.. இதயப் பரப்பில் இத்தனை நடக்கும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை!

சுற்றிவளைத்து உன் கண்கள் நடத்திய போரில் கைதுசெய்யப்படும் நாள்வரை! உள்ளமெல்லாம் துள்ளுகிறதே உன்னடிமை ஆனபின்பு!

என்ன இது விந்தையென இன்னும் நான் அறியவில்லை! மலர்க்கணைகள் பாய்ந்திருக்கும் மார்பினிலே சாய்வதற்கு மனம்விரும்பும் காரணத்தை அறிவாய் நீ என்பதை மறுப்பேதும் சொல்லாமல் மெளனத்தில் மாலையிடு!

இருவிழிகள் நடத்துகின்ற இனியதொரு பாடசாலை - காதலகம் என்கின்ற இரகசியத்தை வெளியிடு!

அச்சம், நாணம், ஆகியவற்றின் அடிச்சுவட்டில் நடைபோடும் என் மன ராணி உன்னெழிலை ஒவ்வொன்றாய் தந்துவிடு!

என்ன சொல்லப் போகின்றாய் என்பதிலே ஆர்வத்தை எந்நாளும் தூண்டிவிடு! ஆசையிலே அலைகள் பாயும் அந்தரங்க நாழிகையில் அன்பே எனைச் சேர்ந்துவிடு! அதற்குப் பின் நடப்பதென்ன - விழியில் வினா தொடுப்பதையும் உடனடியாய் நிறுத்திவிடு! எனைத் தாக்கும் கண்களுக்கு இனிய முத்தம் தந்தபடி முன்னுரை தொடங்கிடுவேன்!

முத்தாடும் தருணங்கள் மோகனங்கள் போதுமென்ற பல்லவியை நீயும் விடு! இன்பங்கள் விளைகின்ற இனிய பொன் வேளையிலே அன்பின் ராகங்கள் அனைத்தையும் பாடிவிடு!

கைகள் கலந்தாடும் வைபவங்கள் நடத்திடவே கண்களால் நீ ஆணையிடு! உள்மூச்சு வாங்குகின்ற முந்தானை பற்றி முழு ஆராய்ச்சி நான் காண சம்மதத்தைத் தந்துவிடு!

ஏக்கங்கள் தீர்ந்திடவே ஏகாந்த நிலைகாண என்மீது சாய்ந்துவிடு! தாகங்கள் தணித்திடவே தரவேண்டும் அத்தனையும் தேன்விருந்தாய் மாற்றிவிடு! மோகங்கள் ஏனின்னும் என்கின்ற கேள்விக்கு விடைகாண பஞ்சணையில் போரைத் தொடு! அஞ்சுகமே!

கொஞ்சிடத்தான் அழைக்கின்றேன் பூங்குயிலே! உன் குரலால் ஆனந்தபைரவியில் அன்பே எனை நாளும் தாலாட்டு!

குற்றாலச் சாரலென குளிர்த்தென்றல் வருடிவிடும் பொற்காலம் இனிவரட்டும்!

கனியிதழில் சுவையதிகம் கண்டவர்கள் சொன்னதுண்டு!

கன்னி இதழில் என்ன சுகம் காணத்தான் வந்தேன் இன்று! சற்றே அருகமர்ந்து சரிவாய் சரிந்தபடி வீணையன நீ மாறு!

என் விரல்கள் விளையாடட்டும்! பட்டுத்தளிருடலில் பருவராகங்கள் திட்டமிடாமலே தினம் மீட்ட நான் வருவேன்!

சுகமான வேதனைகள் சொல்லத்தான் வழியின்றி வரும் வார்த்தைகளும் உடையட்டுமே! அணுவணுவாய் சோதனைகள் அங்கங்கே நடக்கும்போது அன்பே உன் முகம் சிவக்கட்டுமே!

நடந்தவை அத்தனையும் மறுபடியும் என்று நீ அடம்பிடிக்கும்படி வைப்பேன்!

போதும் என்கின்ற சொல்லுக்கு பொருள்மாறும் நிலைகண்டு புன்னகையினை சிந்துவாய்! தடையின்றி விளையாடும் தமிழெடுத்து தங்கமே உன் எழில்பாட சிந்துகவி நான் படைப்பேன்!