நடுநிசி. இடுகாட்டின் மத்திய பகுதி.
பேய் மற்றும் பிசாசுகளின் அலறல்.
உயர்ந்து நிற்கும் முருங்கை மரம்.
கீழே மாமன்னன் விக்ரமாதித்தன்.
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் அந்த நெடிய முருங்கை மரத்தின் மீது ஏறி அதன் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த கிழவனின் உடலைக் கீழே தள்ளினான்.
மரத்தை விட்டு கீழே இறங்கி அந்த மனித உடலைத் தன் தோளில் சுமந்து கொண்டு நடக்கலானான்.
அப்போது அந்த மனித உடலில் இருந்த வேதாளம் விக்ரமனைப் பார்த்து எள்ளி நகையாடியது.
" மன்னா நீ ரொம்பவும் ஏமாளி! இளிச்சவாய் ஆசாமி! நீ மற்றவருக்கு நல்லது செய்வதாக நினைத்து உனக்கு தீமை செய்து கொள்கிறாய்.
வீணாக இந்த உடலைத் திரும்பத் திரும்ப இந்த மரத்திலிருந்து எடுத்துக்கொண்டு போய் சுமப்பதனால் இதைச் சொல்கிறேன்.
நல்லூர் கிராமத்து கோமதியின் செயல் போல் உன் செயல் உள்ளது. உனக்கு அவளுடைய கதையைக் கூறுகிறேன்.
முடிவில் உன்னை ஒரு கேள்வி கேட்பேன். பதில் தெரிந்தும் நீ சொல்லாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும். பதில் சொல்லிவிட்டாய் என்றால், உன் மௌனம் கலைந்ததனால் உன்னை விட்டுப் போய் நான் முருங்க மரக்கிளையில் மறுபடியும் தொங்க ஆரம்பித்து விடுவேன்."
என்று கூறி இடி இடி என்று சிரித்தது.
இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன விக்ரமன் எரிச்சலுடன் பேசாமல் நடந்து கொண்டிருந்தான்.
வேதாளம் ஆரம்பித்தது.
கேளாய் விக்ரமா! நல்லூர் என்னும் கிராமத்தில் கோமதி என்ற பெண் வசித்து வந்தாள். கோமதிக்கு திருமணம் ஆகி மூன்று வருஷம் ஆகியும் குழந்தை இல்லை. கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள். மாமியார்,மாமனார், அவர்களது ஒரே மகனான அவளுடைய கணவன் ராமசாமியுடன் வசதியாக வசித்து வந்தாள்.
கோமதி அசடு என்பது ஊரின் ஒட்டுமொத்த அபிப்பிராயம். அதற்கு ஏற்றார் போல இவளும் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தில் மாட்டி ஏமாந்து நிற்பாள்.
சில உதாரணங்கள் கூறுகிறேன்.
ஒரு அமாவாசை அதிகாலையில், மயானத்து மை அணிந்த குடுகுடுப்பைக்காரன் ஒருவன், கோமதி வீட்டு வாசலில் வந்து நின்று,
" அம்மா! அடுத்த வாரம்,உங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கப் போகிறது எனக்கு ஒரு புது சேலை கொடு தாயே.அப்போ நிச்சயமாக பொங்கும். நீயே மஹாலட்சுமி தாயே."என்றான்.
மிகவும் மன மகிழ்ந்த கோமதி தனக்கு தீபாவளி பண்டிகைக்கு மாமியார் வாங்கி இருந்த ரெட்டை பேட் வெள்ளி ஜரிகை கொண்ட புத்தம்புது காஞ்சிபுரம் பட்டு புடவையை தானமாக அளித்தாள்.
ஆனால் குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல அப்படி எந்த கடாட்சமும் திடீர்னு பொங்கவில்லை. மாமியார், தான் வாங்கி கொடுத்த பட்டுப்புடவையை குடுகுடுப் பாண்டிக்கு தானம் கொடுத்ததற்காக கோமதியை திட்டி தீர்த்து அசட்டுப் பட்டமும் கட்டினாள்.
இன்னொரு சமயம் மருத்துவச்சி மைனாவதியின் கணவன், குடிகார குப்புசாமி கோமதியிடம் வந்து அவள் கணவன் பொற்கொல்லன் பொன்னுசாமியுடன் இருப்பதாகவும் கோமதிக்கு புதிய வைர மோதிரம் ஒன்று செய்ய அதன் அளவுக்காக அவள் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை தன்னிடம் கொடுத்து அனுப்பும்படி அவள் கணவன் கூறியதாகக் கூற, கர்ணன் போல் மோதிரத்தை கழட்டி குப்புசாமியிடம் கொடுத்து விட்டாள்.
மோதிரத்தை விற்று பணம் முழுவதும் காலியாகும் அளவுக்கு கள்ளு குடித்துத் தீர்த்தபின் குப்புசாமி ஊர் திரும்ப, காவலர் பிடிக்க,சிறை சென்றான். போன மோதிரம் போனதுதான். கோமதியை அசடு என்று ஊரே திட்டியது.
இந்தச் சமயத்தில் தான் கோமதியின் மாமனார் மன்னார்சாமி, தன் நெடுநாள் ஆசையை நிறைவேற்ற காசிக்கு சென்று வந்தார்.
