தொடர்கள்
கதை
நண்பன்-  கி.ரமணி  

20250506183543231.jpeg
1962 ம் வருஷம். மயிலையில், லஸ்ஸுடன் சாந்தோம் பீச்சை இணைக்கும் கச்சேரி சாலையில் ஒரு பழைய வீடு.

சற்றே கோணலான வீடு. வாசலில் திண்ணையுடன் வராண்டா.

சாயுங்காலம் திண்ணையில் உட்கார்ந்து பத்து வயது நானும், பன்னிரெண்டு வயது அக்காவும் ஆளுக்கு ஒரு பக்கமாக, ரோட்டில் போகும் கார்களை வகைப்படுத்தி, எண்ணி நோட் புக்கில் எழுதி கீழேகண்ட மாதிரி மதிப்பெண்கள் கொடுத்து வந்தோம்.

மாரீஸ் மைனர்: 3 மார்க், ப்ளிமத் :8
செவேர்லே :6,அம்பாசிடர் / ஃ பியட் :2

இப்போது ஒரு ப்ளிமத் கார் எங்க வீட்டு வாசல்ல வந்து நின்றது.

டிரைவர் காரிலிருந்து இறங்கினார். காரின் போனட்டைத் திறந்தார்.
பெலிக்கன் பறவை போல கார் வாயைத் திறக்க உள்ளே எட்டிப் பார்த்தார்.

ஐந்து நிமிடத்தில் போனட்டை மூடி விட்டு காரின் பின் கதவைத் திறந்து ஏதோ சொல்ல, உள்ளே இருந்து வயதான குள்ள மனிதர் ஒருவர் இறங்கினார்.

வழுக்கைத் தலை, நெற்றியில் குங்குமம், பட்டு வேட்டி, ஜிப்பா, அணில் வால் போல முடிந்த வெள்ளைக் குடுமி.

டிரைவர் என்னைப் பார்த்தார்.

"தம்பி கொஞ்சம் இங்கே வாப்பா. ரிப்பேர் ஆகிவிட்டது. ஐயாவை கொஞ்ச நாழி உங்க வீட்டுத் திண்ணைல உட்கார வைப்பா. வேற கார் எடுத்தாரேன். ஐயா யாருன்னு தெரியுதா? "

என் அப்பா அம்மா வீட்டுக்குள்ளே இருந்து வந்தார்கள்.

"வித்வான் சேதுராம பாகவதர் தானே! வாங்கோ வாங்கோ!" என்றாள் அம்மா.

வராண்டா திண்ணையில் ஜம் என்று உட்கார்ந்தார் வித்வான்.

அம்மா காபி கொண்டு வர குடித்தார்.

"மாமா போன வாரம் ரசிகரஞ்சனியில உங்க தோடி அற்புதம்." என்றாள் அம்மா.

" இன்னிக்கு உன் காப்பியும் தான் அம்மா!" சிரித்தார் பாகவதர்.

" எங்க வீடு சாந்தோம்ல இருக்கு . கார் இப்படி மக்கர் பண்ணிடுத்து. பரவாயில்லை. நம்ம கிட்ட அஞ்செட்டு கார் இருக்கு. வேற வந்துடும்."

'அஞ்சாறு ' நான் கேள்விப் பட்டு இருக்கேன். 'ஏழேட்டு'ன்னாலும் சரி. இது என்ன அஞ்செ ட்டு. தெரியல.
" ஸ்டுடிபேக்கர், ஃபோர்டு எல்லாம் இருக்கு. " என்றார் பாகவதர்

அப்பா தயக்கத்துடன் பாகவதரிடம் கேட்டார்.

"சுவாமி! உங்களுக்கு பாலக்காடு தானே சொந்த ஊர்? அந்த காலத்துல போஸ்ட் ஆபீஸ் சீனிவாசன உங்களுக்கு தெரியுமா?"

" யாரைச் சொல்லறாய்? "

"பாலக்காட்டில் முன்னாடி போஸ்ட் மாஸ்டரா இருந்தார். கல்பாத்தியில உங்க வீட்டுக்கு அடுத்த வீடு."

