தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி...! * 13. புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன்.  சரணாகதி படலம்

20250506191348764.jpg

ரேவண்ணாவின் இல்லத்திலிருந்து புறப்பட்ட குண்டுராஜாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தாத்தாவின் ஒரு லட்சத்தை வேண்டுமானால் சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து டபாய்க்கலாம். (முக்கியக் குறிப்பு: இரண்டு மாதத்துக்கு ஐந்து வட்டி தருகிறேன் என்று அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டவர்: ரேவண்ணா!)

ஆனால், கீதாப்பாட்டியோ அவளது சங்கிலி கிடைக்கவில்லை என்றால் சாமியாடி விடுவாள். கொலை செய்வதற்கும் அஞ்ச மாட்டாள். அவனுக்கு உடனடியாகத் தோன்றிய தெய்வத்தின் உருவம்: கோமுப்பாட்டி! விடு ஜூட் ஹாரிங்டன் சாலைக்கு! சரண்டரோ சரணாகதி பாட்டி வசம்.

சரணாகதி படலம்: 2

ரேணிகுண்டா ரேவண்ணா தம்பதியர் கோமுப்பாட்டியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தனர். ரேவண்ணாவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்கூட பாட்டியின் கால்களை நனைத்தது.

"டோன்ட் பி டீப் சென்சிடிவ் ரேவண்ணா. கீப் திஸ் மணி வித் யூ. உன் லோன்களை நான் டேக் ஓவர் பண்ணிக்கிறேன். உனது பத்திரிகைக்கு முதல் போட்டதாக இருக்கட்டும். உன்னோட கண்களில் பத்திரிக்கை நடத்தி ஓரளவு சம்பாதிக்க வேண்டும் என்ற பொரி தெரிகிறது. எனக்கு உழைப்பாளிகளைப் பிடிக்கும். ஆனால், உன் உழைப்பு யுனிவர்சல் திங்கிங் ஆக இருக்க வேண்டும்!

"ஏன் மறைந்து மறைந்து ஒரு மஞ்சள் பத்திரிகையை நீ நடத்த வேண்டும்?தூக்கிப்போடு இந்தக் குப்பைகளை! ஆபாசம், இலை மறைவு காயாக இருத்தல் அழகு என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் ரேவண்ணா. இந்தப் புத்தகத்திற்குப் பதிலாக ஏன் ஓர் ஆன்மீக இதழ் நடத்தக்கூடாது? சொசைட்டி செர்டெய்ன்லி நீட் திஸ். புதிய அவதாரத்தைத் தொடங்கு. நான் உதவுகிறேன். ஆர்டிகிள், விளம்பரங்கள், சந்தாதாரர்கள் சேர்ப்பதும் சுலபம். எனது கணவர் விருப்பப்படி அவரே ஆசிரியராக இருக்கட்டும். நீ மார்க்கெட்டிங்கை ஒழுங்காகக் கவனி. இனி லோன் பிசினஸ் கூடாது...!" என்றாள்.

"நன்னு கண்ண தள்ளி நிவ்வே...!" (என்னைப் பெற்ற தாய் நீங்களே) என்று மறுபடியும் கால்களில் தஞ்சமடைந்தான் ரேவண்ணா.
*****
"பக்தி ஞானம்" மாத இதழ் வெளியீட்டு விழா இனிதே பாட்டிகள் புடைசூழ நடைபெற்றுக் கொண்டிருக்க, திடீரெனப் பரபரப்பு நிலவியது.

சிவப்புக் கம்பளப் பாதையில் உலகநாயகன் கமல் ஹாசன், தக் லைஃப் தாடியை மீறிய புன்னகையோடு வந்து கொண்டிருந்தார். உடன் அவரது நண்பர் கார்ட்டூனிஸ்ட் மதன் ஸ்டைலாய் ஏதோ மென்றுகொண்டு வர...

பிரசிடெண்ட் கோமுவும் சுப்புசாமியும் மலர்ச்செண்டு அளித்து அவர்களை மேடையில் அமர வைத்தனர். பாட்டி மைக்கை எடுத்தாள்.

"டியர் ஸ்பெஷல் கெஸ்ட்ஸ் கமல்ஜி அண்ட் மதன்ஜி வணக்கம். எங்கள் பாட்டிகள் முன்னேற்றக் கழகம் அன்போடு உங்களை வரவேற்கிறது. பொறுமை மற்றும் நேரம் இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த வீரர்கள் என்று டால்ஸ்டாய் தனது போரும் அமைதியும் நூலில் சொல்லி இருக்கிறார். நாம் நமது விருந்தினர்களின் நேரத்தை வீணாக்காமல் திரு.சுப்புசாமி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள பக்தி ஞானம் என்ற ஆன்மீக இதழை இப்பொழுது வெளியிட அன்போடு வேண்டுகிறோம்...!"

