தொடர்கள்
அழகு
பிரியா விடை பெறும் வலசை பறவைகள் - ப.ஒப்பிலி படங்கள். கே.வி.ஆர்.கே. திருநாரணன்

20250403092331771.jpeg

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வலசை வந்த பல பறவைகளுக்கு, இனப்பெருக்கக் காலத்துக்கான இறகுத் தொகுதிகள் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. எனவே, அவை மெல்ல மெல்ல தங்களது இடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. தற்போது இங்கு காணப்படும் பல வலசைப் பறவைகள், இனப்பெருக்கச் சிறகு முளைக்காத தனித் தனிப் பறவைகள்தான். அப்படி சுமார் 14,000-க்கும் அதிகமான பறவைகள் இங்கு உள்ளன.

சென்னையில் உள்ள பல ஈர நிலங்களில் காணப்படும் பறவைகளில் பெரும்பாலானவை நீர்ப்பறவைகள் தான். கோவளம் கழிமுகப் பகுதியில் கொசு உள்ளான், பச்சைக்காலி, பவளக்காலி, மென்னலகு கடற்காகம், பழுப்புத்தலை கடற்காகம், பொரி உள்ளான், உள்ளான், பெரிய கொண்டை ஆலா, பெரிய பூநாரை மற்றும் பல்வேறு இன‌ உப்புக்கொத்திப் பறவைகளும் காணப்படுகின்றன.

இன்னொருபுறம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வாலாட்டிக் குருவிகள், கற்பொறுக்கிகள், உள்ளான்கள் மற்றும் சில வாத்து இனங்கள் தென்படுகின்றன. வலசைக் காலம் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில், இங்கே மீதம் இருக்கின்ற பறவைகளின் செயல்பாடுகளை உற்று நோக்கி வருகின்றனர்.

இதுகுறித்து கே.வி.ஆர்.கே. திருநாரணன் கூறும்போது, "வலசை வரும் பறவைகளுக்கு, அதுவும் குறிப்பாக வட துருவப் பகுதிகளிலிருந்து வரும் பறவை இனங்களுக்கு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மிக முக்கியமான ஓய்விடமாகும். இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு வலசை வரும் பறவைகள் அவ்வளவு நெடிய தூரத்தைக் கடப்பதற்குத் தேவையான சக்தியைத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. இங்கு வந்து சேரும் பறவைகள் தங்களுக்குத் தேவையான உணவு, நீர், உகந்த சூழல் ஆகியவை நிறைந்திருக்கும் பகுதியைத் தேர்வு செய்கின்றன. தங்களுக்குத் தேவையான சத்து மற்றும் சக்தி ஆகியவற்றை திரும்பப் பெற்ற பிறகு ஆண் பறவைகளுக்கு இனப்பெருக்கச் சிறகுகள் முளைக்கத் தொடங்கும். அப்போது அவை மீண்டும் தங்கள் இடங்களுக்குத் திரும்பத் தயாராகும்" என்றார்.

உலக வலசைப் பறவைகள் நாள், ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாள், வலசை செல்லும் பறவைகளுக்கு இருக்கும் ஆபத்துகள், சுற்றுச்சூழலுக்கு அவை ஆற்றும் பங்களிப்பு மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக அமைந்துள்ளது. அந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், 'பறவைகளுக்கு உகந்த நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல்' என்பதாகும், என்று சொல்கிறார் திருநாரணன்.

இப்போதைக்கு சென்னைக்கு வந்த வலசைப் பறவைக‌ளில் சுமார் 90 சதவீதத்துக்கும் அதிகமான பறவைகள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிவிட்டன. ஏப்ரல் மாத இறுதியில், மீதமுள்ள வலசைப் பறவைகளும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.