நிமிஷம் பேசாமல் யோசித்தார் பாகவதர்.
பின் "ஓ!போஸ்டல் சீனாவை சொல்லறியா? பாவம் அவன் தான் அப்பவே போய் சேர்ந்துட்டானே அகாலமா!"

"அவர் என்னோட அப்பா."
"அட! சீனாவோட பையனா நீ? பகவான் தான் நம்மள இப்போ பாக்க வெச்சிண்டிருக்கான்."

"ஆமாம். அவர் போயி முப்பது வருஷம் ஆறது."

"தெரியும். உங்க அம்மா எங்கே? நன்னா இருக்காளோ? "

"இங்க தான் இருக்கா. அறுபத்திஅஞ்சு வயசாச்சு. இப்போ வீட்ல இல்லை. பக்கத்து கிராமம் போயிருக்கா. வந்துடுவா. "

" ஓஹோ! உங்க அப்பாக்கும் எனக்கும் உள்ள பந்தம் உங்களுக்கு எல்லாம் தெரியுமா?"

"நீங்களும் அவரும் நல்ல நண்பர்கள்னு மட்டும் தெரியும். அப்போ நான் சின்ன பையன்."

" கல்பாத்தில நாங்க நல்ல சினேகிதர்கள்.
சீனா கை தாராளம். வெள்ளைக்காரன் ஆட்சில போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு நல்ல சம்பளம் கொடுப்பா. பவரும் உண்டு. சீனா ரொம்பப் பரோபஹாரி. குடும்பத்தோட உங்கள தில்லக்கேணில விட்டுட்டு தனியா கல்பாத்தில இருந்தான். இல்லையா? அவனுக்கு அப்போ பொண்டாட்டி கூட கொஞ்சம் மனஸ்தாபம் வேற இருந்தது. வேற என்ன? பணமே உங்களுக்கு அனுப்ப மாட்டான். கை ஓட்டை. காசு தங்காது. நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே!"

"உண்மை தான் மாமா. கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேன். அம்மா ஜாடை மாடையா சொல்வா. ஆனா அப்பாவோட கடைசி நாட்கலள்ல மனஸ்தபம் எல்லாம் சரியாயிடுத்து என்பாள்."

பாகவதர் அப்பா சொன்னதை முழுசா கேட்ட மாதிரி தெரியல. தொடர்ந்து அவர் பாட்டுக்கு நிறைய பேசிக்கொண்டே இருந்தார்.

"ரொம்ப நல்லவன் சீனா. யார் எது கேட்டாலும் அள்ளிக்குடுத்துடுவான். ஆனால் ரொம்பக் கோபக்காரன். குடும்பத்துக்குன்னு ஒண்ணும் சேத்துக்கலை. பாவம் சீட்டுப்பழக்கம் அவனைக் கெடுத்துடுத்து.

ஆபீஸ் இல்லாத நேரம் எல்லாம் காசு வெச்சு ரம்மி ஆடுவான். அப்புறம் ஆபீஸ் நேரத்துலயும். பணம் அவன் கையில் நிக்கவே இல்லை. இதே பழக்கம் உள்ளவாளோட சேர்க்கை வேற. பாதிப்பேர் திருடங்கள். சீனாவை ஏமாத்தி பணம் வாங்கிண்டு திருப்பி கொடுக்க மாட்டாங்கள். அப்பாவப்பத்தி தப்பா சொல்லணும்னு சொல்லல. ஏதோ தோணித்து. சொல்றேன். "

"நீங்க பாட்டுக்கு சொல்லுங்கோ மாமா."

