திருவான்மியூரில் உள்ள முருக பக்தர் பாம்பன் சுவாமிகள் கோயிலில் ஓதுவாராக சென்னையைச் சேர்ந்த எஸ்.எஸ். பிரியவதனா (24) என்ற ஒரு பார்வையற்ற பெண் சென்ற செவ்வாயன்று பணியமர்த்தப்பட்டிருக்கிறார். இவர் 12 ஆம் பெண் ஓதுவாரும் முதல் பார்வையற்றவரும் ஆவார்.
இந்த கோயிலில் சிறப்பு, பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது தான்.
வரவேற்கத்தக்க செயல்.
****************
படுக்கையில் இருக்கும் வழக்கு தொடுத்தவரின் தந்தையின் மனநலத்தை மதிப்பிடுவதற்காக அவரைச் சந்திக்கச் சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் மனித முகம் பாராடுக்குரியது. உயர் பதவியில் இருப்பவர்களிடம் இந்த முகத்தைக் காண்பது சொல்லொணா சந்தோஷத்தைத் தருகிறது.
கோடம்பாக்கத்தில் வசிக்கும் 83 வயதாகும் துரை 2021ல் ஹார்ட் அட்டாக்கில் பேசும் திறன் பாதிக்கப்பட்டும் குழல் மூலம் உணவு உட்கொள்கிறார். அவரை அவரது இல்லத்திலேயே சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. சுவாமிநாதன். பார்க்கப்போனால் துரையை கோர்ட்டுக்கு நேரில் ஆஜராகும்படி சொல்லியிருக்கலாம்.
இவர் வழக்கறிஞராக இருந்த காலத்திலும் சரி இப்போது நீதிபதியாக இருக்கையிலும் சரி நேர்மையின் பக்கத்தில் நின்று நீதிகாக வாதிடுவதும் நீதி வழங்குவதும் அனைவராலும் பாரட்டப்படும் செயலாகும்.
***********************
ஜூன் 23 ரோஹித் ஷர்மாவின் வாழ்வில் மறக்கமுடியாத நாளாம்.
ஆம், சரியாக 18 வருடங்களுக்கு முன் 23.06.2007 அன்று தான் முதன்முதலாக இந்தியாவிற்காக சர்வதேச அளவில் ஆட ஆரம்பித்த நாளாகும்.
அதிரடி ஓப்பனிங்க் பேட்ஸ்மேன், உலக கோப்பையை வென்ற கேப்டன் என்று அவரது மகுடத்தில் இருக்கும் மணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்று வரை மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் 499 மேட்சுகள் ஆடி 19,700 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் ஒன் டே ஆட்டப்பிரிவில் ஆடிக்கொண்டிருக்கிறார்.
2027 உலகக்கோப்பைக்கு அடி போடுகிறார்.
**************************
இதுவும் கடந்து போகும்.
ஏப்ரல் 22, 2025 பெஹல்காமில் நடந்த ஈனத்தனமான கோழத்தனமான தீவிரவாதிகளின் 26 இந்துக்களின் படு கொலையும் அதற்கான நமது இந்திய நாட்டின் ஆபரேஷன் சிந்தூர் பரிகாரமும் நடந்து முடிந்து அறுபது நாட்களாகின்றன.
நினைத்தது என்னவோ, இனி காஷ்மீரில் சுற்றுலா துறை அழிந்தது என்று. ஆனால், இன்று கிடைக்கும் செய்திகள் காஷ்மீரிகளின் வாழ்வாதாரமான சுற்றுலா துறை முன்பு மாதிரியே தலை தூக்கிவிட்டது என்பதுதான்.
பயந்து விட்டால் தீவிரவாதிகளின் வெற்றி என்று ஆகி அவர்களது கொட்டம் தெறித்து விளையாடியிருக்கும். மாறாய், இந்திய மக்களின் தொடர்ந்த ஆதரவு அந்த தீமைகளுக்கு சங்கு ஊதுவதுபோல் இருக்கிறது. இதோ அமர்நாத் யாத்திரையும் முழு ஜோரில் நடக்கிறது.
