தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
மடப்பள்ளி மகிமைகள்.. - 3 - விஜய மகாதேவ்

20210126181005405.jpeg

பிரபல கோயில்களில் ஆகம மற்றும் நியம விதிகளின்படி மடப்பள்ளிகளில் விசேஷ முறையில் என்னென்ன பிரசாதங்கள் மற்றும் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதில் சிலவற்றை பார்க்கலாமா?

திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு ஒரு சிலவற்றை பிரசாதமாக வழங்குவர்.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு காலையில் சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்தியம்.

திருப்பதி ஏழுமலையானுக்கு பல்வேறு நைவேத்தியங்கள் இருந்தாலும், குலசேகரன்படியைத் தாண்டி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதிக்கப்படுவது விசேஷம்.

ஶ்ரீமுஷ்ணம் பூவராகமூர்த்திக்கு தினமும் அபிஷேகத்துக்குப் பிறகு, முக்தாபி சூரணம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இது, நோய்களை தீர்க்கும் மருந்து பிரசாதமாகக் கருதப்படுகிறது.

கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் சுக்கிரன் தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

குற்றாலம் குற்றாலநாதருக்கும், அம்பிகை குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரினால் இவருக்கும் தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்கவே இந்த கஷாயம்!

மதுரை அழகர் கோயிலில் முழு உளுந்தை ஊறவைத்து, பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசையே பிரதான பிரசாதமாகும்.

திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காயுடன் அரைத்து தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் கத்திரிக்காய் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.

சமயபுரம் அருகே வெக்காளியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள ஜெய காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிதோறும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு இஞ்சி சாறும், தேனும் கலந்து அபிஷேகம் செய்து, பிரசாதமாக வழங்குகின்றனர். இதை குழந்தையின் நாவில் தடவினால், வாய் பேசாத குழந்தையும் பேசத் துவங்கிவிடும்.

உறையூர் கமலவல்லி சமேத அழகிய மணவாளர் ஆலயத்தில் குங்குமத்துக்குப் பதிலாக சந்தனமே பிரசாதமாகத் தரப்படுகிறது. இதை உட்கொள்ளலாம். இங்கு காரத்துக்காக மிளகாய் வற்றல் சேர்க்கப்படாமல் மிளகு சேர்க்கப்படுகிறது.

# கேரள கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் நிவேதனம் செய்துகொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை நெய்ரப்பம் ஏற்கும் கணபதி இவர்.

# எர்ணாகுளம் அருகே கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி ஆலயத்தில் மருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. நவராத்திரி காலங்களில் விசேஷமாக தங்கம் கலந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

# கேரளாவில் திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து, பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்கின்றனர். பின் அதை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இது, வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும் எனக் கருதப்படுகிறது.