அப்ப சரி. நம்ம வீட்டுப் பக்கம் உள்ள சில நல்ல உண்மையான மனுஷா எல்லாம் உங்க அப்பா கிட்ட சொல்லிப் பார்த்தோம், சீட்டை விடச் சொல்லி. அவன் கேட்கிறதா இல்லை. நான் எது சொன்னாலும் அவனுக்கு கோபம் வர ஆரம்பித்த உடனே நான் விட்டுட்டேன். "

"அம்மாவும் சொல்லி இருக்கா. அவ கைல எப்பவும் பணம் இருக்காது என்று.
அப்பா பைசா அனுப்ப மாட்டார். அவரோட பூர்வீக கிராமத்தில் உள்ள நிறைய நஞ்சை நிலம் பெரிய வீடு எல்லாத்தையும் வித்து ஏதோ வேற நல்ல நிலமாக பாலக்காட்டில் வாங்குறேன்னு சொல்லிட்டு எல்லா பணத்தையும் தொலைச்சுட்டாராம்.

அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்து போயிட்டார்.அப்பா கடனை யெல்லாம் அம்மா தான் தனியா அடைச்சா.

நான் தம்பி ரெண்டு பேரும் டிகிரி முடிச்சு கஷ்டப்பட்டு நல்ல வேலையில் சேர்ந்து விட்டோம். கல்யாணமாகி இரண்டு குழந்தை இரண்டு பேருக்கும்.

இப்போ பண பிரச்சினை இல்லை. நல்லா இருக்கோம். உங்களுக்கு எங்க அம்மாவை ஞாபகம் இருக்கா? "

"ஒரு தடவை கல்பாத்திக்கு சீனா கூட்டிண்டு வந்திருக்கான்னு ஞாபகம்.
உங்கப்பா சீட்டுல லெட்சத்துக்கு மேல பணம் விட்டுட்டான். எங்கிட்ட இருந்து அப்பப்போ நிறைய பணம் வாங்கி இருக்கான்.
அவனால் பணத்தை திருப்பி கொடுக்க முடியல. வேலைக்கு லாங் லீவ் போட்டுட்டு மெட்ராஸ்க்கு போயிட்டான். அப்புறம் போயே போயிட்டான்."

"உங்களுக்கு நாங்க கடமைப்பட்டிருக்கிறோம். அப்பா உங்க கிட்ட வாங்கின பணம் எவ்வளவு சொல்லுங்க.கொடுத்துவிடுகிறேன்."

"சே!அதெல்லாம் பெரிய விஷயமா. பணம் அதிகம் தான்.ஆனா இதெல்லாம் ஒரு நல்ல சினேகிதனுக்கு நம்ம பண்றது தானே."

"இல்லை. எதேச்சையா நீங்க இன்று எங்க வீட்டுக்கு வந்ததால் தானே இதெல்லாம் தெரியறது. நாங்கள் ஏதாவது திரும்பி உங்களுக்கு செய்யணும்."

" என்னப்பா இது! நான் உன்கிட்ட சொல்லி இருக்கவே கூடாது. சரி,ஒன்ணு சொல்றேன் கேப்பியா?"

"ஆஹா!"


"நான் இப்போது ரொம்ப கச்சேரி பண்றதில்ல. பாடுவது இன்னிக்கி ரொம்ப சிரமமான தொழில். ரொம்ப பைசா வராது. அஞ்செட்டு கார் டிரைவர் எல்லாம் வச்சுக்க முடியாது கச்சேரியை எல்லாம் ரொம்ப குறைத்து ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றேன். மனை வீடு எல்லாம் விக்கிறேன்

இப்போ நங்கநல்லூர் என்று ஒரு இடம். பரங்கிமலைக்கு பக்கத்துல இருக்கு. அங்க பிளாட் நிறைய இருக்கு. வாங்கினாய்னா சீக்கிரம் பெரிய பணக்காரன் ஆவாய். நாலு கிரவுண்ட் வாங்கிக்கோ. ஒண்ணு அஞ்சாயிரம் ரூபாய் தான். "

"நானும் கேள்விப்பட்டேன் அங்கே இப்ப ஆயிரம், ரெண்டாயிரம் தானே விலை?" என்றாள் அம்மா

"அது எங்கேயாவது தண்ணி இல்லாத காடாக இருக்கும்மா. நான் சொல்றது மெயின் ரோடு பக்கம் பாலாறு தண்ணீர் வேற வந்துடும். "

தன் மனைகள் பற்றி ரொம்ப பெருமையா விஸ்தாரமா பேசினார் பாகவதர்.