*************************
266 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வளமுடன் உலவி பறந்திடும் அதன் காப்பகம் கேரளா கண்ணூரில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 55 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த காப்பகத்திற்கு அரளம் வண்ணத்துப்பூச்சி காப்பகம் என்று பெயர். இந்த 266 வகை பூச்சிகளில் சுமார் 80 சதவீதம் கேரளாவில் பார்க்கலாம். சில வகை பூச்சிகள் உலகில் வேறெங்கும் இல்லை என்கிறார்கள்.
இந்த அரிய அருமையான வகை காப்பகம், அதுவும் போயும் போயும் ஒரு வண்ணத்துப்பூச்சிக்கா என்று கூடத் தோன்றலாம், ஆம் அந்த வகையில் இந்த முயற்சி கனவிலிருந்து நனவாக சுமார் 25 வருட காலம் பிடித்திருக்கிறது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இடம் விட்டு இடம் பெயர்ந்து இங்கு குவியும்போது ஒரு அரிய காட்சியே கிடைக்கும்.
**********************************
ஊதித் நாராயண் விண்வெளியில் பாடுகிறார் என்றால் திகைக்கிறீர்களா?
25 ஜூன் 2025 அன்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மைய்யத்திலிருந்து புறப்பட்ட ஆக்சியம் மிஷன் 4 என்ற விண்கலம் மூலமாக விண்வெளியில் பூஜ்ஜியம் புவிஈர்ப்பு அமையப்பெற்ற விண்வெளியில் உலக விண்வெளி நிலையத்திற்கு நமது இந்தியாவைச்சேர்ந்த வான் படை வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவும் ஒரு பெண்மணி உட்பட இன்னும் மூவர் சென்றுள்ளனர்.
41 ஆண்டுகளுக்கு முன் ராகேஷ் ஷர்மா இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ஆவார். ஒரு செகண்டுக்கு 7.5 கிமீ வேகத்தில் இந்த விண்கலம் பறந்தது. 28 மணி நேர பயணத்திற்குப்பிறகு அந்த விண்வெளி நிலையத்தில் இணந்தனர்.
14 நாட்கள் 60 பரிசோதனைகள் என்பது இந்த நால்வரின் குறிக்கோள்.
39 வயது சுபான்ஷு, தனது பிடித்த பாடலாக ஸ்வதேஸ் என்னும் ஹிந்தி படப்பாடலான உதித் நாராயண் பாடிய யுனி சலா சல் என்ற பாடலைத் தான் தேர்வு செய்திருந்தார். குறிக்கோளுடனான பயணம் என்கின்ற தொனியில் அமையப்பெற்றது அந்த பாடல்.
அதே போல சுக்லாவின் சக விண்வெளி வீரர்கள்- பயணிகளான பெக்கி விட்சன், ஸ்லவோஸ் உஜான்ஸ்கி, டிபோர் கபுவும் தத்தம் பிடித்தத்தை தேர்வு செய்திருந்தனர்.
இவர்களின் இந்த நான்கு பாடல்களும் பயணத்தில் ஒலித்தன.
தனது மகன் இந்த அரிய பயணத்தில் என்ற பெருமையுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சுபான்ஷ்வின் தாய் ஆஷா சுக்லா. அவரருகே அவரது கணவர் மகனின் இந்த இமாலய பயணத்தைக்கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.
மே 29 நாள் குறிப்பிடப்பட்டும் வெவ்வேறு காரணங்களினால் ஏழு நாட்கள் குறிப்பிடப்பட்டு முடிவில் இன்று தான் கிளம்பியது விண்கலம்.
பூஜ்ஜியம் புவி ஈர்ப்பு, ஆனால் அளப்பறிய பெருமை.
Leave a comment
Upload