சிறுவாபுரி முருகன் கோயில் சென்னையிலிருந்து சுமார் 30-40 கிமீ தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பக்தர்கள் விரும்பியதை வழங்கும் சக்திவாய்ந்த இந்த முருகனை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர். சிந்தையில் சிறுவை முருகனை நினைத்தாலே மோதுமாம்..... திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும்.
'சிறுவாபுரி முருகன், சிறப்பு வாய்ந்தவன் மட்டுமல்ல தன்னை நாடிவரும் பக்தருக்கெல்லாம் வரங்களை வாரிக் கொடுப்பவன். என்று அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்
இத்திருப்புகழில் “அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!” என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.
லவனும் குசனும் தந்தையென்று அறியாது ஸ்ரீராமரிடமே போர் புரிந்துப் பின்பு பணிந்த தலம், சிறு பிள்ளைகள் சண்டைக்காக தங்கள் அம்புகளை எடுத்துப் போர் தொடுத்ததால் இந்த இடம் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பேடு என்று வழங்கப்பட்டது. நாளடைவில் சிறுவா புரி என்று மருவியது.
சொந்த வீடு கட்ட அல்லது வாங்க விரும்புபவர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமும், அருணகிரிநாதர் அருளிய சிறுவாபுரி திருப்புகழ் பதிகத்தைத் தினமும் பாடுவதன் மூலமும் தங்கள் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என நம்பப்படுகிறது.
ஸ்தல சிறப்பு:
இந்த கோயிலில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் தவிர அனைத்து விக்கிரகங்களும் பச்சைக்கல்லால் (மரகதம்) ஆனவை. வள்ளியைத் திருமணம் செய்த முருகன் திருமணக்கோலத்துடன் கைகோர்த்து நின்ற நிலையில் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. வேறு எங்கும் இந்த காட்சியைக் காண இயலாது. வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இதனால் இங்குள்ள முருகனைக் காணப் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சொந்தமாக வீடு அமைய, அருணகிரிநாதரின் திருப்புகழ்: சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு விருப்பம் உள்ளவர்கள், நிலம் அல்லது மனை தொடர்பான பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு சிறுவாபுரி சென்று ஒரு முறை முருகப்பெருமானைத் தரிசனம் செய்து அவர் மீது பாடப்பட்ட அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். அப்படி கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் இருக்கும் முருகனை, சிறுவாபுரி முருகனாக நினைத்து நெய் தீபம் ஏற்றி வைத்து, செவ்வாய்க் கிழமை தோறும் பின் சொல்லக்கூடிய இந்த பதிகத்தைப் படித்தாலே போதும் நிச்சயமாக உங்களுக்குச் சொந்த வீடு கட்டும் யோகம் கூடிய சீக்கிரம் கை கூடி வரும்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை இங்குப் பார்ப்போம்.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
இந்த பாடலை பாடி சிறுவாபுரி முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள். நிச்சயம் சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உங்களுக்கு வந்து சேரும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
ஒவ்வொரு மாதமும் விசாகம், பௌர்ணமி, சஷ்டி, வாராவாரம் செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய நாள்களில் சிறப்பான வழிபாடுகளும் நடக்கும். செவ்வாய்க் கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னைக்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்முடிபூண்டி ரயில் மார்க்கத்தில் 39 கிலோ மீட்டர் தூரத்திலும், கவரப்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது சிறுவாபுரி. CMBT, பொன்னேரி, ரெட்ஹில்ஸ் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகியவற்றிலிருந்து உள்ளூர் பேருந்துகள் உள்ளன.
சொந்தமாக வீடு அமைய சிறுவாபுரி முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload