தொடர்கள்
ஆன்மீகம்
நட்சத்திரக் கோயில்கள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Star temples..!!

நாம் ஒவ்வொருவரும் 27 நட்சத்திரத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில், ராசியில் தான் பிறந்திருப்போம். ஒரே நட்சத்திரம், ராசியாக இருந்தாலும் கூட அவர்கள் அனைவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைந்து விடுவது கிடையாது. அவரவர் பிறந்த நேரம், தேதி, லக்கினத்தின் அடிப்படையில் அவரின் குணாதிசயங்கள், வாழ்க்கை ஆகியன மாறுபடும். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் அதற்குரிய கோயில்களுக்குச் சென்று வருவதால் அவர்களுக்கு அதிர்ஷ்டமும், நன்மைகளும் மேன்மேலும் பெருகும். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பல யுகங்களும் வரலாறு சிறப்பும் கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளுடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன. இவையெல்லாவற்றையும் விடச் சிறப்பு என்னவென்றால் அந்தந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள், சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றன.

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

அஸ்வினி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோயில் திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

பரணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த கோயில் மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாகக் காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

கார்த்திகை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

ரோகிணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில் பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில். இந்த கோயில் காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருகஷீரிஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில் ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில். இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

திருவாதிரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில் அபய வரதீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள பட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த கோயிலை அடையலாம்.

புனர்பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில் அதிதீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். இந்த கோயில் பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.

ஆயில்யம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

மகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில்,மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில். இந்த கோயில் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது. குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

சித்திரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவில். இந்த கோயில் மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டரை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், முகத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த கோயில் மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டைச் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோயிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.

அனுஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த கோயில் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

கேட்டை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், வரதராஜப்பெருமாள் திருக்கோயில். இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த கோயில் சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த கோயில் தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில். இந்த கோயில் வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் எனக் கேட்டுச் செல்லவும்.

அவிட்டம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

சதயம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

பூரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், திருவானேஷ்வர் திருக்கோயில். இந்த கோயில் திருவையாற்றிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது.

ரேவதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோயில், கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.

அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரியக் கோயில்களுக்கு நம்பிக்கையுடன் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலனைத் தரும். நம்மால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வர, வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் உண்டாகும்..!!