"பத்தாயிரம் ரூபாய்க்கு நான் தம்பிட்ட பேசிட்டு தரேன். ரெண்டு கிரவுண்ட் வாங்கிக்கிறோம்.எங்களுக்கும் ஆளுக்கு ஒரு வீடு கட்டணும்னு ஆசை. பார்த்து வாங்கி கொடுங்கோ. உங்க ஆசீர்வாதத்தோடு எல்லாம் நல்லா நடக்கும்."என்றார் அப்பா.
"சரிப்பா! என்னால முடிஞ்சது பண்றேன்."

ஒரு அரதப் பழசான ஃபோர்டு காருடன் டிரைவர் வந்து நின்றான்.

"நான் கிளம்புறேன். மெக்கானிக் பிளை மௌத்தை எடுத்துப்பன். நாளைக்கு காத்தால கார்ல வரேன். பணம் ரெடியா வச்சுக்கறயா? கேஷ் தானே? அடுத்த வாரம் ரெண்டு கிரவுண்ட்டும் ரிஜிஸ்டர் பண்ணலாம். ஒன்ணு கார்னர் பிளாட் அடுத்தது, அது பக்கத்துல.சரியா? "

அம்மா, "எதுக்கும் கிரவுண்ட நேரா பார்த்துட்டு அப்புறமா.. "என்று ஆரம்பிக்க அப்பா அவளை கிஞ்சித்தும் மதிக்காமல் பாகவதரிடம் பேசினார்.

"நாளைக்கு மத்தியானம் தரட்டுமா?"

" அப்போ நாளை சாயந்திரம் வரேன்" என்று புன்னகையுடன் எழுந்தார் பாகவதர்.

வாசலில் கை ரிக்ஷா வந்து நிற்க, வண்டிக் காரருடன் சண்டை போட்டுக் கொண்டே இறங்கினாள் பாட்டி.
"லஸ்ல இருந்து இங்கு வர நாலணா கேக்கறான்டா இவன்."

வீட்டுக்குள் துணிப் பையுடன் பாட்டி நுழையும் போது சொன்னார் அப்பா.

" மாமா! அம்மாவே ஊர்ல இருந்து வந்துட்டா. அம்மா! இவரைத் தெரியலையா?"

கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்தாள். "தெரியலையே!"

"அப்பாவோட ஃப்ரெண்டும்மா! கல்பாத்தியில சேதுராம பாகவதர்!"

கையில் இருந்த பையைக் கீழே போட்ட பாட்டி பொங்கினாள். உடல் ஆடியது.

"இவர்தான்டா அந்த காலத்தில் நல்ல இடத்துல நிலம் வாங்கி தரேன்னு சொல்லி, உங்க அப்பா மனச கலைச்சு அவரோட எல்லா சொத்தையும் விக்க வைச்சு மொத்தமா லட்சம் ரூபாய்க்கு மேல அவர் கிட்ட ரசீது இல்லாமல் பணம் வாங்கிண்டு அவரை ஏமாத்திட்டார்.

உங்க அப்பா பணத்தை திருப்பி கேட்ட போது 'நீ எப்படா என்கிட்ட பணம் கொடுத்தாய்?' என்று ஒரேடியா சொல்லிட்டார். காறித் துப்பி விட்டு வந்து விட்டார் உங்க அப்பா. அப்பாவே கடைசில இதை என்கிட்ட சொன்னார். முதல்ல வெளியே அனுப்பு இவரை. இவர் காத்தே இங்க படக்கூடாது." என்றாள்.

பாகவதர் பாட்டியின் பேச்சுக்கும், தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதது போல் அலட்சிய புன்னகையுடன் நிதானமாக வீட்டுக்கு வெளியே நடந்தார்.

காரில் அமர்ந்து கையை வெளியே நீட்டி சிரித்துக் கொண்டே எங்களைப் பார்த்து டாட்டா காட்டினார். கார் கிளம்பியது.

அப்புறம் பாகவதர் பற்றி நான் கேள்விப்படவே இல்லை.