தொடர்கள்
கவிதை
மன சாட்சி தான் கடவுள் - கோவை பாலா

20240230055537326.jpeg

மனசாட்சி தான் கடவுள்...!!

மனிதன் இறைவன் தொடர்பு
மனதின் வழியாய் தொடரும்...!
எந்த பெயரில் அழைத்தாலும்
அவனே அறிவான் எவரையும்...!
பக்தன் அவனை அழைப்பதற்கு
பாஷை என்று ஒன்றுமில்லை... !

பாடி அவனை அழைப்பதற்கு
பக்தராமதாஸர் தேவையில்லை..!
கர்த்தரைத் தேடும் கண்களுக்கு கையில் பைபிள் தேவையில்லை...!
அல்லாவை மனம் நினைப்பதற்கு
ஐந்து வேளை தேவையில்லை...!

உறைவிடமாய் பக்தியை நிரப்பி,
நிறைவிடமாய் நெஞ்சில் நிறுத்தி,
இறைவனுடன் எவரும் பேசினால்,
மனசாட்சியாய் இறைவன் ஆகி
மனிதனுள் இறங்கி வந்தே
மனதளவில் உடன் பேசுகின்றார்...!

அழைத்தவர் குரலுக்கு வருவேன்
என்றானே, அது உண்மை தானோ..?
நம்மைப் போல் இறைவன்
யாருடன் எப்படிப் பேசுவார்...?
எல்லோர் உடனும் பேசுகிறார்...!
எப்போதுமே அவர் பேசுகிறார்...!

அவரவர்கள் பேசும் மொழியில்
அன்றாடம் அவர் பேசுகிறார்...!
கடவுள் மனசாட்சி வடிவில்,
தனியாய் ஒவ்வொருவருக்கும்,
தவிக்கும் நிலையில் எல்லாம்
தீர்வு காண வழி தருகின்றார்...!

மற்றவர்பற்றி பிறரிடம் பேச
மனசாட்சியாய் மறுக்கின்றார்...!
தீயதைச் செய்ய நினனந்தாலும்,
தடம் மாறி செல்ல முயன்றாலும்,
ஆத்மா எனும் உள்ளுணர்வால்
நல்லறிவு வழி காட்டுகின்றார்...!

உள்ளுணர்வாய் பேசும் கடவுளை,
காது கொடுத்து கேட்காமல்,கழற்றி
படமாய் சுவரில் தொங்கவிட்டால்,
எண்ணங்கள் மேலோங்கி நிற்க,
சத்தியம் தர்மம் நேர்மை என்ற
உணர்வின் நியாயம் மறந்துவிடும்..!

கீதையும் குரானும் பைபிளும் மகான்களும் வழி சொன்னாலும்,
கோவிலும் சிலைகளும் அமைத்து
கற்பூரமும் தீபமும் காட்டிலும்,
எண்ணங்கள் கறைகள் படிந்து
நல்வழியும் நேர்மையும் மறந்தால்
மனசாட்சி கடவுளாய் உன்னுள்
மனதை உறுத்தி நிற்கும்...!