திரும்பி வந்தவர் துறவிகள் பூஜை செய்ய உபயோகிக்கும் ஒரு வெள்ளிக் கமண்டலத்தை கொண்டு வந்தார். இது ஒரு காசி முனிவர் கொடுத்தது என்றும் கூறினார். அது பூஜை அறையில் பிரதானமாக வைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு பிறகு ஒரு துறவி கோமதி வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு ஏக உபசாரம் செய்தனர் கோமதியின் மாமனாரும் மாமியாரும். வெள்ளித் தட்டில் உணவு படைக்கப்பட்டது. வெள்ளிக் கூஜாவில் பால் வழங்கப்பட்டது. அவர் அங்கேயே படுக்கவும் ஏற்பாடு ஆனது.
இரவு நடு ஜாமத்தில் வெள்ளித்தட்டையும் கூஜாவையும் எடுத்துக்கொண்டு நழுவப் பார்த்தார் அந்த போலித் துறவி.
ஆனால் வீட்டு வாசலில் கோமதி நிற்பதை பார்த்து நடுங்கிப் போனார். அவர் எதிர்பார்த்தது போல கோமதி கோபம் கொள்ளவில்லை. தன் கையில் இருந்த வெள்ளிக் கமண்டலத்தை அவரிடம் கொடுத்து" இதையும் எடுத்துக்கொண்டு போங்கள் சாமி. " என்று புன்னகையுடன்கொடுத்தாள்.திகைத்து ப்போன துறவி அவளைக் கும்பிட்டு கிடைத்த மட்டும் லாபம் என்று கமண்டல சகிதம் ஓடிப்போனார்.
மறுநாள் போலிச் சாமியார் விஷயம் ஊருக்கே தெரிந்தது. ஆனால் கோமதியின் கமண்டல தானம் ரகசியமாகப் புதைந்தது.
பல வருஷங்கள் பறந்தன. கோமதிக்கு ஒரு பிள்ளை ஒரு பெண் பிறந்தனர். இருவரும் வளர்ந்து திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசிக்க மாமனாரும் மாமியாரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
கோமதி இப்போ பாட்டி யாகிவிட்டாள்.ஆனால்
கோமதிக்கு அந்த ஊரில் அசட்டுப் பட்டம் மட்டும் போன பாடு இல்லை.
ஒருநாள் நல்லூருக்கு நாடு போற்றும் சாமியார் ஒருவர் வருகை தந்தார். ஏராளமான பக்தர்கள் கூட்டம்.
கோமதியு ம் அவள் கணவரும் முண்டி அடித்துக் கொண்டு சாமியார் தரிசனத்துக்கு சென்றனர். அவர்கள் நேரே பார்த்த போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சாமியார் சாஷ்டாங்கமாக கோமதியின் காலில் விழுந்து, " தாயே நீதான் என் குரு. பல வருடம் முன் நான் உன் வீட்டிலிருந்து பொருள்களை திருடிக் கொண்டு போகும் போது நீ குறுக்கே வந்து இந்த கமண்டலத்தை எனக்கு அளித்தாய்.
அதை என்று நான் உன்னிடம் இருந்து வாங்கினேனோ அன்றே எனக்கு புத்தியும் ஞானமும் வந்துவிட்டது. உன்னை பார்க்கத்தான் அம்மா இந்த ஊருக்கு வந்தேன்.பார் இதோ! என் கையில் உன் கமண்டலம். என்றார்.
எல்லோரும் கோமதியின் கணவன் உட்பட திகைத்துப் போய் நின்றார்கள்.
கோமதி அன்றிலிருந்து தன் அவப் பெயர் நீங்கி நல்லூரில் பெரிதும் மதித்து வணங்கப் பட்டாள்."
வேதாளம் கதையை முடித்துக் கொண்டது.
" விக்கிரமா! இதோ என் கேள்வி. கோமதி ஒரு அசடா? வள்ளலா? இல்லை ஞானியா?"
என்றது.
விக்கிரமாதித்தன் யோசித்தான். ஒரு பதில் தோன்றியது. ஆனால் அது சரியானதா என்று அவனுக்கு தெரியவில்லை. "ஒருவேளை அந்த பதில் சரியாய் இருந்து, தான் பதில் சொல்லாவிட்டால் வேதாளம் சொல்வது போல் நம் தலை வெடித்து சுக்குநூறாகிவிடுமோ? எதற்கு வம்பு.பதில் சொல்லி விடுவோம். " முடிவு செய்து பதில் சொல்லலானான்.
" வேதாளமே! கோமதி ஒரு அசடோ வள்ளலோ ஞானியோ இல்லை. எல்லாருக்கும் உள்ள ஆசைகளை உடைய ஒரு பெண். அவ்வளவு தான். அவள் குடு குடுப்பைக்காரனிடமும்,குடிகார குப்புசாமியிடமும் ஏமாந்தது ஆசைகளால் தான்.
ஆனால் துறவியிடம் ஏமாறவில்லை.
அந்த சமயத்தில் அவளுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் குழந்தை இல்லை. மாமனார் பாட்டுக்கு காசிக்கு போய் ஒரு கமண்டலம் வேறு அங்கிருந்து வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அவளுடைய நம்பிக்கையின்படி துறவிகள் பூஜைக்கு உபயோகிக்கும் கமண்டலம் சம்சாரி வீட்டுக்குள் இருந்தால், அங்கு குழந்தை பிறப்பது அரிது. கமண்டலத்தை தூக்கி துறவியிடம் கொடுத்து விட்டாள்.
அதற்குப் பின்னால் அவளுக்கு குழந்தைகள் பிறந்தன. என்ன! நான் சொல்வது சரிதானே? "
வேதாளம் இப்போது உங்களை உற்று நோக்குகிறது.... சொல்லுங்கள்....
கோமதி ஞானியா, அசடா அல்லது வள்ளலா ??
சரியாகச் சொல்லவில்லையெனில்...தலை சுக்கு நூறாக.....
Leave a comment
Upload