தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 23. ஜனாதிபதியும் புறம்போக்கு நிலமும். மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250431004236506.jpeg

தேசத்தின் புதிய நிர்மாணத் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டுமென்றால் அதற்கான முதலீடு, சாத்தியக் கூறுகள், வேலை வாய்ப்புகள் என்றெல்லாம் யோசிக்கும் அரசாங்கம், நிலப்பகுதியை கையகப்படுத்துவதில் பல சிக்கல்களைச் சந்திக்கிறது. நிலத்தின் சொந்தக்காரர்கள் நஷ்டஈடாக கூடுதல் தொகை கேட்பதில் ஓரளவுக்கு நியாயம் உண்டு. ஆனால் அந்த நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பு வேண்டுமென்று அடம்பிடிக்கும்போது தீர்க்க முடியாத சிக்கல்கள் எழுகின்றன. குறிப்பாக வேலை வேண்டுவோரின் தகுதி, வேலைக்கேற்றபடி இல்லாமல் போவதே. இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், நெய்வேலியில் 2வது பழுப்பு நிலக்கரி சுரங்கம் தோண்டவும், 2வது மின்நிலையம் அமைக்கவும், முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. காகித கோப்புகளில் உறங்கியிருந்த திட்டம் பின்னர் நடைமுறைக்கு வந்தது.

மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டமென்பதால் அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவரது வருகைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வித்தியாசமாக ஏதாவது ஒரு செய்தியை எழுதி அனுப்பவேண்டும் என்று நினைத்தான் அவன். அவனுக்கு அப்போது தெரிய வந்த தகவல், 2ம் சுரங்கத்திற்கான நிலம் அன்றுவரை கையகப்படுத்தப்படவில்லை என்பது. எனவே அவன் அந்த சிறு கிராமங்களுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டான். நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

நெய்வேலி நகரத்தில் ஒரு குறுகிய பாலத்தில் சென்ற போது, அவனது ஸ்கூட்டர் கவிழ்ந்தது. தொடையில் ஊமைக்காயம், ஸ்கூட்டரின் நிலையைப் பார்த்தவர்கள், அதில் சென்றவர் பிழைத்திருப்பாரா என்று சந்தேகப்படுவார்கள். அந்த அளவுக்கு மோசமான விபத்து. ஆனாலும் அவன் சிதைந்த ஸ்கூட்டரை ஒரு மரத்தடியில் தள்ளி நிறுத்திவிட்டு, நண்பரிடம் சொன்னான், ‘எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக்கூடாது. உங்கள் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொள்கிறேன். வாருங்கள் அந்த கிராமங்களுக்குப் போவோம்’ என்றான். அப்படியே அவன் தன் நண்பருடன் சென்றான். கிராமவாசிகளை பேட்டி கண்டான். நிலத்தை அவர்கள் என்.எல்.சி.க்கு அதுவரை கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் நிலம் கையகப்படுத்தும் அலுவலகம் இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள், ‘நாங்கள் கிராமவாசிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். நிலத்தைப் பெறுவதில் பிரச்சனைகள் இருக்கின்றன’ என்றார்கள்.

அந்த அலுவலகத்தில் இரண்டு வருட காலமாக இரண்டு சிறப்பு டெபுடி கலெக்டர்களும், 10 தாசில்தார்களும், சில உதவியாளர்களும் பணி செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் யாராலும் ஒரு சென்ட் நிலத்தைகூட என்.எல்.சி.க்கு பெற்றுத் தர முடியவில்லை.

இந்தத் தகவல்களையெல்லாம் திரட்டிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்தபோது வலது தொடை வீங்கியிருந்தது, ரத்தக்கட்டு இருந்தது, பைக்கிலிருந்து இறங்கி வீட்டிற்குச் செல்வது சிரமமாக இருந்தது. நண்பர் அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்து சோபாவில் உட்கார்த்தி வைத்துவிட்டு, வெளியூர் சென்றிருந்த அவன் மனைவிக்கு தகவல் கொடுத்து உடனே வரச்சொன்னார். மருத்துவர்களை தொடர்பு கொண்டார். அவர்களும் அவனது நண்பர்களே. இரண்டு மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து அவனை சோதித்துப் பார்த்துவிட்டு, எலும்பு முறிவு இல்லை, ரத்தக்கட்டு இருக்கிறது, Infra Red Light கொண்டு வந்திருக்கிறோம். ஒத்தடம் கொடுப்பது போல் மூன்று நாட்கள் சூடேற்றிக் கொள்ளுங்கள் சரியாகிவிடும், ஆனால் வெளியே எங்கும் செல்லாதீர்கள் என்றார்கள். பிறகு ஒரு மருத்துவரும் ஒரு நண்பரும் சென்று, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஸ்கூட்டரை ஒரு தள்ளுவண்டியில் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். அதைப்பார்த்த இன்சூரன்ஸ் அதிகாரி 95 சதவீகிதம் நஷ்டஈடு கொடுத்துவிடலாம். விபத்து பற்றி விபரம் தாருங்கள் என்று கேட்டார். அந்த அளவுக்கு சிதைந்திருந்தது ஸ்கூட்டர். உடல் வலியையும் பொருட்படுத்தாமல், மனம் சிதையாமல் அவன் வீட்டில் இருந்தபடியே நீண்ட செய்திக்கட்டுரை எழுதி, நண்பர் மூலம் தந்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தான்.

ஜனாதிபதி நெய்வேலிக்கு வந்த அதே தினத்தில் இவனது செய்திக்கட்டுரையும் வெளிவந்தது.

ஹிண்டுவில் கால்பக்க அளவிற்கு வெளிவந்திருந்தது. ‘President to inaugurate 2nd mine today, Little Progress in land acquisition’ என்ற தலைப்பில் அவன் கொடுத்த செய்தி வந்திருந்தது. பிற பத்திரிகைகளில் நெய்வேலியின் சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தபோது அவனது செய்திக்கட்டுரை வித்தியாசமாக இருந்தது, பலருக்குத் தெரியாத விஷயங்களைச் சொல்லி இருந்தது.

அவன் காலை எட்டு மணிக்கே ஹெலிகாப்டர் தளத்திற்குச் சென்றுவிட்டான். 9.00மணிவாக்கில் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். N.L.C.சேர்மனும், கலெக்டர் P.S.பாண்டியன், போலீஸ் கண்காணிப்பாளர் G.கணேசன் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றார்கள். அதே ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய, தமிழ்நாடு உளவுத்துறை உயர் அதிகாரி A.X.அலெக்சாண்டர் கையில் ஹிண்டு பேப்பரை சுருட்டி வைத்திருந்தார். அவனைப் பார்த்ததும், “இதே பிரச்சினைகளை நாங்கள் அரசாங்கத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே சொன்னோம். அவர்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது பிரச்சினைக்கு வெளிச்சம் போட்டுவிட்டீர்கள்” என்றார்.

விழா மேடையில் ஜனாதிபதி நீலம் சஞ்சீவரெட்டி முதல் வாக்கியத்திலேயே எல்லோரையும் கலகலக்க வைத்தார். மேடையில் அவருடன் சேர்ந்து மத்திய எரிசக்தி அமைச்சர் P.ராமச்சந்திரன், தமிழக முதல்வர் M.G.ராமச்சந்திரன், மாநில மின்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தார்கள். ஜனாதிபதி அவர்களைத் தனித்தனியாக குறிப்பிடாமல் ‘Ramachandrans One-Two-Three’ என்றார். விழா பற்றி செய்தியை அவன் விரிவாக எழுதி, தந்தி மூலம் அனுப்பினான்.

அன்று காலை என்.எல்.சி. அதிகாரிகளுக்கு விழா சம்பந்தமான ஏற்பாடுகளை செய்வதிலேயே கவனம் இருந்தது. அதனால் ஓரிரு முக்கியஸ்தர்கள் தவிர, யாரும் அவனது கட்டுரையைப் படிக்கவில்லை. ஜனாதிபதி விடைபெற்று சென்ற பிறகே, சில இயக்குநர்களும், தலைமை இன்ஜினியர்களும், கட்டுரையைப் படித்தார்கள். ஒருவர் தொலையிபேசியில் இப்படிச் சொன்னார், ‘ஐயா கல்யாண வீடு என்றால் அங்கே மங்களகரமான காரியம்தான் முக்கியம். சில இடங்களில் பொருட்கள் களவு போகலாம்; ஏதோ ஒரு மூலையில் சம்பந்திகள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கலாம், திருமண நிகழ்ச்சிதான் முக்கியம். வீடியோ எடுக்க வந்தவர் அதைத்தான் வீடியோ எடுக்க வேண்டும், அதுபோல் நீங்களும், எங்கள் புதிய திட்டத்தின் மேன்மைபற்றித் தானே எழுதியிருக்க வேண்டும்?- ஏன் இந்த நிலம் கையகப்படுத்தப்படாத கசப்பான கட்டுரை எழுதினீர்கள்’ என்று கேட்டார். அவன் சொன்னான், ‘என்னைப் பொறுத்தவரை, ஜனாதிபதி புறம்போக்கு நிலத்தில்தான் சுரங்க பணிகளை தொடங்கி வைக்கிறார் என்பதும், அதற்கான காரணங்களும் முக்கியம்’ என்றான். அதுதான் செய்தி.

மறுநாள் ஹிண்டு பத்திரிகையில் அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. முதல் நாள் நெய்வேலியில் எந்தச் செய்தியை என்.எல்.சி. அதிகாரிகளும், மாநில வருவாய்த்துறை அதிகாரிகளும் விமர்சித்தார்களோ, அந்தச் செய்தியை பற்றி ஹிண்டு தலையங்கத்தில் எழுதியது. அதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ‘எங்கள் நிருபர் இந்தப் பிரச்சனைப் பற்றி முன்பே எழுதிவிட்டார் என்ற வாசகம்தான். அவனைக் கேள்வி கேட்ட அதிகாரிகளுக்கு ஹிண்டுவின் தலையங்கமே பதிலாக அமைந்தது.