சரிகைக் காகிதத்தைப் பிரித்து கமல் பத்திரிகையை வெளியிட, மதன் பெற்றுக் கொண்டார். நிர்வாகி ரேவண்ணா, ஆசிரியர் சுப்புசாமி, கோமு உட்பட அனைவரும் கரகோஷம் எழுப்பினர். கேமராக்கள் பளிச்சிட்டன. பின்னர், சிறப்புரையாற்ற வந்தார் கமல்.

"வணக்கம். வழக்கமாக நான் சாமி கும்பிடுபவன் அல்லன். ஆனால், மனிதர்களின் அன்பை நேசிப்பவன். பிரசிடெண்ட் கோமு அம்மா என் அம்மாவைப்போலவே சுறுசுறுப்பானவர்கள். பிரசிடெண்ட் கோமு அவர்கள் தலைவியாக இந்த முன்னேற்றக் கழகத்தை ஐம்பது ஆண்டுகளும் மேலாக சிறப்பாக இயக்கி வரும் அற்புதப் பெண்மணி. அவரது மேலுள்ள அன்பாலேயே நாத்திகன் ஆன நான் இப்போது இந்த ஆன்மீகப் பத்திரிகையை வெளியிடுவதில் தயக்கம் காட்டவில்லை. என் அருகிலோ ஹாஸ்ய கார்ட்டூனிஸ்ட் மன்னன் மதன் ஒரு வெண்தாடி முனிவராய்க் காட்சி தருவதும் எனக்கு உவப்பாக இருக்கிறது. ஆசிரியர் சுப்புசாமியை நான் ஏற்கனவே அறிந்தவன்தான். எனக்கும் என் கட்சிக்கும் சில பொழுதுகள் ஆலோசகராக இருந்திருக்கிறார். வழக்கமாக நான் இளம்பெண்களோடு பயணிப்பவன் என்பார்கள். எனக்கு பாட்டிகளையும் பிடிக்கும்: அவர்களது அன்பும் பிடிக்கும்...!" என்று கமல் கூற, மறுபடி கைதட்டல்கள் அரங்கை அதிர வைத்தது.
*****
"நீ உண்மையாகவே 'உயர்ந்த உள்ளம்' கொண்டவள் கோமு...!" என்றார் சுப்புசாமி. "உனக்கிருக்கும் அறிவால் என்னைப் பல இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி விடுகிறாய். இப்போது என்னைப் பெருமையும்கொள்ள வைத்து விட்டாய். அன்பே சிவம் நீ. சகலகலாவல்லி, நாயகி, விக்ரம் 3...!" என்றார் தாத்தா.

கோமு சிரித்தாள். "என்னைப் புகழ் பாடுறீங்களா? இல்லை, கமல்ஜி புகழ் பாடுறீங்களா...?"

"நானாக நானில்லை தாயே நல்வாழ்க்கை தந்தாயே நீயே...!" என்று பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு பாடினார் தாத்தா.

"லுக், டியர். இனிமேல் நீங்கள் ஓடி விளையாடு தாத்தா இல்லை. பொறுப்பான பத்திரிகை ஆசிரியர். நிறையப் படியுங்கள். பெரியோர்களின் கோட்ஸ், கட்டுரைகள், ஸ்தல வரலாறு அனைத்தையும் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். முறையாக தியானம் செய்யுங்கள். இனி, தமிழ்நாட்டில் நீங்களும் ஒரு வி.ஐ.பி. ஞாபகம் இருக்கட்டும்...!"

"ஓகே. நீங்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன் மேடம்...!" என்றார் சுப்புசாமி.

வீட்டின் புழக்கடையில் இருமல் சத்தம் பலமாகக் கேட்டது.

"பாவம் பிள்ளை ரொம்ப இருமுகிறான்...!" என்றபடி தாத்தா சென்றார்.

அங்கே -

குண்டுராஜா, ரேவண்ணா உதவியுடன் கத்தை கத்தையாய் ஜிலு ஜிலுவென்ற தென்னாட்டு, வட நாட்டு, வெளிநாட்டுப் பலான அட்டைகள் மற்றும் உள்பக்க மேட்டர்களை தீயிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக ஒற்றைக் கையால் தன் கண்களை மூடிக்கொண்டு, தானும் சில படங்களை தீயில் போட்டுக் கொண்டிருந்தான் அப்பாராவ்.

புகைச்சலால் கண்களில் கண்ணீர் வர, கடைசியாகக் கையில் இருந்த ஒரு படத்தைக் காட்டி, "தாத்தா லேட்டஸ்ட் கவர்ச்சிக்கன்னி பூஜா ஹெக்டே! இதை மட்டும் வெச்சிக்கலாமா...?" என்றான்.

சுப்புசாமி, "கோமு...!" என்று சப்தமாகக் குரல் கொடுத்தார். உடனே படத்தைத் தீயில் போட்ட குண்டு, அது ஆங்காங்கே கொப்பளித்து, குமிழ்விட்டு எரிவதைப் பார்த்து நிஜமாகவே கண்களைக் கசக்கினான்.

(அட்டகாசம் முடிந்தது)