உள் நா உச்சரித்துக்கிடந்தாலும்..
அன்பே!
வெள்ளைத் தாளைக் கையிலெடுத்தேன்! உன்னை நினைத்தே எண்ணம் வடித்தேன்!
நினைவுகள் மையாகி நிறைந்து வழிய வார்த்தைகள் வாய்மலர்ந்த அழகைக் காண்!
ஒற்றைவரியில் சொல்லத் தயங்கிய மூன்று வார்த்தைகள் கப்பம் கட்டும் விதமாய் காதல் மடல்களாக!!
ஒன்றிரண்டு.. என்பதெல்லாம் இங்கில்லை.. தினம் வந்தவண்ணமல்லவா என்றது உள்ளக் கடல்!!
ஒரு முறை உன் பார்வை பட வேண்டும் என்று நான் ரகசியமாய் மறைந்து நின்று ரசித்த நாளில்.. கண்ணிலேதும் படாதவள் போல் ஒதுங்கிச் சென்றாய். முதல் முறை நம் கண்கள் நான்கும் சந்தித்தபோது நவரச பாவங்கள் உன் முகத்தில் சில நொடிகளில்!
அதில் எந்த பாவத்தை ரசிப்பது என்று நான் திணறிப்போனேன்!
எனினும் எழிலார் பாவையிடம் நாளும் ரசிக்க பலவும் உண்டென்று உந்தன் கண்கள் என்னிடம் சொல்ல எந்தன் உள்ளம் துள்ளி விளையாடியது. பூவின் இதழ்கள் சிரிப்பதைப் போல புன்னகை சிந்திடும் கண்ணே பொன்னிற ஆடைக்குள் மின்னிடும் பூவாய் எந்தன் முன்னே எதிர்பட்டாய்!
இத்தனை அழகைப் பூட்டி வைத்தவள் என்று நான் அறியும்போது எத்தனை இன்பம் என் உள்ளத்தில் பாய்ந்தது என்பதை எப்படிச் சொல்ல?
கன்னியின் சுகமென்ன கண்டு அறியவே காத்திருக்கிறேன் என்றேன்!
சொன்னதும் வந்திட என்னால் முடியுமா என்றெதிர் கேள்வி தொடுத்தாய்!
விரல்நுனி பற்றி ஏற்றிய வெப்பம்.. உடலில் உள்ள அணுக்கள்வரை உடனே பாய.. அதை நீ அறிந்தும் வெட்கப்போர்வையில் நுழைந்துகிடந்தாய்!
பற்றிய கரங்கள் பவித்ரமாக.. பாவையின் அச்சம் போக்க.. இடைவெளிவிட்டு இதயம்தொட்டு மெல்லவே நான் நகர்ந்தேன்!
கையை எடுங்கள் என்று உள் நா உன்னில் உச்சரித்துக்கிடந்தாலும் உந்தன் கைதான் எந்தன் கைமீது இறுக்கம் சேர்த்ததடி!
அள்ளும்போதும் கிள்ளும்போதும் உன்னை அணைக்கும்போதும் சொல்லும் உந்தன் ஓர் சொல்லில்தானடி இன்பம் சேர்க்கிறாய்!
பட்ட இடங்களில் பரவசம் நிலவ.. படாத இடங்கள் பாவம் என்றாக.. பாவை படும் பாட்டை நான் என்ன சொல்ல?
வெட்கச் சிமிழ்கள் விளைந்த முகத்தில் இட்ட முத்தங்களால் கன்னங்கள் சிவந்தன!
ஒன்றை முதலில் தந்தபோது அடுத்து கன்னம் தானாய் திரும்பியது! தான் தரும்போது ஒன்றெனச் சுருங்கியவள் நான் தரும்போது மட்டுமே விரிகிறாள்!
காதலில் சமநிலை காண்பது எப்போது என்று உந்தன் காதோரம் வந்து நான் கேட்டேன்!
கணக்காய் பார்ப்பது களவியலில் உதவாது என்று கனிவாய்மொழி சொன்னாய்!
இனிதாய் தொடரும் இன்ப உறவின் இலக்கணம் அதுவென்று எழுதியும் வைத்தேன்!
பெண்மை பேசும் உண்மைகள் அங்கே உள்ள பூர்வமானதொன்றை அறிந்தேன்!
ஆண்மை கட்டியளக்கும் கதைகளெல்லாமே தேவை தேவை என்றவள் நீயடி!! சொல்லில் மயங்குகிறாயோ?
சொல்லால் மயக்குகிறாயோ? சொல்லடி என்றேன்! செல்லமாய் சிணுங்கினாள்!
சிதறிப்போனேன்!!
Leave a comment
Upload